அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் மலைக்கோயில், அய்யர் மலை

அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் மலைக்கோயில், அய்யர் மலை வாட்போக்கி, குளித்தலை, சிவாயம் அஞ்சல், வைகல்நல்லூர் வழி, கரூர் மாவட்டம்.

+91-4323-245 522 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் இரத்தினகிரீஸ்வரர் (இராஜலிங்கம், வாள்போக்கி நாதர்)
அம்மன் சுரும்பார்குழலி
தல விருட்சம் வேம்பு
தீர்த்தம் காவேரி
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருவாட்போக்கி(ஐயர்மலை) ஐவர் மலை, சிவாயமலை, இரத்தினகிரி
ஊர் அய்யர் மலை
மாவட்டம் கரூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருநாவுக்கரசர்

இயற்கை எழில் சூழ்ந்த காட்சியுடன் விளங்கும் இம்மலை மேருமலையின் ஒரு சிகரம். சோதிலிங்க வடிவமானது. மலைக்கொழுந்தீஸ்வரராக எழுந்தருளியுள்ள பெருமான் சுயம்பு மூர்த்தி. காலையில் காவிரிக் கரையிலுள்ள கடம்பர் கோயிலில் வழிபாடு செய்துவிட்டு நடுப்பகலில் இரத்தினகிரீஸ்வரரை வணங்கி மாலையில் திருஈங்கோய் மலைநாதரை வழிபட்டால் நல்ல புண்ணியமுண்டு என்பது ஐதீகம். மணி முடி இழந்த ஆரிய மன்னன் ஒருவன் இத்தலத்திலுள்ள இறைவனுக்கு அபிசேக ஆராதனைகள் செய்கின்ற போது அங்குள்ள கொப்பரையில் காவேரி தீர்த்தம் ஊற்றி நிரப்பப்பட்டது. ஆனால் தீர்த்தம் ஊற்ற ஊற்ற கொப்பரை நிரம்பவே இல்லை. ஊர் மக்கள் அனைவரும் ஊற்றியும் நிரம்பாததால் மன்னன் கோபம் கொண்டு தன் வாளை உருவி சுவாமி மீது வீசினான். இதனால் சுயம்புவில் இருந்து ரத்தம் வந்தது. இதையடுத்து மன்னன் தன் தவறை உணர்ந்து இறைவனை வணங்கினான். இதையடுத்து இறைவன் தோன்றி மன்னனுக்கு அருளாசி வழங்கி இரத்தினங்களை வழங்கினான். அந்த தழும்பு இன்னும் சுவாமியின் முடியில் உள்ளது. இறைவன் 9(நவ) ரத்தினங்களாக இருப்பதால் இம்மலையை சுற்றி அமைந்த சுற்று வட்டாரப்பகுதிகளில் பூமிக்கடியில் பச்சைக் கற்கள், சிவப்புக் கற்கள் ஆகியவை நிறைய கிடைக்கின்றன.

சுற்றிலும் 8 பாறைகளுக்கு நடுவே உள்ள ஒன்பதாவது பாறையில் சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். 1178 அடி உயரமும், 1117 படிகள் கொண்ட மலை மீது அமைந்துள்ள மிகவும் சிறப்பு வாய்ந்த சிவதலம். சித்திரை மாதங்களில் சூரிய கிரணங்கள் சுவாமி சன்னதிக்கு நேரேயுள்ள நவத்துவாரங்களின் வழியே சிவலிங்கத்தின் மீது விழுகின்றன. இம்மலையில் உள்ள பாம்புகள் தீண்டினால் விஷம் ஏறுவதில்லை. மணிமுடி இழந்து தேடி வந்த ஆரிய மன்னனுக்கு இரத்தினமும், சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்கு பொற்கிழியும் இறைவன் கொடுத்ததும் இத்தலத்தில்தான். காஞ்சிபுரத்தை சேர்ந்த இவர் தனக்கு குழந்தை பிறந்தால் தன் சிரசை தருவதாக வேண்டினார். அது படியே நடக்க வைராக்கியப் பெருமாள் தன் சிரசை சுவாமிக்கு காணிக்கையாக கொடுத்தார். மலைக்கு கீழே பாதமும், மேலே சிரசும் வந்தது. தேனும் தேங்காய்ப்பாலும் மட்டும்தான் இவருக்கு அபிசேகம். பூஜை முடிந்த பிறகு சுவாமியின் மாலை இவருக்குத்தான் போடப்படும். இத்தலத்தில் இவர் மிகவும் விசேசமானவர்.

ஆயர் ஒருவர் அபிசேகத்துக்காக கொண்டு வந்து வைத்திருந்த பாலைக் காகம் கவிழ்த்ததால், அது எரிந்து போயிற்று. காகம் எரிந்த எல்லையில், இப்போதும் இந்த மலையின் மீது ஒரு காகம் கூட பறப்பதில்லை என்பது சிறப்பான அதிசயம்.

தினமும் கால்நடையாகவே 8 கி.மீ., நடந்து காவேரியிலிருந்து தீர்த்தம் எடுத்துக் கொண்டு வந்து சுவாமிக்கு அபிசேகம் செய்யப்படுகிறது. இங்கு இறைவனுக்கு கேந்திப்பூ சாத்துவதில்லை. மாணிக்கம் பதித்த விலை மதிப்பற்ற கிரீடம் சூட்டி கார்த்திகை 1ந் தேதி சுவாமி காட்சியளிப்பார். சுவாமிக்கு பால் அபிசேகம் செய்த பச்சை பால் மாலை வரை கெடாது. பத்தி, கற்பூரம் ஆகியவை பாலில் விழுந்த போதிலும் கெடுவதில்லை. அபிஷேகம் செய்த பால் சிறிது நேரத்தில் கெட்டியான சுவை மிகுந்த தயிராக மாறி விடுகிறது. இது இக்கோயிலின் இன்று வரை நடக்கும் அதிசயமான ஒன்றாகும்.

தேவாரப்பதிகம்:

கூற்றம் வந்து குமைத்திடும் போதினால் தேற்றம் வந்து தெளிவுற லாகுமே ஆற்றவும் மருள் செய்யும் வாட்போக்கிபால் ஏற்று மின்விளக்கை இருள் நீங்கவே.

திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது முதல் தலம்.

திருவிழா:

சித்திரைத் திருவிழா – 15 நாட்கள் கார்த்திகை சோமாவாரம் 1017 படிகளில் பக்தர்கள் புரண்டே மேலேறி மலைக்கோயிலுக்கு வருவது சிறப்பு. பிரதோச காலங்கள், குருபெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி மற்றும் பௌர்ணமி கிரிவல நாட்கள் வாரத்தின் சனி ஞாயிற்றுக் கிழமைகள், மாதப்பிறப்பு நாட்கள், தமிழ் ஆங்கில வருடப்பிறப்பு, தீபாவளி, பொங்கல்.

பிரார்த்தனை:

தங்கள் குல தெய்வம் தெரியாதவர்கள் இரத்தினகிரீஸ்வரரை தங்கள் குலதெய்வமாக வழிபடலாம். தவிர இங்கு இறைவனை வழிபட்டால் கல்யாண வரம், தொழில் விருத்தி, புத்திர பாக்கியம் ஆகியவை நிறைவேறுகின்றன. இத்தலத்து ரத்தினகிரீஸ்வரரை வணங்கினால் மன அமைதி கிடைக்கும். நிம்மதி வேண்டுவோர் நிறைய பேர் இம்மலைக்கு வருகிறார்கள். தவிர இம்மலையில் படிகள் வழியே மலை ஏறும் போது ஏராளமான மூலிகை மரங்கள் இருபுறமும் உள்ளன. இத்தகைய அபூர்வமான மூலிகை காற்றை சுவாசிப்பதால் உடலில் உள்ள ஆஸ்துமா, இரத்தக்கொதிப்பு, நெஞ்சுவலி, கை கால் மூட்டு வலி, இரத்த அழுத்தம் ஆகியவை உள்ளவர்கள் ஒருமுறை மலை ஏறிவிட்டு வந்தாலே அதிசயமான மாற்றத்தை அடைவதை முழுமையாக உணர முடியும். இந்த பிரச்சினைகள் உள்ளவர்கள் அடிக்கடி வந்து வழிபட்டால் கூடிய விரைவில் குணமடைவது கண்கூடாக நடந்து வரும் அதிசயமான உண்மை.

நேர்த்திக்கடன்:

அபிசேக, ஆராதனைகள் மற்றும் மணி விளக்குகள் ஆகியவை இறைவனுக்கு காணிக்கையாக பக்தர்கள் செலுத்துகிறார்கள். இறைவனுக்கு தூய உலர்ந்த வேஷ்டி சாத்தலாம். சுவாமிக்கு பால், எண்ணெய், இளநீர், ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். விரதம் இருத்தல், தானதருமம் செய்தல், வேள்வி புரிதல், தபம் செய்தல், தியானம் செய்தல் ஆகியவை இத்தலத்தில்செய்தால் பன்மடங்கு புண்ணியம் கிடைக்கும். அத்தனை சிறப்பு வாய்ந்த சிவதலம். இது தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைக்கலாம். சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *