அருள்மிகு முல்லைவனநாதர் திருக்கோயில், திருக்கருகாவூர்

அருள்மிகு முல்லைவனநாதர் திருக்கோயில், திருக்கருகாவூர், தஞ்சாவூர் மாவட்டம்.

+91- 97891 60819,04374 -273 502, 273 423 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் முல்லைவனநாதர்
அம்மன் கருகாத்தநாயகி
தல விருட்சம் முல்லை
தீர்த்தம் பால்குளம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் கருகாவூர், திருக்களாவூர்
ஊர் திருக்கருகாவூர்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்

ஒரு காலத்தில் இந்த இடம் முல்லைக் காடாக இருந்தது. நித்துருவர், வேதிகை என்ற தம்பதியர் தங்களுக்கு குழந்தை இல்லாத குறையினால் முல்லைவனத்து நாதனையும், இறைவியையும் வணங்கி, குழந்தை பேறு தரும்படி வழிபட்டனர். இதனையடுத்து வேதிகை கருவுற்றாள். வேதிகை கருவுற்றிருந்தபோது கணவர் வெளியில் சென்றிருந்த சமயம் இடுப்பு வலி வந்துவிட்டது. அச்சமயம் ஊர்த்துவபாதர் என்ற முனிவர் வந்து பிச்சை கேட்டார். மயக்கமடைந்து இருந்ததால் வேதிகையால் முனிவருக்கு பிச்சையிட முடியவில்லை. அது அறியாத முனிவர் சாபமிட வேதிகையின் கரு கலைந்தது. வேதிகை அம்பாளிடம் பிரார்த்தனை செய்து முறையிட அம்பாள் தோன்றி கலைந்த கருவை ஒரு குடத்துள் ஆவாகனம் செய்து, குழந்தை உருவாகும் நாள் வரையிலும் வைத்துக் காப்பாற்றி, குழந்தையாகக் கொடுத்தாள். பெருமானின் கட்டளைப்படி காமதேனுவே தன் பாலை சுரந்து அளித்தது. பின்னர் வந்த நிருத்துவர் இவ்வரிய நிகழ்ச்சியினை அறிந்து மகிழ்வெய்தி இத்தலத்து வசிக்கும் மற்றும் இத்தலத்து பெருமானையும், பெருமாட்டியையும் வேண்டி நிற்கும் கருவுற்ற பெண்களுக்கு எந்த இன்னலும் இல்லாமல் குழந்தைப்பேறு ஏற்பட வேண்டுமென்று வேண்டிக்கொண்டார். அவ்வாரே ஈசனையும், அம்பிகையையும் வேண்டும் பெண்களுக்கு எந்த கருக்காலத்து இன்னல்களும் வருவதில்லை என்று தலவரலாறு கூறுகிறது.

படைப்புத் தொழிலினை மேற்கொண்டதால், பிரம்மன் ஆணவம் கொள்ள, அதனால் அது கைகூடாது போயிற்று . அதனால் பிரம்மன் இத்தலத்திற்கு வந்து, தென்மேற்கு மூலையில் தன் பெயரால் ஒரு தீர்த்தத்தை நிறுவி, முல்லைவனநாதரைப் பூஜித்து தன் தொழில் மீண்டும் கைகூடப் பெற்றான்.

சுவர்ணாகரன் என்னும் வைசியன் தான் செய்த தீ வினையால் பேயுருக் கொண்டான்.

பின்பு கார்க்கியர் என்னும் முனிவரிடம் புகலடைந்தான். அவர் அவனை, திருவாதிரை நன்னாளில் இங்கு அழைத்து வந்து பிரம்ம தீர்த்தத்தில் நீராடச் செய்யவே, அவன் தன் பேயுரு நீங்கி, மனிதன் ஆனான். முனிவரும் முல்லைக்கொடியின் கீழிருந்த பெருமானுக்கு ஒரு ஆலயம் அமைத்தார்.

தம்பால் புகல் அடைந்த முனிவர்கள் செய்த சூழ்ச்சியின் காரணமாக கௌதம முனிவர் பசுவதை செய்த பாவத்திற்கு ஆளானார். அவ்வமயம் போதாயனர் என்ற முனிவரின் உரைப்படி கௌதமர் இத்தலத்திற்கு வந்து புனித நீரடி ஒரு இலிங்கம் செய்து இறைவனை பூஜித்தார். அதுவே கௌதம இலிங்கம் என இன்று தனிச் சன்னிதியாக உள்ளது.

குசத்துவசன் என்ற மன்னன், சத்திய முனிவரது சொல்லிற்கு மாறாக அவர் இருந்த வனத்தில் வேட்டையாடி, கொடிய புலியுருவைப் பெற்றான். பின் அவன் முனிவரை வனங்கி வேண்ட, அவர் கூறியபடி இத்தலத்து சத்தியகூப தீர்த்தத்தில் நீராடி மீண்டும் சுய உருவைப் பெற்றான். வைகாசி விழாவையும் தொடங்கி வைத்தான்.

சங்குகர்னன் என்ற அந்தணன் தனது குருவின் விருப்பத்திற்கு மாறாக, அவர் மகளைத் திருமணம் செய்துகொள்ள மறுத்தான். அதனால் அவர் சாபத்திற்கு ஆளாகிப் பேயுரு பெற்றான். பின்னர் தன் நல்வினைப் பயனால் திருக்கருகாவூர் எல்லையினை அடைந்ததும், பேய் உரு நீங்கப் பெற்றான். அன்று மார்கழித் திருவாதிரை நாள். பிரம்ம தீர்த்தத்தில் நீராடி பெருமான் முன்பு சிவபூஜை செய்து நற்பேறு பெற்றான்.

தட்ச சாபத்தால் இன்னலுற்ற சந்திரன் ஒரு பங்குனி மாதம் பௌர்ணமியில் இங்கு சிவ பூஜை செய்து நற்கதி பெற்றான். ஆதலால் இன்றும் ஒவ்வொரு பங்குனி பௌர்ணமி நாளிலும் சந்திரனின் ஒளி இறைவன் திருமேனியில் படுவதைக் காணலாம்.

கி.பி. ஏழாம் நூற்றாண்டு கோயில் இது. மிகவும் அழகான சிறிய கிராமம். பேருந்து நிலையத்திலிருந்து கோயில் சுமார் 0.4 கீ மீ இருக்கும். இடப்புறம் வெட்டாறு கூடவே வருகிறது. எதிரில் குளம் உள்ளது. இவ்வூரின் நான்கு வீதிகளுக்கு இடையில் கோயில் அழகுற அமைந்துள்ளது. 460 அடி நீளமும், 284 அடி அகலமும் உடையது. கிழக்கில் ஒரு ராஜகோபுரமும், தெற்கில் ஒரு நுழைவு வாயிலும் உள்ளன.

உள்நுழைந்ததும் தெற்கே நந்தவனமும், வடப்பக்கம் வசந்த மண்டபமும் உள்ளன. வெளிப்பிரகாரம் நந்தவனமாகப் பயன்படுகின்றது. சுவாமி சன்னிதி எதிரே தெரிகிறது. அதற்கு தென்கிழக்கே அறுபத்துமூவர் மண்டபமும் மடப்பள்ளியும் உள்ளன. உள்சுற்றில் வினாயகர், இரட்டை நந்தி, இரு பலிபீடங்கள், அறுபத்துமூவர், தக்ஷிணா மூர்த்தி, சந்தனாச்சாரியார்கள், முருகன், கஜலக்ஷ்மி, தலமரம் முல்லை, இரத வடிவிலான சபாமண்டபம், அதில் நிருத்துவ முனிவர் பூஜித்த இலிங்கம் ஆகியன உள்ளன. இறைவன் சுயம்பு லிங்கமாக காட்சியளிக்கிறார். புனுகு சட்டம் மட்டுமே சார்த்தப்படுகிறது. அபிஷேகம் ஆவுடையாருக்கே. சுவாமி திருமேனியில் முல்லைக் கொடி சுற்றிய வடு உள்ளது. உயரமான திருமேனி. மிகவும் நிறைவான தரிசனம். சன்னிதியின் முன் சுவற்றில் தல புராணம் ஓவியமாக வரையப்பட்டுள்ளது. சுவாமி சன்னிதியின் இரண்டாம் சுற்றை விட்டு வெளியே வந்தால் இடப்பால் அம்மன் சன்னிதி. தற்சமயம் அம்மன் மிகவும் பிரபலமாக உள்ளதால், செழிப்பை அம்மன் சன்னிதி மற்றும் அது சார்ந்த பகுதிகளில் நன்றாகவே காண முடிகிறது. இறைவனுக்கு முல்லை மலர் பூக்குங்காலத்தில் சார்த்தப்படுகிறது.

அம்மன் மிகவும் அழகாக அலங்காரம் செய்ய்யப்பட்டு காட்சியளிக்கிறாள். 5 முதல் ஐந்தரை அடி உயரம் உள்ள சிற்பம். அம்பாள் இடது கையை இடுப்பில் வைத்தபடி கர்ப்பத்தை தாங்கியபடி உள்ளார். அழகான வேலைப்பாடு அமைந்த மண்டபம். இங்கும் சுவாமி சன்னிதி போல, தலபுராணம் ஓவியமாக வரையப்பட்டுள்ளது. அம்பிகையின் கோயில் தனியே திருச்சுற்றுடனும், ஒரு மண்டபத்துடனும் விளங்குகின்றது. அம்மன் கோயிலுக்கு வெளிப்பக்கம் கௌதமர் பூசித்த இலிங்கம் தனி சன்னிதியாக அமைந்துள்ளது. இங்குள்ள நந்தி உளிபடாத மூர்த்தம் என்பர். கோயிலில் சுவாமி மற்றும் அம்பாளுக்கு இடையில் முருகன் சன்னிதி அமைந்துள்ளது. ஸோமாஸ்கந்த நிலையை நினைவூட்டும் விதமாக இது அமைந்துள்ளது.

தல விருட்சமாகிய முல்லைக்கொடி ஸ்வாமியின் உட்பிரகாரத்தில் சண்டேச்சுரருக்கும், திருமஞ்சனக்கிணற்றுக்கும் இடையில் அமைந்துள்ளது.

இத்தலத்தில் உள்ள தீர்த்தங்கள் வருமாறு:

க்ஷீர குண்டம் இக்கோயிலுக்கு முன்னல் உள்ள குளம். காமதேனுவால் உருவாக்கப் பெற்றது. சத்தியகூபம் சுவாமி கோயிலுக்கும், அம்மன் கோயிலுக்கும் இடையே அமைந்துள்ளது.

பிரம்ம தீர்த்தம் இவ்வூருக்கு தென்மேற்கில் கற்சாலைக்கு கீழ்பக்கம் உள்ளது.

விருத்த காவிரி காவிரியின் கிளை ஆறான வெட்டாறு.

திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தையில்லாதவர்களுக்கு அம்பாளின் திருப்பாதத்தில் வைத்து மந்திரித்து கொடுக்கப்படும் நெய்யை, தம்பதியினர் 48 நாட்கள் தொடர்ந்து இரவில் சிறிதளவு சாப்பிட்டு வரவேண்டும். கணவனால் முடியாவிட்டாலும் மனைவி தினமும் இரவு சாப்பிட வேண்டும். நெய் சாப்பிடும் காலங்களில் உணவில் இதர பழக்கவழக்கங்களில் பத்தியங்களோ கட்டுப்பாடுகளோ இல்லை. இவ்வாறு செய்து வந்தால் விரைவில் கருத்தரிக்கும். கர்ப்பம் அடைந்த பெண்கள் சுகப்பிரசவம் அடைவதற்காக அம்பாள் திருப்பாதத்தில் விளக்கெண்ணெய் வைத்து மந்திரித்து கொடுக்கப்படுகிறது. இது விசேசமானதாகும். இந்த விளக்கெண்ணெயை, பிரசவ வலி ஏற்படும்போது வயிற்றில் தடவினால் எவ்விதமான கோளாறுகளோ, பேறுகால ஆபத்துகளோ பின்விளைவுகளோ இல்லாமல் சுகப்பிரசவம் ஆகும். கர்ப்பமடைந்தவர்களுக்கு எப்போதாவது அசாதரண வலி தோன்றினால் அப்போது மந்திரித்த விளக்கெண்ணெயை வயிற்றில் தடவினால் நின்று நிவாரணம் கிடைக்கும்.

தேவாரப்பதிகம்:

மாசில் தொண்டர்மலர் கொண்டு வணங்கிட ஆசை யாரஅருள் நல்கிய செல்வத்தர் காய் சினத்த விடையார் கருகாவூரெம் ஈசர் வண்ணம் எரியும் எரி வண்ணமே.

திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 18வது தலம்.

திருவிழா:

வைகாசி வைகாசி விசாகம் – 10 நாட்கள் பிரம்மோற்சவம் கொடி ஏற்றி தீர்த்தவாரி திருவிழா. புரட்டாசி நவராத்திரி அம்பாளுக்கு லட்சார்ச்சனை – 10 நாட்கள் திருவிழா.

ஆடிபூரம் பிரகாரம் வருவார் – 10 ம் நாள் காவேரி ஆற்றில் தீர்த்த்வாரி நடைபெறும்.

நடராஜருக்கு ஆறு அபிசேகங்கள், நிறைபணி அன்னாபிசேகம், கந்தர் சஷ்டி, கார்த்திகை சோமவார நாட்கள் அனைத்து கார்த்திகை ஞாயிறுகளில் தீர்த்தவாரி, கார்த்திகை தீபம் மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகியவை தலத்தின் சிறப்பான விசேச நாட்கள் ஆகும்.

மாதாந்திர பிரதோச நாட்கள், வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி, பொங்கல், தமிழ் ஆங்கிலப் புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.

பிரார்த்தனை:

திருமணம் கூடிவராத கன்னியர்களுக்கும் பல ஆண்டுகளாக குழந்தையில்லாத பெண்கள் கோயிலுக்கு வந்து அம்பாள் சந்நிதியில் சிறிது நெய்யால் மெழுகி, கோலமிட்டு அர்ச்சனை செய்கிறார்கள். அவ்வாறு செய்பவர்களுக்கு திருமணபாக்கியம், குழந்தை பாக்கியம் ஆகியவை கிடைக்கின்றன. மேலும் மாதவிடாய் கோளாறு உள்ள பெண்கள் , கர்ப்பப்பை சம்பந்தமான நோயுள்ள பெண்கள், திருமணம் தடைபடும் பெண்கள் ஆகியோரும் இத்தலத்திற்கு பெருமளவில் வந்து வழிபட்டு தங்கள் பிரச்சினைகள் நீங்க பெறுகின்றனர். தீராத நோய் உடையவர்கள் , குறிப்பாக சரும நோய் உள்ளவர்கள் சுவாமிக்கு புனுகுச் சட்டம் சாத்தி தம் நோய் நீங்கப் பெற்று வருகிறார்கள். இது இன்றளவும் நடைபெற்று வரும் கண்கூடான உண்மையாகும். இத்தலத்து முல்லைவனநாதனை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.

தலவரலாறு கையேட்டில் கண்டது:

திருமணமாக, குழந்தை உண்டாக கீழ்கண்ட ஸ்லோகத்தை தினமும் கர்ப்பரட்சாம்பிகை படத்தின் முன்பு சொல்ல வேண்டும்:

ஓம் தேவேந்திராணி நமஸ்துப்யம்
தேவேந்திர பிரிய பாமினி
விவாஹ பாக்கியம் ஆரோக்கியம்
புத்ர லாபம் சதேஹிமே
பதிம் தேஹி ஸுதம் தேஹி
சௌபாக்கியம் தேஹிமே சுபே
சௌமாங்கல்யம் சுபம் ஞானம்
தேஹிமே கர்ப்பரக்ஷகே
காத்யாயினி மஹாமாயே
மஹா யோகின்ய தீஸ்வரி
நந்தகோப ஸுதம் தேவம்
பதிம் மேகுருதே நம:

சுகப்பிரசவம் ஆக பிரார்த்தனை ஸ்லோகம்:

ஹே சங்கர ஸ்மரஹர ப்ரமதாதி நாதரி மன்னாத ஸாம்ப சசிசூட
அரதிரிசூலின் சம்போ சுகப்பிரசவ கிருத்பவமே தயாளோ
ஹேமாதவி வனேச பாளையமாம் நமஸ்தே
———————————-
சுகப்பிரசவம் ஆக இதை 108 முறை ஜெபிக்க வேண்டும்:

ஹிமவத் யுத்தரே பார்ச்வே ஸுரதா நாம யக்ஷினி
தஸ்யா ஸ்மரண மாத்ரேண விசல்யா கர்ப்பிணீபவேது.

நேர்த்திக்கடன்:

பிரதி மாதம் வளர்பிறை மாலை பிரதோசத்தின் போது சுவாமிக்கு புனுகு சட்டம் சாத்துதல் முக்கிய நேர்த்திகடன் ஆகும். தவிர (துலாபாரம்) எடைக்கு எடையாக பழங்கள், அரிசி, வெல்லம், கற்கண்டு, ரூபாய் ஆகியவற்றையும் பக்தர்கள் பெருமளவில் தருகிறார்கள். அம்மனுக்கு புடவை சாத்துதலும், அபிசேகம் செய்தலும், சந்தனக்காப்பு சாத்துதலும் பக்தர்களின் முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது. மா, மஞ்சள் பொடி, திரவியப் பொடி, தைலம், பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். சுவாமிக்கு கார்த்திகை சோம வாரம் குவளை சாத்தி 108 சங்காபிசேகம் நடைபெறும். மேலும்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகிவற்றை செய்யலாம்.

வழிகாட்டி: வெட்டாற்றின் கரையில் உள்ள தலம். கும்பகோணம் மெலட்டுர் வழியாக தஞ்சாவூர் செல்லும் சாலையில் உள்ள தலம். தஞ்சை திருக்கருகாவூர் மற்றும் கும்பகோனம் திருக்கருகாவூர் நகரப் பேருந்துகள் உள்ளன. தஞ்சை கும்பகோணம் சாலையில் பாபநாசம் வந்து, அங்கிருந்து தெற்காக சாலியமங்கலம் செல்லும் சாலையில் வந்தால் 6 கீ மீ தொலைவில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலமாயினும், அனைவருக்கும் கர்பரட்சாம்பிகை அல்லது கருக்காத்த நாயகி கோயில் என்று கேட்டால்தான் நன்றாகத் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *