அருள்மிகு ஐயாறப்பன் திருக்கோயில், திருவையாறு

அருள்மிகு ஐயாறப்பன் திருக்கோயில், திருவையாறு, தஞ்சாவூர் மாவட்டம்.

+91-436 -2260 332, 94430 08104 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஐயாறப்பன், பஞ்சநதீஸ்வரர்
அம்மன் தரும சம்வர்த்தினி
தீர்த்தம் சூரிய புஷ்கரணி
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் திருவையாறு
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் சம்பந்தர்

சிலாது மகரிஷி என்பவரின் மகனாக அவதரித்தவர் நந்திகேசர். பிறக்கும்போது இந்த குழந்தைக்கு நான்கு கைகள் இருந்தன. சிலாது மகரிஷி, ஒரு பெட்டியில் இந்தக் குழந்தையை வைத்துவிட்டு மூடித் திறந்தார். அப்போது குழந்தையின் இரண்டு கைகள் நீங்கி அழகான குழந்தையாக விளங்கியது. குழந்தையை திருவையாறு தலத்தில் விட்டுச் சென்றார். பரமேஸ்வரன் அந்த குழந்தைக்கு, அம்பிகையின் பால், நந்தி வாய் நுரை நீர், அமிர்தம், சைவ தீர்த்தம், சூரிய புஷ்கரணி தீர்த்தம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்தார். இந்த காரணத்தால் இறைவன் ஐயாறப்பர்எனப்பட்டார்.

கரிகால் சோழன் பல்லக்கில் இப்பக்கமாக வந்துகொண்டிருந்த போது தேர்ச் சக்கரம் நிலத்தில் புதையுண்டது . அதனை எடுக்கத் தோண்டும்போது குருதி வெளிப்பட்டது . சிவலிங்கமிருப்பதை கண்ட அரசன் தன் தவறுணர்ந்து, தலையை துணிக்க முற்படுகையில் ஈசன் அசரீரியால் தடுத்தார் என வரலாறு கூறும். ஆகையால் கரிகாலன் இக்கோயிலைக் கட்டுவித்தான். சுந்தரரும், சேரமான் பெருமாளும் வந்த போது இறைவன் காவிரி வெள்ளத்தை ஒதுக்கி வழிவிடச்செய்த தலம்.

இவ்வூர் இறைவனுக்கு அர்ச்சகர் ஒருவர் பூஜை செய்துவந்தார். ஒருமுறை காசிக்கு சென்றதால் அவரால் பூஜைக்கு உரிய நேரத்தில் வரமுடியவில்லை. இந்த தகவல் அவ்வூர் அரசனுக்கு சென்றது. அவன் உடனடியாக கோயிலுக்கு வந்து பார்த்தபோது சம்பந்தப்பட்ட அர்ச்சகர் பூஜை செய்துகொண்டிருந்தார். மறுநாள் காசிக்கு சென்ற அர்ச்சகர் ஊரிலிருந்து திரும்பினார். ஊராரும் அரசனும் ஆச்சரியப்பட்டனர். இறைவன், இந்த அர்ச்சகர் மீது கொண்ட அன்பால் அர்ச்சகரின் வடிவில் வந்து, தனக்குத்தானே அபிஷேகம் செய்து கொண்டது தெரியவந்தது. தன்னை வணங்குபவர்களுக்கு அன்பு செய்பவர் ஐயாறப்பர். ஆகவேதான் தன்னைத்தானே வழிபடுவது என்ற ஐதீகத்தில் இரு இலிங்கங்களும் ஒரு அம்பாளும் வைத்து பூசிக்கப்படுகின்றன. இந்த அற்புதத்தையொட்டியே இன்றும் இக்கோயிலில் சித்திரை ஆயில்யத்தன்று சுவாமி புறப்பாடும் செய்து, இறைவனாக வந்த சிவாச்சாரியார், பூஜை முறையினராகிய சிவாச்சாரியார் என்ற ஐதீகத்தில் இருவருக்கும் பரிவட்டம் சார்த்தி, சுவாமியுடன் வலம் வரும் சிறப்பு விழா நடைபெறுகின்றது. இந்த அதிசயத்தையே மாணிக்கவாசகர் தம் அமுத வாக்கில் ஐயாரு அதனில் சைவனாகியும்என்று குறித்துள்ளார்.

இங்கே அம்பாள் அறம் வளர்த்த நாயகி எனப்படுகிறாள். ஆண்கள் தர்மம் செய்வதைவிட குடும்பத்தில் உள்ள பெண்கள் தர்மம் செய்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அந்த அடிப்படையில் உலக உயிர்களுக்கெல்லாம் படியளக்கும் நாயகியாக, பெண்களுக்கு தர்மத்தின் அவசியத்தை எடுத்துக்காட்டும் விதத்தில் தரும சம்வர்த்தினிஎன்ற பெயரில் அம்பாள் இங்கே எழுந்தருளி உள்ளாள். எல்லா நாட்களும் நல்ல நாட்களே என்பதை வலியுறுத்தும் வகையில் அஷ்டமி திதியில் இரவு நேரத்தில் அம்பாளுக்குத் திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது.

அப்பர் பெருமான் இத்தலத்தில் வழிபட்டு கைலாய காட்சியை பெற்றார். எனவே இத்தலத்தில் வணங்கினால் கைலாயத்திற்கே சென்றதாகஐதீகம். மானசரோவர் ஏரியில் மூழ்கிய அப்பர் பெருமான் இந்த திருத்தலத்தில் உள்ள குளத்தில் வந்து எழுத்தார். சூரிய புஷ்கரணி தீர்த்தம் எனப்படும் இந்த குளம் மிகவும் விசேஷமானது. இங்கே அம்பாள் மகாவிஷ்ணுவின் அம்சமாக கருதப்படுகிறாள். எனவே திருவையாறு எல்லைக் குட்பட்ட இடங்களில் பெருமாளுக்கு கோயில்களே கிடையாது என்பது குறிப்பிடத் ததக்கது.

இங்கே மூலவர் சுயம்புவாக எழுந்தருளி உள்ளார். அவரது ஜடாமுடி கருவறையின் பின்பக்கமும் பரந்து விரிந்து கிடப்பதாக ஐதீகம். சிவபெருமானின் ஜடா முடியை மிதிக்கக்கூடாது என்பதால் சன்னதியை சுற்றத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுவாமி பிரகாரத்தில் உள்ள தெட்சிணாமூர்த்தி மிகவும் விசேஷமானவர். இவரைப் பெருமாள் வழிபட்டிருக்கிறார். பெருமாள் வழிபட்ட குரு தமிழகத்திலேயே இங்கு மட்டும்தான் உள்ளார். எனவே இவருக்கு ஹரிஉரு சிவயோக தெட்சிணாமூர்த்திஎனப் பெயர். இவர் முயலகனுக்கு பதிலாக ஆமையை மிதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கோயிலின் வெளிப்பிரகாரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்றுகொண்டு ஐயாறப்பாஎன உரக்க குரல் கொடுத்தால் ஏழு முறை திருப்பிக் கேட்கிறது. அந்த அளவிற்கு இந்த கோயிலின் கட்டடக்கலை அமைந்துள்ளது. வெளிநாட்டில் உள்ள இன்ஜினியர்கள் இந்த சப்தம் கேட்பதுபற்றி ஆய்வு செய்தனர். ஆனால், இதற்கான காரணத்தை அறிய முடிய வில்லை.

நவக்கிரகங்களில் இது சூரிய ஸ்தலமாகும். சூரியபகவான் இத்தலத்தில் பூஜித்துள்ளார். இக்கோயில் ஐந்து பிரகாரங்களை கொண்டது. இங்குள்ள முக்தி மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்தால் மனம் நிம்மதி கிடைக்கிறது. சூரியன் இந்த கோயிலில் மேற்கு திசை நோக்கி உள்ளார்.

இங்குள்ள தியான மண்டபம் கட்டப்பட்ட விதம் அபூர்வமானது. சுண்ணாம்பு மற்றும் கருப்பட்டி கலந்து இது கட்டப்பட்டது. இந்த பொருட்களை சேகரித்து வைக்க மிகப்பெரிய குழிகள் தோண்டப்பட்டிருந்தன. இதைக் கட்டியவர்களுக்கு தங்கமும் வெள்ளியும் கூலியாகத் தரப்பட்டதாம். இவற்றையும் இரண்டு குழிகள் தோண்டி போட்டுவைத்திருந்தனர். ஒருவர்தன்னால் முடிந்த அளவு இவற்றை அள்ளிச் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனராம். இந்த நான்கு குழிகளும் இப்போதும் உள்ளன.

நாற்புறமும் கோபுர வாயில்களைக்கொண்ட தலம். நான்கு வாயில்களிலும் கிழக்கு வாயிலே பிரதான வாயில். 7 நிலைகளை உடையது. சிற்பங்கள் ஏராளமாக உள்ளன. விசாலமான உள்ளிடம். வலப்பால் பெரிய மண்டபம் உள்ளது. வலப்பக்கம் அம்மன் கோயிலுக்கு செல்லும் வழி உள்ளது. அம்மன் கோயில் தனிக்கோயிலாக உள்ளது. உள்நுழைந்து வலமாக வரும்போது சூரிய தீர்த்தம் நீராழி மண்டபத்துடன் நல்ல கட்டமைப்புடன் உள்ளது. தெற்கு வாயிலின் வெளிப்புறம் ஆட்கொண்டார் சன்னிதி உள்ளது . இதன் அருகே ஒரு வேலியிட்ட பள்ளம் உள்ளது . இதில் குங்கிலியம் இட்டுப்புகைக்கும் பழக்கம் உள்ளது . மக்கள் அருகில் உள்ள கடைகளில் குங்கிலியம் வாங்கி இங்கு எரியும் நெருப்பில் கொட்டுகின்றனர். குளம் கடந்து நேரே சென்றால் அப்பருக்கு கைலாய காட்சி அருளிய சுவாமி கோயில் தனிக்கோயிலாக உள்ளது . 3 நிலைகொண்ட கோபுரத்தை கடந்து உட்சென்றால் அழகிய வேலைப்பாடமைந்த தூண்கள் உள்ளன. வலப்பால் அப்பர் பெருமான் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். மூலவர் லிங்கரூபம். பின்னால் சுவாமி அம்பாள் நின்ற கோலம் உள்ளது. இக்கோயில் வாசலில்தான் அப்பருக்கு கைலாய காட்சி தந்த ஐதீகம் நடைபெறுகிறது. அடுத்து உள்ளது மேலக் கோபுர வாயில். 7 நிலைகள் கொண்டு சிற்பங்களுடன் பொலிவுடன் விளங்குகிறது. அடுத்து இடப்பால் உலகமாதேவீச்சரம் என்று வழங்கப்படும் தனிக்கோயில் உள்ளது. இப்பிரகாரத்தில் ஒலி கேட்கும் இடம் என்று குறிப்பிட்டுக்காட்டியுள்ள இடத்தில் நின்று கற்சுவரில் அமைக்கப்பட்டுள்ள சிறிய குழியில் வாய் வைத்து உரத்த குரலில் ஐயாறா என்றழைத்தால் அவ்வொலி பன்முறை கேட்பதைக் காணலாம். பிரகாரச்சுற்று முடிந்து கொடிமரம் தாண்டினால், பெரிய மண்டபம் உள்ளது. நீண்ட விசாலமான மண்டபம். மூலவர் நுழைவு வாயிலுக்கு பக்கம் உள்ளமண்டபத்தில் ஒரு இரும்புப் பேழையில் மரகத லிங்கம், ஸ்படிக இலிங்கம், ஸ்படிக அம்பாள் ஆகியன வைக்கப்பட்டுள்ளன. இதற்கு நாடோரும் காலையில் பூஜை நடக்கிறது. சுதையாலான துவாரபாலகர் ஆகியோரை தொழுது துவார வினாயகரையும் முருகரையும் வணங்கி நேரே பார்த்தால் பஞ்சநதீஸ்வரர் தெரிகிறார். உட்பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் சுவர்களில் பல்வகை வரலாற்றுச் சிற்பங்கள் எழுதப்பட்டுள்ளன. பவானி நாதர், ஆதி வினாயகர், நவகிரகங்கள் மற்றும் சந்திரசேகரர் சன்னிதிகள் உள்ளன. ஆவுடை வினாயகர் தரிசிக்கத்தக்கது. சண்டேசர் சன்னிதி தனிக்கோயிலாக உள்ளது . விமானத்தில் ஒருபுறத்தில் பாற்குட அபிஷேகக் காட்சியும் மற்றொருபுறத்தில் இறைவன் விசாரசருமருக்கு சண்டேச பதத்தையருளும் காட்சியும் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளன. ஜுரஹுரேஸ்வரர் சன்னிதி உள்ளது.

மூலவர் அழகான சுயம்புத்திருமேனி. மூலவர் மீது கவசம் சார்த்தப்பட்டுள்ளது. இக்கவசத்தில் பசுவின் உருவமும் அதன் மீது சூலமும் பொறிக்கப்பட்டுள்ளது. இதனால் சுவாமிக்கு திரிசூலி என்ற பெயரும் சொல்லப்படுகிறது. அலங்காரம் செய்து பார்க்கும் நிலையில் சிவலிங்கத்திருமேனி, பாம்பு படமெடுப்பதுபோலவும், கொண்டை போட்டிருப்பது போலவும் பலவித வடிவங்களில் தோன்றுவதை காணலாம் . சுவாமிக்கு, புனுகு சட்டம் மட்டுமே சார்த்தப்படுகிறது. அதுவும் கைபடாமல் சார்த்த வேண்டும். மற்ற அபிஷேகம் எல்லாம் ஆவுடையாருக்கே. மூலவர் கருவறை அகழி அமைப்புடையது. கோஷ்ட மூர்த்தமாக தக்ஷிணாமூர்த்தி உள்ளார். இதனால் இதை தக்ஷிணாமூர்த்தி பிரகாரம் என்கின்றனர். சுவாமி ஜடாபாரமாக இருப்பதாக ஐதீகம். ஆதலால் இப்பிரகாரத்தில் எவரும் நுழைந்து வலம் வரக்கூடாதென்பர். அம்பாள் ஆலயம் தனிக்கோயிலாக பக்கத்தில் உள்ளது. கிழக்கு நோக்கியது. கவசமிட்ட கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியன உள்ளன. உள்மண்டபம் மிகுந்த சிற்ப வேலைப்பாடுகளைக்கொண்டது . இழைக்கப்பட்ட கருங்கல்லால் ஆனது. அம்பாள் நின்ற தவக்கோலம். அபயகரமும் தொடையை தொட்டுக்கொண்டிருப்பதுபோல மற்றொரு கரமும் உள்ள அமைப்பு.

தேவாரப்பதிகம்:

புலன் ஐந்தும் பொறி கலங்கி நெறி மயங்கி அறிவு அழிந்திட்டு ஐம்மேல் உந்தி அலமந்த போதாக அஞ்சேல் என்றுஅருள் செய்வான் அமருங் கோயில்வலம் வந்த மடவார்கள் நடமாடமுழவு அதிர மழையென்று அஞ்சிச்சில மந்தி அலமந்து மரமேறி முகில் பார்க்கும் திருவையாறே.”

சம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 51 வது தலம்

திருவிழா: – மகா சிவராத்திரி

பிரார்த்தனை:

திருமணத்தடைநீங்க, குழந்தைச்செல்வம்பெற, கல்வியில்சிறந்துவிளங்க, இறைவனைவேண்டிக்கொள்ளலாம்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

வழிகாட்டி:

தஞ்சை மாவட்டத்திலுள்ள சற்றே பெரிய ஊர். தஞ்சைக்கு வடக்கில் 13 கீமீ தொலைவில் உள்ளது. குடந்தையிலிருந்து 32 கீ மீ. அரியலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய ஊர்களிலிருந்தும் பேருந்துகள் உள்ளன. தியாகராஜ ஆராதனை இங்கு மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுவது தமிழ்நாட்டில் அனைவரும் அறிந்த ஒன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *