அருள்மிகு அமிர்தகலசநாதர் திருக்கோயில், சாக்கோட்டை

அருள்மிகு அமிர்தகலசநாதர் திருக்கோயில், சாக்கோட்டை (திருக்கலயநல்லூர்), கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.

+91- 435-2414 453, 98653 06840 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 10 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் அமிர்தகடேஸ்வரர், அமிர்தகலசநாதர்
உற்சவர் அமிர்தகலசநாதர்
அம்மன் அமிர்தவல்லி
தல விருட்சம் வன்னி
தீர்த்தம் நால்வேத தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருக்கலயநல்லூர்
ஊர் சிவபுரம், சாக்கோட்டை
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் சுந்தரர்

காஞ்சிபுரம் அருகே சங்கமங்கையில் மார்கழி மாதம் பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர் சாக்கியநாயனார். இவர் சிவனிடமும் அவரது அடியார்களிடமும் மிகவும் அன்பு கொண்டிருந்தார். பிறவிப்பெருங்கடலை கடக்க சிவநெறியே உயர்ந்தது என்பதை உணர்ந்தார். சாக்கியர் கோலத்தில் இருந்தாலும் எப்போதும் மனதில் சிவ சிந்தனையுடன், யாரும் அறியாமல் சிவபூஜையும் செய்து வந்தார். எப்போதும் சிவபூஜை முடித்த பின்பு தான் சாப்பிடும் வழக்கம் கொண்டிருந்த இவர், ஒரு நாள் வெளியே சென்றார். வழியில் ஒரு இலிங்கம் வழிபாடு ஏதும் இன்றி இருப்பதைக்கண்டு மனம் வருந்தினார். இலிங்கத்தை நீராட்டி, மலர் போட்டு, பூஜை செய்ய ஆசைப்பட்டார். ஆனால் அந்த இடத்தில் எதுவும் இல்லை. இவரது நல்ல மனம் மட்டுமே இருந்தது. சிவனின் மீது கொண்ட அன்பால் அருகே கிடந்த சிறு கல்லை எடுத்து நமசிவாயமந்திரத்தை உச்சரித்து இலிங்கத்தின் மீது போட்டார். இவரது அன்பால் கட்டுப்பட்ட இறைவன், வீசிய கல்லை மலராக ஏற்றுக்கொண்டார். இதே போல் தினமும் இலிங்கத்தின் மீது கல்லெறிந்து வழிபாடு செய்து அதன் பின் உணவருந்தி வந்தார். இவர் சாக்கியர் கோலத்தில் இருந்ததால், பார்ப்பவர்களுக்கு இவர் சிவன் மீது கோபத்தில் கல் எறிகிறார் என நினைத்தார்கள். ஆனால் சிவன் ஒருவருக்கு மட்டும்தான் அன்பால் செய்கிறார் என்பது புரியும். இந்நிலையில் ஒருநாள் சாக்கியநாயனார், சிவ சிந்தனையிலேயே மூழ்கியிருந்ததால், சிவபூஜை செய்யாமல் சாப்பிட அமர்ந்தார். திடீரென நினைவு வந்ததும், தான் எவ்வளவு பெரிய சிவத்துரோகம் செய்துவிட்டோம் என வருந்தி ஓடி சென்று, கல் எறிந்து சிவபூஜை செய்தார். சிவபக்தியுடன் இவர் எறிந்த கல் கயிலையில் பார்வதியுடன் அமர்ந்திருந்த சிவனின் பாதத்தில் பொன்மலராக விழுந்தது. மகிழ்ந்த இறைவன் பார்வதிதேவியுடன் இவருக்கு காட்சி கொடுத்து நாயன்மார்களில் ஒருவராக்கினார். சாக்கிய நாயனார் வழிபட்ட தலமாதலால் சாக்கோட்டை எனப்பட்டது.

உலகம் அழியும் காலத்தில் உயிர்கள் அடங்கிய கலசம் இங்கு தங்கியது என்றும், அதனால் இத்தலம் கலயநல்லூர்ஆனது என்றும் தலபுராணம் கூறுகிறது. பிரம்மா இத்தல இறைவனை வழிபட்டுள்ளார்.

அம்மனின் தவத்தை மெச்சிய இறைவன், அவளுக்கு வரம் கொடுத்து திருமணம் செய்து கொண்ட தலம். அம்மன் தவம் செய்யும் காட்சி புடைப்புச்சிற்பமாக உள்ளது. இங்குள்ள தக்ஷிணாமூர்த்தி அதிசயமான அமைப்பை உடையது. இத்திருமேனி வலது மேற்கையில் ருத்ராக்ஷ மாலையும், இடது மேற்கையில் அக்கினியும், வலக்கையில் சின்முத்திரையும், இடக்கையில் சுவடியும், தலைமுடி சூரியஒளிவட்டம் போலவும் அமைப்புடையதாக உள்ளது. லிங்கோற்பவர் பச்சைக்கல்லால் ஆனது. பாதத்தில் திருமால் மகுடமணிந்த வராகமாகவும் மேலே அன்னமும் பக்கத்தில் பிரம்மனும் வணங்கி நிற்கின்றனர். இவைதவிர இங்குள்ள தபஸ்வியம்மன் மற்றும் அர்த்தனாரீஸ்வரர் சிற்பங்கள் சிறப்பு வாய்ந்தன அர்த்தநாரீஸ்வரர் தன் வலது காலை ஓய்வாக நிறுத்தியுள்ளார். அம்மன் அமிர்தவல்லி இறைவனை நோக்கி நின்று திரும்பியுள்ள காட்சி சிறப்பு.

ராஜ கோபுரம் 3 நிலைகள் கொண்டது. நாயக்கர் கால செங்கல் மண்டபம் ஒன்று உள்ளது. சுயம்பு மூர்த்தி. கிழக்கு நோக்கிய சந்நிதி, முன்புறம் மதிலும் வாயிலும் உள்ளன. அடுத்து மூன்றுநிலை கோபுரம், நாய்க்கர் காலச் செங்கல் மண்டபம் உள்ளது.

இதன் வடக்கு பகுதியில் அம்பாள்கோயில் தெற்குநோக்கியுள்ளது. மகாமண்டப வாயிலில் வடபால் சிறிய தண்டபாணியும் தென்பால் நர்த்தன விநாயகரும் உள்ளனர். முன் மண்டபத்தில் நந்தி பலி பீடம் உள்ளது. ஒரே கல்லில் உள்ள ஸப்த மாதர் சிற்பம் தரிசிக்கத்தக்கது.

தேவாரப்பதிகம்:

இண்டைமலர் கொண்டுமணல் இலிங்கமது இயற்றி இனத்தாவின் பாலாட்ட இடறியதா தையைத்தாள் துண்டமிடு சண்டியடி யண்டர்தொழு தேத்தத் தொடர்ந்தவனைப் பணிகொண்ட விடங்கனதூர் வினவில் மண்டபமும் கோபுரமும் மாளிகை சூளிகையும் மறையொலியும் விழவொலியும் மறுகுநிறை வெய்திக் கண்டவர்கண் மனம்கவரும் புண்டரிகப் பொய்கைக் காரிகையார் குடைந்தாடும் கலயநல்லூர் காணே.

சுந்தரர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 68வது தலம்.

திருவிழா:

மகா சிவராத்திரி, மாசி மகம், மார்கழி திருவாதிரை.

பிரார்த்தனை:

நியாயமாக வேண்டியதை எல்லாம் கொடுக்கும் இறைவன்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

வழிகாட்டி:

கும்பகோணத்திலிருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் குடந்தையிலிருந்து 5 கீ மீ தொலைவில் உள்ளது. சாலையோரத்திலிருந்தே கோயில் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *