அருள்மிகு மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில், திருவாசி

அருள்மிகு மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில், திருவாசி, திருச்சி மாவட்டம்.

+91-431 – 6574 972, +91-94436 – 92138

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மாற்றுரைவரதர் (பிரம்மபுரீஸ்வரர், சமீவனேஸ்வரர்)
அம்மன் பாலாம்பிகை
தல விருட்சம் வன்னி
தீர்த்தம் அன்னமாம்பொய்கை, சிலம்பாறு
ஆகமம் சிவாகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருப்பாச்சிலாச்சிரமம்
ஊர் திருவாசி
மாவட்டம் திருச்சி
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருஞானசம்பந்தர், சுந்தரர்

சிவதல யாத்திரை சென்ற சுந்தரர் தன்னுடன் வரும் சிவனடியார்களுக்காக, சிவனிடம் பொன்பெற்று அதன் மூலம் அவர்களுக்கு உணவு படைப்பது வழக்கம். ஒருசமயம் அவர் திருவானைக்கா தலத்தில் சிவனை தரிசித்துவிட்டு இத்தலம் வந்தார். சிவனையே நண்பராகப் பெற்றிருந்த அவர் இங்கு அவரிடம் பொன் வேண்டிப் பதிகம் பாடினார். அவரைச் சோதிக்க எண்ணிய சிவன் பொன் தராமல் அமைதியாக இருந்தார். பொறுமையுடன் இருந்த சுந்தரர் சற்று நேரத்தில் கோபம் கொண்டார். சிவன் என்பவர் இருக்கிறாரா? இல்லையா? என்ற அர்த்தத்தில் அவரை இகழ்ந்து பதிகமும் பாடினார். அதற்கு மேல் சுந்தரரை சோதிக்க எண்ணாத சிவன், அவருக்கு ஒரு பொன் முடிப்பை பரிசாகத் தந்தார். சுந்தரருக்கு, சிவன் கொடுத்த பொன் தரமானதுதானா என சந்தேகம் வரவே அவர் பொன்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது இரண்டு பேர் அங்கு வந்தனர். அவர்கள் இருவரும் சுந்தரரிடம், பொன்னை பார்த்துக் கொண்டிருந்த காரணத்தை கேட்டனர். அவர் பொன் சுத்தமானதுதானா?” என பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றார். அவர்களில் ஒருவர் சுந்தரரிடம் இருந்த பொன்னை வாங்கி, அதனை உரைத்துக் காட்டி, தரமானதுதான் என்று உறுதி கூறினார். உடனிருந்தவரும் அவர் சொன்னதை ஒப்புக்கொண்டார். பின்னர் இருவரும் மறைந்து விட்டனர். வியந்த சுந்தரர் சிவனை மறுபடியும் தான் இகழ்ந்து பாடவில்லை என்ற அர்த்தத்தில் பதிகம் பாடினார். அவருக்கு காட்சி தந்த சிவன், தங்கத்தை உரைத்துக்காட்டியது தான் எனவும், உடன் வந்தது மகாவிஷ்ணு எனவும் உணர்த்தினார். “மாற்றுரைவரதர்என்ற பெயரும் பெற்றார்.

முன்னொரு காலத்தில் இப்பகுதி மழநாடுஎன்ற பெயரில் அழைக்கப்பட்டது. இப்பகுதியை கொல்லிமழவன் எனும் மன்னன் ஆட்சி செய்து வந்தான். மன்னனின் மகள் தீராத கொடிய நோயினால் பாதிக்கப்பட்டிருந்தாள். மன்னன் எவ்வளவோ வைத்தியம் பார்த்தும் அவளைக் குணப்படுத்த முடியவில்லை. எனவே, அவளை இக்கோயிலில் கிடத்திவிட்டு, அவளது பிணியை குணப்படுத்தும் பொறுப்பை சுவாமியிடம் விட்டுவிட்டு சென்று விட்டான். அச்சமயத்தில் திருத்தலயாத்திரையாக திருஞானசம்பந்தர் இத்தலம் வந்தார். அவர் சுவாமியின் முன்பு கிடந்த பெண்ணைக் கண்டார். அந்நேரத்தில் சம்பந்தர் வந்திருப்பதை அறிந்த மன்னன் கோயிலுக்கு வந்தான். திருஞானசம்பந்தரிடம் மன்னன், தன் மகளின் நோயைக் கூறி, அவள் குணமடைய வழி சொல்லும்படி கேட்டுக்கொண்டான். மன்னனின் நிலையை அறிந்த சம்பந்தர் நடராஜரைக் குறித்து பதிகம் பாடினார். அவரது பாடல் கேட்ட நடராஜர் ஆனந்த நடனம் ஆடினார். மன்னன் மகளை பிடித்திருந்த நோயை முயலக உருவாக்கி, அவனை அழித்து நாகத்தின் மீது ஆடினார். மன்னன் மகள் குணமாகி எழுந்தாள். இதனை உணர்த்தும் விதமாக இங்குள்ள நடராஜர் தலையில் சேர்த்துக் கட்டிய சடைமுடியுடன், ஒரு காலை நாகத்தின் மீது ஊன்றி ஆடும் கோலத்தில் இருக்கிறார். இவரை சர்ப்ப நடராஜர்என்கின்றனர். நடராஜரின் இந்த தரிசனம் அபூர்வமானதாகும்.

அம்பாள் பாலாம்பிகை,” இத்தலத்தில் கமலன் எனும் வணிகனின் மகளாக பிறந்தாள். வன்னிமரத்தின் அடியில் சுவாமியை வேண்டி தவம் இருந்து தகுந்த காலத்தில் அவரை மணந்து கொண்டாள். இவள் பிரகாரத்தில் தனிச்சன்னதியில் தாமரை மலர் மீது நின்ற கோலத்தில், மேற்கு பார்த்தபடி இருக்கிறாள். இவளது சன்னதியில் வித்தியாசமாக துவாரபாலகிகளுக்கு பெண்கள் மஞ்சள் கயிறு, தொட்டில் கட்டி வழிபடுகின்றனர். இவர்கள் மூலமாக அம்பாள் பக்தர்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்கிறாள் என்பது நம்பிக்கை. அர்த்தஜாம பூஜையில் மட்டும் முதலில் அம்பாளுக்கு பூஜைகள் செய்யப்பட்டு அதன்பிறகு சுவாமிக்கு பூஜைகள் நடக்கிறது. பாலாம்பிகை சன்னதிக்கு எதிரே செல்வ விநாயகர் சன்னதியும், அன்னமாம்பொய்கை தீர்த்தமும் இருக்கிறது.

இத்தலத்தின் தலவிநாயகரின் திருநாமம் அனுக்கை விநாயகர். கருவறையில் சுவாமி உருத்ராட்சப் பந்தலின் கீழ் சுயம்பு இலிங்கமாக அருளுகிறார். ராஜகோபுரத்தின் கீழே அதிகார நந்தி, மனைவியுடன் நின்ற கோலத்தில் இருக்கிறார். இங்குள்ள நவக்கிரகத்தில் சூரியன் தன் மனைவியர் உஷா, பிரத்யூஷாவுடன் இருக்க மற்ற கிரகங்கள் அனைத்தும் அவரை பார்த்தபடி இருக்கிறது. பிரகாரத்தில் சகஸ்ரலிங்க சன்னதி உள்ளது.

தேவாரப்பதிகம்:

ஒருமையே அல்லேன் எழுமையும் அடியேன் அடியவர்க்கு அடியனும் ஆனேன் உரிமையால் உரியோன் உள்ளமும் உருகும் ஒண்மலர்ச் சேவடி காட்டாய் அருமையாம் புகழார்க்கு அருள்செய்யும் பாச்சி லாச்சிராமத்து எம் அடிகள் பெருமைகள் பேசிச் சிறுமைகள் செய்யில் இவரலாது இல்லையோ பிரானார்.

சுந்தரர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 62வது தலம்.

திருவிழா:

வைகாசியில் 11 நாட்கள் பிரம்மோத்சவம், திருக்கார்த்திகை, ஆருத்ரா தரிசனம், தைப்பூசம்.

பிரார்த்தனை:

சுவாமிக்கு இலுப்பை எண்ணெய் விளக்கு போட்டு வழிபட்டால் குடும்பம் சிறக்கும்; தோஷங்கள் நீங்கும்; அம்பாளிடம் வேண்டிக்கொண்டால் புத்திரபாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. குழந்தை பிறந்தவர்களும், பாலாரிஷ்ட தோஷம் உள்ள குழந்தைகளின் பெற்றோர்களும் அம்பாளுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். இவ்வாறு செய்வதால் குழந்தைகள் வாழ்வில் நோய்கள் இன்றி சிறப்பாக வாழ்வர் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

வலிப்பு, தீராத வயிற்றுவலி, வாதம், ஆஸ்துமா போன்ற நோய்கள் உள்ளவர்கள் நடராஜருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வன்னி இலை அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *