அருள்மிகு வைகல்நாதர் திருக்கோயில், வைகல் மாடக்கோயில், ஆடுதுறை

அருள்மிகு வைகல்நாதர் திருக்கோயில், வைகல் மாடக்கோயில், ஆடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டம்.

+91- 435 – 246 5616 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வைகல்நாதர் (செண்பகாரண்யேஸ்வரர்)
அம்மன் கொம்பியல்கோதை (சாகா கோமளவல்லி)
தல விருட்சம் செண்பகம்
தீர்த்தம் செண்பக தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் வைகல்மாடக்கோயில்
ஊர் திருவைகல்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர்

முன்னொரு காலத்தில் பூமி தேவி, தன்னை விரும்பி மணம் செய்து கொள்ளுமாறு திருமாலை வேண்டினாள். இவளது வேண்டுகோளை ஏற்ற பெருமாள், பூமிதேவியைத் திருமணம் செய்து கொண்டார். இதனால் மகாலட்சுமிக்கு பெருமாள் மீதுகோபம் ஏற்பட்டது. எனவே இலட்சுமி தேவி செண்பகவனம் எனும் இத்தலத்தை அடைந்து கடும் தவம் செய்தாள். பெருமாளும், பூமி தேவியும் பிரிந்து போன இலட்சுமியை காண இத்தலம் வந்தனர். இவர்களை தேடி வந்த பிரம்மனும் இத்தல இறைவனை வழிபட்டார். சிவனின் திருவருளால் பெருமாள், இலட்சுமி, பூமாதேவி இருவரையும் மனைவியராகப்பெற்றார்.

கோச்செங்கண்ணன் கட்டிய மாடக்கோயிலில் இதுவும் ஒன்று. வைகல் என்ற ஊரில் கட்டப்பட்ட மாடக்கோயிலாக விளங்குவதால் வைகல் மாடக்கோயில்ஆனது. இவ்வூரில் சிவனது மூன்று கண்ணைப்போல் மூன்று கோயில் உள்ளன. வலக்கண்ணாக விசாலாட்சி உடனாகிய விஸ்வநாதர் கோயில், இடக்கண்ணாக பெரியநாயகி உடனுறை பிரமபுரீஸ்வரர் கோயில், நெற்றிக்கண்ணாக கொம்பியல் கோதை உடனாகிய வைகல் நாதர் திருக்கோயில். இந்த மூன்று திருக்கோயிலுமே பிரம்மா, விஷ்ணு, லட்சுமி, அகத்தியர் ஆகியோர் வழிபட்ட தலமாகும்.

தன் குட்டியை தேடி வருந்திய யானை, இங்கிருந்த ஈசல் புற்றைத் தனது காலால் மிதித்து சேதப்படுத்தியது. தன் புற்றிணை மிதித்து அழித்த யானையின் உடலை ஈசல்கள் கடித்து கொன்றன. தங்கள் தவறை உணர்ந்த யானைக்குட்டியும், ஈசலும் இத்தல இறைவனை வழிபட்டு அருள் பெற்றன என புராணம் கூறுகிறது.

பாடல்பெற்ற பெருமை உடைய இக்கோயில், தற்போது மிகவும் சிதிலமடைந்து உள்ளது. பாதுகாப்பும், வசதியும் அற்று கோயில் பொலிவு குறைந்து காணப்படுகிறது. ஒருகால வழிபாடு சிவாசாரியாரின் உள்ளத்து ஆர்வத்தால் நடைபெறுகிறது. கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் தங்களால் இயன்ற பொருளுதவி அளித்து கோயில் நிலையை உயர்த்தினால் நல்லது.

தேவாரப்பதிகம்:

மாலவன் மலரவன் தேடி மால்கொள மாலெரி யாகிய வரதர் வைகிடம் மாலைகொ டணிமறை வாணர் வைகலில் மாலன மணியணி மாடக் கோயிலே.

திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 33வது தலம்.

திருவிழா:

மாசி சிவராத்திரி, புரட்டாசி நவராத்திரி, ஐப்பசி அன்னபிஷேகம். சிவனுக்குரிய அனைத்து திருவிழாவும் சிறப்பாக நடக்கிறது.

பிரார்த்தனை:

கேட்டதெல்லாம் (நியாயமானவற்றை)கொடுக்கும் இறைவன்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும், தினசரி பூஜைக்கு தங்களால் இயன்ற பொருளுதவி அளிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *