அருள்மிகு சிவானந்தேஸ்வரர் திருக்கோயில், திருப்பந்துறை

அருள்மிகு சிவானந்தேஸ்வரர் திருக்கோயில், திருப்பந்துறை, நாச்சியார் கோவில் போஸ்ட், கும்பகோணம் தாலுகா தஞ்சாவூர் மாவட்டம்.

+91- 435-244 8138, 94436 50826 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சிவானந்தேஸ்வரர், பிரணவேஸ்வரர்
உற்சவர் பிரணவேஸ்வரர்
அம்மன் மங்களாம்பிகை
தல விருட்சம் வன்னி
தீர்த்தம் மங்கள தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருப்பேணு பெருந்துறை
ஊர் திருப்பந்துறை
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் சம்பந்தர்

ஒரு முறை முருகப்பெருமான், படைப்பின் நாயகனான பிரம்மனிடம் ஓம்எனும் பிரணவ மந்திரத்தின் பொருள் கேட்டார். பிரம்மா அதன் பதில் தெரியாமல் விழித்தார். அர்த்தம் தெரிந்த முருகன், பிரம்மனை திட்டியதோடு சிறையிலும் அடைத்து விட்டார். படைப்புத்தொழில் பாதித்தது. சிவன் இதை கண்டித்தார். அதற்கு முருகன், ஓம் எனும் அர்த்தம் தெரிந்து கொண்டு பின் பிரம்மா படைப்புத்தொழிலை ஆரம்பிக்கட்டும் என்றார். முதலில் எனக்கு அர்த்தம் கூறு என்றார் சிவன். சிவன் மண்டியிட்டு, வாய் பொத்தி நிற்க, அவரது காதில் பிரணவ மந்திரத்தின் பொருளை கூறினார் முருகன். தந்தைக்கே உபதேசம் செய்த இந்த நிகழ்ச்சி சுவாமி மலையில் நடந்தது. பிரம்மனை சிறையிலடைத்ததும், சிவனுக்கு உபதேசம் செய்துவிட்டதும் முருகனுக்கு அகங்காரத்தை ஏற்படுத்தியது. இதனால் கோபம் கொண்ட சிவன் முருகனை ஊமையாக்கிவிட்டார். வருந்திய முருகன், தனக்கு பேச்சு கிடைப்பதற்காக திருப்பந்துறையில் சிவலிங்கம் அமைத்து, பூஜை செய்து தவத்தில் ஈடுபட்டார். முருகனது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் பேசும் திறனை கொடுத்தருளினார். இதனால் இத்தல இறைவன் பிரணவேஸ்வரர்ஆனார். இங்கு முருகன் தான் சிறப்புக்குரியவர். சுவாமி சன்னதியின் முன்பு தண்டாயுதபாணி சிலை அமைக்கப்பட்டுள்ளது. இவர் சின்முத்திரையுடன் கண்மூடி நின்ற நிலையில் தியான கோலத்தில், தலையில் குடுமியுடன் நிற்கிறார். காது நீளமாக வளர்ந்துள்ளது. கோபுர விமானத்தில் அர்த்தநாரீஸ்வரர், தெட்சிணாமூர்த்தியும், வீணா தெட்சிணாமூர்த்தியும் உள்ளனர். கோயிலின் வாசலில் குக விநாயகரும், சாட்சி விநாயகரும் ஒரே சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். முருகன் சுவாமிமலையிலிருந்து இத்தலத்திற்கு தவமிருக்க வந்தபோது, பாதுகாப்பிற்காக விநாயகர் இரட்டை வடிவெடுத்து வந்ததாகவும், பின் இங்கேயே தங்கிவிட்டதாகவும் கூறுவர். பிரமன், உமாதேவி, முருகன் ஆகியோர் வழிபட்ட சிறப்புடையது. கிழக்கு நோக்கிய சிறிய ராஜகோபுரம். கொடிமரம் நந்தி பலிபீடம் உள்ளன. பிராகாரத்தில் விநாயகர், நால்வர், சோழ மன்னன் மனைவி ஆகியோர் உள்ளனர். உள்சுற்றில் விநாயகர், மருகன், கஜலட்சுமி, நவக்கிரக சந்நிதிகள், சுவாமி சந்நிதியில் பழைமையான முருகப் பெருமான் உருவமுள்ளது.

தேவாரப்பதிகம்:

நிலனொடுவானும் நீரொடுதீயும் வாயுவும் ஆகியோர் ஐந்து புவனொடுவென்று பொய்ம்மைகள் தீர்ந்த புண்ணியர் வெண்பொடிப்பூசி நலனொடு தீங்கும் தானலதின்றி நன்கெழு சிந்தையராகி மலனொடுமாக மில்லவர்வாழும் மல்கு பெருந்துறையாரே.

திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 64வது தலம்.

திருவிழா:

முருகனுக்குரிய தைப்பூசம், வைகாசி விசாகம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

பிரார்த்தனை:

வாய்பேசமுடியாதவர்கள், திக்கு வாய் உள்ளவர்கள் கோயில் எதிரே உள்ள மங்கள தீர்த்தத்தில் நீராடி, முருகனுக்கு 45 நாட்கள் தேனபிஷேகம் செய்து, சிவனுக்கு அர்ச்சனை செய்தால் விரைவில் பேச்சு வரும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *