அருள்மிகு சோற்றுத்துறை நாதர் திருக்கோயில், திருச்சோற்றுத்துறை

அருள்மிகு சோற்றுத்துறை நாதர் திருக்கோயில், திருச்சோற்றுத்துறை, கண்டியூர் வழி, திருவையாறு வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.

+91- 4362-262 814, +91-94862 82658,+91-94435 61731, +91-99438 84377, +91-99424 50047 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 9 – 11 மணி. காலை நேரத்தில் மட்டும் இறைவனை தரிசிக்க முடியும்.

மூலவர் சோற்றுத்துறை நாதர், ஓதவனேஸ்வரர், தொலையாச்செல்வநாதர்
அம்மன் அன்னபூரணி, தொலையாச்செல்வி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் காவிரி, சூரிய தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருச்சோற்றுத்துறை
ஊர் திருச்சோற்றுத்துறை
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் அப்பர், சம்பந்தர், சுந்தரர்

ஒரு முறை நாட்டில் பஞ்சம் ஏற்பட்ட போது அருளாளன் என்ற சிவபக்தன் பசியால் வாடினான். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் பசியால் துடித்தனர். வருந்திய அருளாளன் இத்தல இறைவனிடம், “என்னகொடுமை இது இறைவா? இப்படியா மக்களை பசியில் தவிக்க விடுவாய் . இது நியாயமாஎனச் சண்டை போட்டான். பசியின் கொடுமையால் கோயில் அர்ச்சகர் ஒரு மாதம் முன்பே வருவதை நிறுத்திவிட்டார். மாலையில் வந்து விளக்கு மட்டும் வைத்த ஊழியன், இரண்டு நாட்களுக்கு முன்னால் கீழே விழுந்துவிட்டான். விளக்கு கூட இல்லாமல் இருட்டில் கிடந்த சிவமூர்த்தத்தைப் பார்த்துக்கொண்டிருந்த அருளாளர், திடீரென்று வாயில்படியில் மோதி அழத் தொடங்கினார். திடீரென்று மழை பொழிய ஊரே வெள்ளக் காடானது. அப்போது ஒரு பாத்திரம் வெள்ளத்தில் மிதந்து வந்தது. இதைப்பார்த்த அருளாளர் அதை கையில் எடுத்தார். “அருளாளா. இது அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம். இதை வைத்து அனைவருக்கும் சோறு போடுஎன்று அசரீரி கேட்டது. இந்த பாத்திரத்தை கையில் வைத்தபடி ஊராருக்கு சோறும் நெய்யும் குழம்புமாக போட்டு அவர்களின் பசி தீர்த்தார். கடவுள் கண்ணத் திறந்துட்டார் என்று ஊர் மகிழ்ந்தது. இத்தல இறைவனை வழிபடும் அடியார்களின் பசிப்பணி தீர இறைவன் சோறு வழங்குபவன் என்னும் பொருளைத் தருவதுடன், உயிரைப்பற்றிய பிறவிப்பபிணி தீர வீடுபேறு தருபவன் என்ற பொருளும் உண்டு. இது காசிக்கு அடுத்தபடியாக அட்சய பாத்திரம் கொடுத்த தலமாகும். அருளாளருக்காக அட்சய பாத்திரம் அருளிய சிவபெருமான் எழுந்தருளி இருக்கும் இத்தலமே ஏழூர் தலங்களில் ஒன்றான திருச்சோற்றுத்துறை சப்தஸ்தானத் தலங்களில் மூன்றாவது தலம். அடியவர்களது பசிப்பிணியைப் போக்க உணவு வழங்கிய இறைவன் எழுந்தருளிய தலம் என்பதால் இந்த ஊருக்கு திருச்சோற்றுத்துறைஎனும் பெயர் ஏற்பட்டது. இத்தலத்ததை ராமலிங்க வள்ளலாரும், அருணகிரிநாதரும் போற்றியுள்ளனர். பிரம்மா, விஷ்ணு, இந்திரன், கவுதம முனிவர், சூரியன்ஆகியோர் வழிபட்டுள்ளனர். இத்தல இறைவனை வழிபட்டு இந்திரன் பதவி பெற்றான், கவுதமர் முக்தி பெற்றார்.

நந்தி பகவானுக்கும் வியாக்ரபாதரின் மகளான சுயம் பிரகாசைக்கும் பங்குனி மாதம் புனர்பூசத் திருநாளன்று மழபாடியில் திருமணம் நடைபெறும். சித்திரை மாதம் திருவையாறு பெருமானான ஐயாறப்பருக்கு பிரம்மோற்சவம். அதன்நிறைவு நாளில், நந்திதேவரையும், சுயாம்பிகையையும் வெட்டிவேர் பல்லக்கில் ஏற்றுவர். ஐயாறப்பரும் அறம் வளர்த்த நாயகியும் கண்ணாடி பல்லக்கில் ஏற்றிக் கொள்வர். காலை ஆறு மணி சுமாருக்குத் திருவையாறில் புறப்படும் இந்த கோஷ்டி, முதலில் திருப்பழனத்துக்குச் செல்லும். அங்கு ஆபத்சகாயரும் பெரியநாயகியும் இவர்களை எதிர்கொண்டழைத்து உபசாரம் செய்வர். பின்னர், அவர்களும் சேர்ந்து கொள்ள, அடுத்த இடம் திருச்சோற்றுத்துறை. அதன் எல்லையிலேயே அவர்களை எதிர்கொண்டு அழைக்கும் சோற்றுத்துறைநாதரும் அன்னபூரணி அம்மையும் ஊருக்குள் அழைத்து போவார்கள். திருச்சோற்றுத்துறையில் வருபவர்களுக்கு எல்லாம் அன்னம் பாலிக்கப்படும். பின்னர் இந்த ஊர்வலம் திருவேதிக்குடி நோக்கித் தொடரும்.

பெரிய கோயில். சாலையிலிருந்து பார்த்தாலே தெரிகிறது. கிழக்கு கோபுரவாயிலின் வழியாகத்தான் உள்ளே நுழைதல் சாத்தியமாகும். ஏனெனில் பிறவாயில்கள் புதர் மண்டிக்கிடக்கின்றன. இக்கோபுரம் நிலைகள் இல்லாமல் மொட்டை கோபுரமாக காட்சியளிக்கிறது. வெளிப்பிரகாரத்திற்கும் அதற்கடுத்த பிரகாரத்திற்கும் இடையில் ஒரு தென்னஞ்சோலையே இருக்கிறதா என்றெண்ணுமளவுக்கு தென்னைமரங்களும் புதரும் மண்டிக்கிடக்கின்றன. அம்பாள் கோயில் இங்கு தனிக்கோயிலாக தெற்குப் பக்கம் உள்ளது.

3 நிலை கோபுரம் தாண்டி உட்சென்றால் வலப்பால் வினாயகரும், இடப்பால் முருகனும் உள்ளனர். முன் மண்டபத்தில் நடராஜ சபை உள்ளது. உற்சவ மூர்த்தங்கள் இங்கு பாதுகாக்கப்பட்டுள்ளன. இது தவிர வேறு இடங்களில் கண்டெடுக்கப்பட்ட கற்சிற்பங்களும் இங்கு பக்கத்தில் வைக்கப்பட்டுள்ளன. அர்த்த மண்டப நுழைவு வாயிலில் பெரிய ஆறுமுகப்பெருமான் மூர்த்தம் உள்ளது. இதுவே இத்தலத்தில் தனிச்சிறப்பு வாய்ந்த மூர்த்தமாகும். உட்பிரகாரத்தில் கோஷ்ட மூர்த்தங்கள் அவைகளுக்குண்டான இடங்களில் உள்ளன. சப்தஸ்தான தலங்களின் இலிங்கங்கள் ஏழு வரிசையாக உள்ளன. உள்மண்டபத்தில் வாகனங்கள் உள்ளன. நேரே தெரிவது மூலவர். சுயம்பு மூர்த்தி. கம்பீரமான மூர்த்தம். ஆனால் சரியான பராமரிப்பின்றி பொலிவிழந்த நிலையில் காணப்படுகிறார். கோயில் மொத்தமும் அவ்வாறே. உள்ளே நுழைந்ததும் பெரிய பிரகாரம். அதன் தென்கிழக்குப் பகுதியில் தனிக் கோயிலாக அம்பாள் சந்நிதி கிழக்குப் பார்த்துள்ளது. மூலஸ்தானத்தில் நின்ற கோலத்தில் ஒப்பிலாம்பிகை . இவருக்கு அன்னபூரணி என்ற பெயரும் உண்டு. அள்ள அள்ளக் குறையாமல் வழங்கிய சிவனுக்கு தொலையாச் செல்வர்என்றும், அவருக்குள் பாதியாகி அருள்புரியும் அம்மைக்கு அன்னபூரணிஎன்றும் திருநாமங்கள். அம்மையை உளமார உருகி வழிபட்டால், வறுமையும் பிணியும் விலகி விடும்.

தேவாரப்பதிகம்:

இறந்தார் என்பும் எருக்கும் சூடிப் புறங்காட் டாடும் புனிதன் கோயில் சிறந்தார் சுற்றம் திருஎன்று இன்ன துறந்தார் சேரும் சோற்றுத் துறையே.

சுந்தரர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 13வது தலம்.

திருவிழா:

மகா சிவராத்திரி.

பிரார்த்தனை:

திருமணத்தடை உள்ளவர்கள் சித்திரையில் நடைபெறும் நந்தியின் திருமண விழாவை கண்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள்நிறைவேறியவர்கள்றைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடைஅணிவித்து, சிறப்புபூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

வழிகாட்டி:

தஞ்சை மாவட்டத்தில், திருவையாற்றுக்கு அருகே உள்ள தலம். தஞ்சாவூரிலிருந்து 14 கீ மீ தொலைவு. திருவையாற்றிலிருந்து 7 கீ மீ. கண்டியூர் ஐய்யம்பேட்டை சாலையில் உள்ள தலம். குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் உள்ள தலம்.

கண்டியூரிலிருந்து நகரப் பேருந்துகள் உள்ளன. பேருந்துகள் குறைவாக உள்ளதால், முடிந்தவர்கள் கண்டியூரில் இறங்கி தெரிந்தவர்கள் மூலம் ஒரு வாடகை சைக்கிள் அமர்த்திக்கொண்டு போகலாம்.

(தற்பொழுது நிலை தெரியவில்லை)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *