அருள்மிகு கோடிக்குழகர்(அமுதகடேஸ்வரர்) திருக்கோயில், கோடியக்காடு

அருள்மிகு கோடிக்குழகர்(அமுதகடேஸ்வரர்) திருக்கோயில், கோடியக்காடு, நாகப்பட்டினம் மாவட்டம்.

+91 – 4369 272 470 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் அமுதகடேஸ்வரர், குழகேஸ்வரர்
அம்மன் அஞ்சனாட்சி, மைத்தடங்கண்ணி
தல விருட்சம் குராமரம்
தீர்த்தம் அக்னி தீர்த்தம், அமுதக்கிணறு
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருக்கோடி, திருக்கோடிக்குழகர், குழகர் கோயில்
ஊர் கோடியக்காடு
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருஞானசம்பந்தர், சுந்தரர்

மிகவும் பழமையானது இந்தக்கோயில். இராமபிரான் இலங்கைக்கு செல்லும் முன்பு இங்கு வந்தார். இவ்வூரிலிருந்து கடல் வழியே மிகக் குறுகிய தூரத்தில் இலங்கை இருக்கிறது. எனவே, இங்கிருந்து பாலம் அமைத்து இலங்கைக்குச் செல்ல ஏற்பாடு செய்தான் சுக்ரீவன். ஆனால், இராமன் இங்கு பாலம் அமைக்க மறுத்துவிட்டார். இலங்கையின் பின்பக்கமாக கோடியக்காடு அமைந்துவிட்டதால், இராமபிரான் பின்பக்கமாக சென்று ராவணனைத் தாக்குவது தனக்கு பெருமை தராது எனக் கருதி, இலங்கையின் முன்பக்கமுள்ள தனுஷ்கோடிக்கு சென்றுவிட்டார். அவர் இங்கு வருகை தந்ததை நினைவுபடுத்தும் வகையில் இராமர் பாதம் அமைக்கப்பட்டுள்ளது. இராமன் இலங்கை செல்லும்போது இங்குள்ள சிவபெருமானை வணங்கினார். இவருக்கு அமிர்தகடேஸ்வரர்என்ற பெயரும் உண்டு.

திருப்பாற்கடலில் அமுதம் கடையும்போது அசுரர்கள் சூறாவளியை ஏற்படுத்தினர். அமுத பாத்திரத்தை ஏந்திச் சென்ற வாயுபகவான் அந்த சூறாவளியை அடக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது அமுதம் சிறிதளவு சிந்தியது. அதை முருகப்பெருமான் ஒரு கலசத்தில் ஏந்திக்கொண்டார். அந்த கலசத்துடன் அவர் காட்சி தருகிறார். இவரை வணங்குவோருக்கு ஆயுள்விருத்தி ஏற்படும். இங்கே சுவாமியை விட முருகனுக்கே முக்கியத்துவம். அருணகிரிநாதர் திருப்புகழில் இவ்வூர் சுப்பிரமணிய சுவாமியை புகழ்ந்து பாடியுள்ளார். மிகவும் பழமையான இந்தக்கோயிலில் அம்பாள் மையார்தடங்கண்ணி அழகுபொங்க காட்சி தருகிறாள். இக்கோயிலில் மற்றொரு வித்தியாசமான அம்சம் நவக்கிரகங்கள் நேர்கோட்டில் நின்று, சுவாமி அம்பாள் திருமணக் காட்சியைக் காண்பதாகும். கோடியக்காடு காட்டுப்பகுதி என்பதால், மக்களின் பாதுகாப்பிற்காக காடு கிழாள்என்ற வனதேவதையும் இந்த கோயிலில் அருள்பாலிக்கிறாள். கோஷ்டத்தில் பிரம்மா, துர்க்கா, இலிங்கோத்பவர் உள்ளனர். பிரகாரத்தில் கணபதி இலிங்கம் இருக்கிறது.

தேவாரப்பதிகம்:

கடிதாய்க் கடற்காற்று வந்து எற்றக்கரைமேல் குடிதான் அயலே இருந்தால் குற்றமாமோ கொடியேன் கண்கள் கண்டன கோடிக் குழகீர் அடிகேள் உமக்கு ஆர்துணையாக இருந்தீரே.

திருஞான சம்பந்தர்

திருவிழா:

இவ்வூர் அமிர்தகடசுப்பிரமணியருக்கு வைகாசி விசாகத்தில் பத்துநாள் விழா, சஷ்டியில் ஆறு நாள் விழா நடக்கிறது.

பிரார்த்தனை:

திருமணத்தடை நீங்க, குழந்தைச் செல்வம் பெற, கல்வியில் சிறந்து விளங்க, இறைவனை வேண்டிக்கொள்ளலாம்.

நேர்த்திக்கடன்;

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *