அருள்மிகு வில்வவனேசுவரர் திருக்கோயில், திருவைகாவூர்

அருள்மிகு வில்வவனேசுவரர் திருக்கோயில், திருவைகாவூர், தஞ்சாவூர் மாவட்டம்.

+91-94435 86453, 96552 61510 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வில்வவனேசுவரர்
அம்மன் வளைக்கைநாயகி
தல விருட்சம் வில்வமரம்
தீர்த்தம் எமதீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருவைகாவூர், வில்வவனம்
ஊர் திருவைகாவூர்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர்

தவநிதி என்ற முனிவர் தவம் செய்து கொண்டிருக்கையில் மான் ஒன்றைத் துரத்திக்கொண்டு வேடன் வந்தான். மானுக்கு முனிவர் அபயமளித்ததால் கோபம் கொண்ட வேடன் முனிவரை தாக்க ஆரம்பித்தான். உடனே சிவபெருமான் புலிவடிவமெடுத்து வேடனைத் துரத்தினார். வேடன் பயந்தோடி அருகிலிருந்த ஒரு வில்வ மரத்தில் ஏறிக்கொண்டான். புலியும் மரத்தடியிலேயே நின்றது. வேடன் வேறுவழியின்றி மரத்திலேயே இரவு முழுதும் தங்கியிருந்தான். இரவில் தூக்கம் வந்து கீழே விழுந்துவிடுவமோ என்று நினைத்த வேடன் ஒவ்வொரு இலையாக பறித்து கீழே போட்டுக் கொண்டிருக்க அவை புலி வடிவிலிருந்த சிவபெருமான் மீது விழுந்து கொண்டிருந்தன. அன்று மகா சிவராத்திரி நாள். ஊன் உறக்கம் இன்றி சிவபெருமானை வழிபட்ட புண்ணியம் வேடனுக்கு அவனையறியாமல் கிட்டியதால் இறைவன் காட்சி தந்து மோட்சம் தந்தார். அன்று அதிகாலையில் அவனது ஆயுள் முடிவதாக இருந்ததால் யமன் அங்கு வந்தான். நந்தி தேவன் இதை பொருட்படுத்தவில்லை. சிவபெருமான் தட்சிணாமூர்த்தி வடிவில் கையில் கோல் ஏந்தி விரட்டினார். யமனை உள்ளே விட்ட குற்றத்திற்காக நந்தி மீது கோபம் கொண்டார். அவருக்கு பயந்து நந்தி யமனை தன் சுவாசத்தால் கட்டுப்படுத்தி நிறுத்தி விட்டார். பின் யமன் சிவனை வணங்க அவன் விடுவிக்கப்பட்டான். பின்பு ஆலய எதிரில் குளம் அமைத்து சிவனை வழிபட்டுச் சென்றதாக தல வரலாறு கூறுகிறது.

சிவனுக்கு சிறப்பு பூஜைகளுடன் சிவராத்திரி விழா இங்கு விமரிசையாக நடக்கும். மறுநாள் அமாவாசையன்று கோபுரத்தின் கீழே வேடனை நிறுத்தி, கருவறையில் சிவனுக்கும், அதன்பின் வேடனுக்கும் தீபாராதனை காட்டுவர். வேடன், மோட்சம் பெற்றதை நினைவுபடுத்தும் வகையில் இவ்வாறு செய்கின்றனர். பின், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளுடன், வேடன், வேடுவச்சியும் புறப்பாடாவர். மதியம் எமதீர்த்தத்திற்கு பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி காண்பர். இரவில் சுவாமி, அம்பாள் இருவரும் ஒரு ஓலைச்சப்பரத்தில் எழுந்தருளுவர். இந்த சப்பர பவனியும் விசேஷமானது. இதற்காக மூங்கில் கீற்றில், தென்னை ஓலைகளைக் கட்டி பிரத்யேகமாக தயாரிக்கப்படும் சப்பரம் இது.
இங்கு துவாரபாலகர்கள் கிடையாது. பெருமாள், பிரம்மா இருவரும், துவாரபாலகர்கள் இடத்தில் உள்ளனர். அருகில் கையில் வீணை ஏந்திய தெட்சிணாமூர்த்தி இருக்கிறார். உத்தால முனிவரிடம் சாபம் பெற்ற சப்தகன்னிகளும், இங்கு சிவனை வேண்டி நிவர்த்தி பெற்றனர். இங்குள்ள சுப்பிரமணியர் சிலை கலையம்சத்துடன் வடிக்கப்பட்டுள்ளது. சிக்கல், எண்கண், எட்டுக்குடி, பட்டுகுடி ஆகிய தலங்களிலுள்ள கலையம்சமான முருகன் சிலை வடித்த சிற்பியால் செய்யப்பட்ட சிலை இது. முருகன் கையிலுள்ள ரேகைககள், மயிலின் தோகைகள், மயிலின் அலகில் உள்ள நாகத்தின் நளினமான உடல் அனைத்தும் தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளன. அருணகிரிநாதர் இவரைப் போற்றி திருப்புகழ் பாடியுள்ளார். கோயில் முகப்பில் வேடனை, புலி விரட்டிய சம்பவம் சுதை சிற்பமாக உள்ளது.

இந்த கோயிலில் உள்ள அம்பாள் வளைக்கை நாயகி (சர்வஜன ரட்சகி)” மிகவும் அருள் வாய்ந்தவர். வெள்ளிக் கிழமை செவ்வாய் கிழமைகளில் மாலை 6 லிருந்து 7:30 க்குள் அம்பாளுக்கு அர்ச்சனை செய்தல் விசேசம். குறைகள் எதுவென்றாலும் கூறலாம். அவ்வாறு கூறும்போது அம்பாளுக்கு எதிரில் உள்ள ஸ்ரீசக்கரம் அருகில் நின்று பிரார்த்தனை செய்ய வேண்டும். அம்பாளே பேசுவது நம்மால் உணர முடியும். இங்கு நின்று வழிபட்டுக்கொண்டிருக்கும்போதே சுவாமி சந்நிதியில் தீபாராதனை காட்டி முடித்து விட்டு அம்பாள் சந்நிதிக்கு வந்து நம் பிரார்த்தனை இன்னது என்றும் அது இத்தனை நாளில் கை கூடும் என்று கூறிவிடுவார். இவர் கூறியதுபோலவே எல்லா விசயங்கள் நிகழ்ந்திருப்பதாக இத்தலத்து பக்தர்கள் கூறுகின்றனர்.

வேதங்கள் வில்வ வடிவில் நின்று இத்தலத்தில் தவம் புரிவதாகத் புராணம் கூறுகிறது. ஊழிக் காலத்தில் அனைத்தும் அழியக்கூடும் என்பதை உணர்ந்த வேதங்கள், சிவபெருமானை வணங்கி, தாம் அழியாமலிருக்க உபாயம் கேட்டதாகவும் அப்பெருமானின் ஆலோசனையின்படி இத்தலத்தில் வில்வ மரமாக நின்று தவம் புரிந்து வழிபடுவதாகவும் இதனால் இத்தலத்துக்கு வில்வ ஆரண்யம் என்றும் சுவாமிக்கு வில்வவனேசுவரர்என்றும் பெயர் வந்ததாகவும் கூறுகின்றனர். பிரம்மாவும் விஷ்ணுவும் இத்தலத்தில் இருப்பதால் மும்மூர்த்திகள் தலம் என்று போற்றப்படும் தலம் இது. மணக்கோலத்தில் மணமக்கள் எவ்வாறு ஒரே நேர்கோட்டில் உட்கார்ந்திருப்பரோ அது போல் சுவாமி, அம்பாள் சந்நிதிகள் உள்ளன. தீர்த்தங்களில் குளித்தாலோ அல்லது தெளித்து கொண்டாலோ பிணிகள் நீங்கும். தோசங்கள் விலகும்.

மற்ற இடங்களில் சப்த மாதாக்கள்தான் வழிப்பட்டதாக இருக்கும். இத்தலத்திலோ சப்த கன்னிகள் வழிபட்டுள்ளனர். குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட கோயில் இது.

சிவன் பார்வதி இருவரும் மனம் மகிழ்ந்து தங்கிய இடம் திருவைகாவூர். யமபயம் தீர்த்த தலமாக திருவைகாவூர் விளங்குகிறது. இந்த ஊரில்தான் சிவராத்திரி பிறந்தது என்பது ஐதீகம்.

இத்தலத்தில் ராஜகோபுரம் இல்லை. முகப்பில் விநாயகர் காட்சி தருகின்றார். முகப்பு வாயில் மட்டுமே ஐந்து கலசங்களுடன் கிழக்குநோக்கி காட்சி தருகிறது. உள் நுழைந்தால் நந்தி நம்மைநோக்கி திரும்பி (கிழக்குநோக்கி) இருப்பதைக் காணலாம். உள் கோபுரவாயில் நுழைந்தால் வாயிலில் இடப்பால் வேடன் நிகழ்ச்சி கதையால் சித்தரிக்கப்பட்டிருப்பதைக் கண்டு மகிழலாம். வெளிப் பிராகாரத்தில் சப்தகன்னியர் சந்நிதியும், சுந்தரமூர்த்தி விநாயகர் சந்நிதியும், வள்ளிதெய்வானையுடன் கூடிய ஆறுமுகப்பெருமான் சந்நிதியும் உள்ளன. இத்தலத்தில்தான் வேறு எங்கும் காணமுடியாத வகையில் கையில் கோலேந்திய தட்சிணாமூர்த்தி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். நவகிரகங்கள் இத்தலத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தேவாரப்பதிகம்:

வேதமொடு வேள்விபல வாயின மிகுத்து விதியாறு சமயம் ஓதியும் உணர்ந்தும் உளதேவர் தொழ நின்றருள் செயொருவனிடமாம் மேதகைய கேதகைகள் புன்னையொடு ஞாழலவை மிக்க அழகால் மாதவி மணம்கமழ வண்டுபல பாடு பொழில் வைகாவிலே.

திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 48வது தலம்.

திருவிழா:

மாசி மாதம் மகா சிவராத்திரி 2 நாட்கள் திருவிழா அமாவாசை அன்று தீர்த்தவாரி. பஞ்சமுக மூர்த்திகள் வீதியுலா. இரவு ஓலை சப்பரத்தில் வீதியுலா(ஓலையாலேயே ரிஷபம், சுவாமி, அம்பாள், அனைத்துமே ஓலையால் கட்டி வீதியுலா நடைபெறுவது மிகவும் சிறப்பான ஒன்றாகும். ஆருத்ரா புறப்பாடு திருவாதிரை, விஜயதசமி, திருக்கார்த்திகை ஆகியவை இத்தலத்தில் மிகவும் விசேசம்.

பிரார்த்தனை:

வில்வவனேசுவரரை வழிபட்டால் மனத்துயரம் நீங்கும். கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு வந்து வழிபடலாம். இத்தலத்து ஈசனை வணங்குவோர்களுக்கு மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம். வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *