அருள்மிகு ஆத்மநாதேசுவரர் திருக்கோயில், திருவாலம் பொழில், திருப்பந்துருத்தி

அருள்மிகு ஆத்மநாதேசுவரர் திருக்கோயில், திருவாலம் பொழில், திருப்பந்துருத்தி, வழி திருக்கண்டியூர், திருவையாறு வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.

+91 – 4365 – 284 573, 322 290 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஆத்ம நாதேஸ்வரர், வடமூலேஸ்வர்
அம்மன் ஞானம்பிகை
தல விருட்சம் வில்வம், ஆலமரம்(தற்போதில்லை)
தீர்த்தம் காவிரி
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் ஆலம்பொழில்
ஊர் திருவாலம் பொழில்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருநாவுக்கரசர்

இத்தலக் கல்வெட்டு இறைவனைத் தென் பரம்பைக்குடி திருவாலம் பொழில் உடைய நாதர்என்று குறிக்கிறது. அப்பரும் தம் திருத்தாண்டகத்தில், “தென் பரம்பைக் குடியின்மேய திருவாலம் பொழிலானைச் சிந்திநெஞ்சேஎன்று பாடியுள்ளார். இதிலிருந்து ஊர் பரம்பைக்குடி என்றும்; கோயில் திருவாலம்பொழில் என்றும் வழங்கப்பட்டதாகத் தெரிகின்றது. காசிபர், அஷ்டவசுக்கள் வழிபட்டது. கோயிலில் சுப்பிரமணியர், நவக்கிரகங்கள், நால்வர் சன்னதிகள் உள்ளது. இத்தலத்தில் உள்ள வெண் பொற்றாமரைக்குளத்தில் இந்திரன் நீராடி சாப விமோசனம் பெற்றான். நந்தியின் திருமணத்தை சுந்தரருக்கு ஞாபகப்படுத்திய தலம் இது. இத்தலத்து அம்மனை வழிபட்டால் ஞானம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

கோயில் பிரகாரத்தில், மூலவிநாயகர், பஞ்சலிங்கம், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், காசி விஸ்வநாதர், வள்ளி, தெய்வானையுடன் முருகன், நவக்கிரகம், காசி விசாலாட்சி, நடராஜர் ஆகியோர் உள்ளனர். இங்கு மூலவர் ஆத்மநாதேஸ்வரர் சுயம்புமூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். சப்த ஸ்தானத்தில் ஒன்று. இத்தலத்தில் உள்ள துர்க்கை மிகவும் சக்தி வாய்ந்தவள். தெட்சிணாமூர்த்தி இத்தலத்தில் மேதா தெட்சிணாமூர்த்தியாக உள்ளார்.

தேவாரப்பதிகம்:

பொல்லாத என்அழுக்கில் புகுவான் என்னைப் புறம்புறமே சோதித்த புனிதன் தன்னை எல்லாரும் தன்னையே இகழ அந்நாள் இடுபலி என்று அகம்திரியும் எம்பிரானைச் சொல்லாதார் அவர்தம்மைச் சொல்லா தானைத் தொடர்ந்துதன் பொன்னடியே பேணுவாரைச் செல்லாத நெறிசெலுத்த வல்லான் தன்னைத் திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.

திருநாவுக்கரசர்

தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 10வது தலம்.

திருவிழா:

ஆவணி மூலம், சஷ்டி, நவராத்திரி, கார்த்திகை சோமவாரங்கள், சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம்.

வேண்டுகோள்:

திருமணத்தடை நீங்க, குழந்தைச் செல்வம் பெற, கல்வியில் சிறந்து விளங்க, இறைவனை வேண்டிக்கொள்ளலாம்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *