அருள்மிகு வலம்புரநாதர் திருக்கோயில், மேலப்பெரும்பள்ளம்

அருள்மிகு வலம்புரநாதர் திருக்கோயில், மேலப்பெரும்பள்ளம், (திருவலம்புரம்), தரங்கம்பாடி தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டம்.

+91- 4364 – 200 890, 200 685 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வலம்புர நாதர்
உற்சவர் சந்திரசேகரர், பத்மநாயகி
அம்மன் வடுவகிர்கண்ணி
தல விருட்சம் ஆண்பனை
தீர்த்தம் பிரம்ம தீர்த்தம், லட்சுமி தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம்
ஆகமம்/பூஜை சிவாகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருவலம்புரம்
ஊர் மேலப்பெரும்பள்ளம்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் அப்பர், சம்பந்தர், சுந்தரர்

காசி மன்னன் ஒருவன் தன் மனைவி கற்புடையவளா என்பதை சோதிக்க நினைத்தான். ஒரு முறை மன்னனும் அமைச்சர்களும் காட்டிற்கு வேட்டையாட சென்றனர். அப்போது மன்னன், தன் அமைச்சரிடம்,”மன்னர் காட்டிற்கு வேட்டையாட சென்ற போது புலி அடித்து இறந்து விட்டார்என்ற பொய்யை அரசியிடம் கூறும்படி உத்தரவிட்டார். அமைச்சரும் அதன் படி கூற, அரசி இச்செய்தி கேட்டவுடனேயே உயிரை விட்டாள். இந்த பொய் செய்தி கூறியதால் மன்னனுக்கு பிரம்மகத்தி தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷம் நீங்க மன்னன் சான்றோர்களிடம் விவாதித்தான். அதற்கு அவர்கள்,”மன்னா! திருவலம்புர திருத்தலத்தில் தினமும் 1000 அந்தணர்களுக்கு அன்னதானம் வழங்கினால் தோஷம் விலகும்என்றனர். மன்னனும் அதன்படி செய்து வந்தான். ஒரு முறை அன்னதானம் நடந்து கொண்டிருந்த போது, அசரீரி தோன்றி,”அன்னதானம் நடக்கும் இக்கோயிலில் நீண்ட காலமாக ஒலிக்காத மணி, தானே ஒலிக்கும். அப்போது மன்னனின் தோஷம் விலகும்எனக் கூறியது. அன்னதானம் தொடர்ந்து நடந்து வந்தது. பட்டினத்தார் ஒரு முறை இக்கோயிலுக்கு அன்னதானம் நடக்கும் நேரம் வந்தார். பசியோடு இருந்த அவர், மடப்பள்ளியில் இருந்தவரிடம் தனக்கு உணவு தருமாறு கேட்டார். அவர் உணவு தர மறுக்கவே, மடப்பள்ளியின் பின் பக்கம் வழிந்தோடும் கஞ்சியை இருகைகளால் அள்ளி குடித்து பசியாறியதாகவும், உடனே இதுநாள் அடிக்காமல் இருந்த மணியானது தானே ஒலிக்க ஆரம்பித்ததாகவும் தல வரலாறு கூறுகிறது. அன்னதானமே இன்னும் ஆரம்பிக்க வில்லை, அதற்குள் மணி ஒலித்து விட்டதே என அனைவரும் ஆச்சரியமடைந்து போய் பார்த்தபோது அங்கே பட்டினத்தடிகளை அனைவரும் தரிசித்தனர். உடனே மன்னனின் தோஷம் விலகியது. இதற்கான திருவிழா இப்போதும் சிறப்பாக நடைபெறுகிறது.

திருமால் சிவனைக்குறித்து தவம் செய்யப் போனபோது, திருமகளை இத்தலத்து அம்பிகையின் தோழியாக விட்டு சென்றார். தவத்தின் பலனாக சக்ராயுதமும், கதையும் பெற்றார். அதன் பின் இங்கு வந்து, அம்மனை வணங்கி சங்கும், பத்மமும் பெற்றார் என் தல வரலாறு கூறுகிறது. ஏரண்ட மகரிஷி திருவலஞ்சுழி காவிரியில் இறங்கி வலமாக வந்து இவ்வூரில் கரையேறினார். அதனால் இத்தலம் திருவலம்புரம்ஆனது. அவரது ஜீவ சமாதி இங்கு தனி கோயிலாக உள்ளது. சம்பந்தருடன் திருநாவுக்கரசர் பல தலங்கள் சென்று வழிபட்ட போது, சிவபெருமான் இத்தலத்தில் திருநாவுக்கரசரை அழைத்து காட்சி கொடுத்துள்ளார். மூலவர் பிரிதிவி சுயம்பு இலிங்கம். இங்குள்ள இலிங்கத்தின் மேல் பகுதியில் ஒரு கை நுழையும் அளவிற்கு இரு பள்ளங்கள் உள்ளது. எனவே இலிங்கத்திற்கு சாம்பிராணித்தைலம், புனுகுசட்டம் சாத்தப்படுகிறது. அபிஷேகத்தின் போது குவளை சாற்றப்படுகிறது. இதனால் இத்தலம் மேலப்பெரும்பள்ளம்ஆனது.

மகத நாட்டு மன்னன் தனஞ்செயன், தன் மகனிடம், “நான் இறந்த பிறகு எனது அஸ்தி எங்கு மலராக மாறுகிறதோ, அங்கு அஸ்தியை கரைத்து விடுஎன்ற கூறிவிட்டு மறைந்தான். அதன்படி மைந்தன் பல தலங்களுக்கும் சென்றான். இறுதியில் இத்தலம் வந்ததும் அஸ்தி மலராக ஆனது. தந்தையின் ஆசைப்படி இத்தலத்தில் அஸ்தியை கரைத்து விட்டான். எனவே இத்தலத்தை காசியை விட புனிதமானது என புராணங்கள் கூறுகிறது. தட்சனும் அவனது மனைவியும், தங்கள் மகளாக தாட்சாயிணி பிறக்க வேண்டும் என இத்தலத்தில் வேண்டியதாக கூறப்படுகிறது. இத்தலத்தில் உள்ள பிட்சாடனர் பேரழகுடன் இருப்பவர். இதை அர்த்தநாரீஸ்வர பிட்சாடனர்என்பர். இவரை வட்டணை நாயகர்என்றழைகிறார்கள்.

கோயில் மாடக்கோயில் அமைப்பையுடையது. எதிரில் உள்ள தீர்த்தக்கரையில் வினாயகர் உள்ளார். அருகே ஏரண்ட முனிவர் உருவமும் அவர் வழிபட்ட இலிங்கமும் உள்ளது. கிழக்கு நோக்கிய கோயில். உட்பிரகாரத்தில் சூரியன், வினாயகர், நால்வர், விஸ்வநாதர், முருகன், ராமநாதர், கஜலட்சுமி சன்னிதிகள் உள்ளன. அம்பாள் சன்னிதி மகாமண்டபத்தில் தெற்கு நோக்கியுள்ளது. கருவறை சிற்ப வேலைப்பாடுடையது. நடராஜ சபை அழகாக உள்ளது. இத்தல விநாயகர் வல்லப விநாயகர் எனப்படுகிறார். மாடக்கோயில் எதிரில் உள்ள தீர்த்தக்கரையில் விநாயகர் வீற்றிருக்கிறார். இங்கு தலப்பதிகக் கல்வெட்டு உள்ளது.

தேவாரப்பதிகம்:

கொடியுடைய மும்மத லூடுருவக் குனிவெஞ்சிலை தாங்கி இடிபடி வெய்த வமரர்பிரா னடியா ரிசைந் தேத்தத் துடியிடை யாளையொர் பாகமாகத் துதைந்தவ ரிடம்போலும் வடிவுடை மேதி வயல்படியும் வலம்புர நன்னகரே.

சம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 44வது தலம்.

திருவிழா:

தை பரணியில் பிட்சாடணர் திருவிழா. பங்குனி உத்திரம், கார்த்திகை சோமவாரம், விநாயகர் சதுர்த்தி, ஆடிப்பூரம், தை, ஆடி, மகாளய அமாவாசை, திருவாதிரை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

பிரார்த்தனை:

புத்திர பாக்கியம் இல்லாதவர்கள், தோல்வியாதி உள்ளவர்கள், ஸ்ரீஹத்தி(பெண்ணால் ஏற்படக்கூடியது) தோஷம் உள்ளவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள், சப்த நாகதோஷம் உள்ளவர்கள் அவை நீங்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் இங்கு வந்து மணியடித்து அன்னதானம் செய்து வழிபாடு செய்கின்றனர்.

வழிகாட்டி:

மயிலாடுதுறையிலிருந்து பூம்புகாருக்குச் செல்லும் வழியில் காவிரி கடைமுக அணையை அடைந்து அங்கிருந்தும், சீர்காழி பூம்புகார் சாலையில் மேலையூரை அடைந்து அங்கிருந்தும் இத்தலத்தை அடையலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *