அருள்மிகு திருக்கோடீஸ்வரர் திருக்கோயில், திருக்கோடிக்காவல்

அருள்மிகு திருக்கோடீஸ்வரர் திருக்கோயில், திருக்கோடிக்காவல்,(வழி) நரசிங்கன் பேட்டை, திருவிடை மருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.

+91-0435 – 2450 595, +91-94866 70043 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கோடீஸ்வரர்(வேத்ரவனேஸ்வரர்), கோடிகாநாதர்
அம்மன் திரிபுர சுந்தரி, வடிவாம்பிகை
தல விருட்சம் பிரம்பு
தீர்த்தம் சிருங்கோத்பவ தீர்த்தம், காவிரிநதி
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் வேத்ரவனம்
ஊர் திருக்கோடிக்காவல்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருஞானசம்பந்தர், சுந்தரர், திருநாவுக்கரசர்

மந்திரங்கள் தவறான கொள்கைக்கு பயன்படுத்தப்பட்டதால் மந்திரங்கள் மீதே கோபப்பட்ட துர்வாசர், மந்திரத்திற்கு சாபம் கொடுத்தார். மூன்று கோடி மந்திரங்களும் சாப விமோசனம் பெற இத்தலத்திற்கு வந்து சிவனின் முன்னிலையில் சரியாக உச்சரிக்கப்பட்டு சாபவிமோசனம் பெற்றன. அதேபோல் மூன்று கோடி தேவர்களும் இத்தல இறைவனைத் தரிசனம் செய்துள்ளனர். எனவே இத்தல இறைவனின் திருநாமம் கோடீஸ்வரர்என்றும், ஊர் திருக்கோடிக்காஅழைக்கப்பட்டது.

கிருத யுகத்தில், பன்னீராயிரம் ரிஷிகளும் மூன்று கோடி மந்திர தேவதைகளும், ஞானமுக்தி அடையும் பொருட்டு, வேங்கடகிரியில், திருவேங்கடமுடையான் (வெங்கடேசப் பெருமாள்) திருச்சந்நிதியில், மந்திரங்களைக் கோஷித்துக் கொண்டிருந்தனர். அச்சமயம் அங்குவந்த துர்வாச மகரிஷிஇவர்களின் நோக்கத்தை அறிந்து, பரிகசித்தார். பின் அவர்களைப் பார்த்து, “சாயுஜ்ய முக்தியை தவத்தாலோ அல்லது மந்திர சக்தியாலோ பெற முடியாது. ஞானத்தால் மட்டும் தான் பெறமுடியும். குருவிற்கு பணிவிடை செய்து, அவரது ஆசியைப் பெற்று, அந்த ஆன்ம வித்தையைப் பயின்று, பிரம்ம ஞானம் பெற்று, பின் பரமேஸ்வரனின் அனுக்கிரகத்தால் மட்டும் தான் ஞானமுக்தி பெற முடியும்என்று கூறினார். இதைக் கேட்ட மந்திர தேவதைகளுக்கு கடும் கோபம் வந்தது. தங்கள் வலிமையைப் பழித்த துர்வாசரைத் தூற்றினர். “முக்தியடைய எங்களுக்கு சக்தியில்லை என்கிறீர்களா? வெங்கடாஜலபதியை குறித்து தவம் செய்து, இக்கணமே தாங்கள் முக்தியடையவோம்என்று சூளுரைத்தனர். தம்மையும் பிரம்ம வித்தையையும் அவமதித்த மந்திர தேவதைகளை, “நீங்கள் பலப்பல ஜென்மங்கள் எடுத்து துன்பப்பட்டு இறுதியில்தான் முக்தி பெறுவீர்கள். அதுவும் இந்த தலத்தில் கிடைக்காது. வெங்கடேசப் பெருமாளும் அதை உங்களுக்கு அளிக்க முடியாதுஎன்று துர்வாசர் சபித்தார். துர்வாசருடைய கோபத்தைப் பொருட்படுத்தாத மந்திர தேவதைகள், தாங்கள் சபதம் செய்ததுபோல், திருமயிலையிலேயே தங்கி புஷ்கரணியில் நாராயணனைத் குறித்து கடும் தவம் புரியத் தொடங்கினர்.

ஆனால் பன்னீராயிரம் ரிஷிகள், துர்வாசருடைய அறிவுரையை ஏற்று, அவரைப் பின் தொடர்ந்து காசிக்குச் சென்றனர். அங்கு மணிகர்ணிகையில் நீராடி, டுண்டிகணபதி, விஸ்வேஸ்வரர், விசாலாட்சி, பிந்துமாதவர் மற்றும் காலபைரவரை தரிசனம் செய்தனர். மகரிஷிகளுக்கு எதை உபதேசம் செய்வது என்று துர்வாசர் சிந்தித்துக் கொண்டிருக்கும் சமயம், காசிவிஸ்வநாதர் அவரது கனவில் தோன்றி, மகரிஷிகளுக்கு பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசம் செய்து அத்யாத்மவித்தையை கற்றுத் தரும்படியும், ஒரு மாதம் காசியில் தங்கிவிட்டு, பின் மகரிஷிகளுடன் திருக்கோடிக்கா வரும்படியும் கட்டளையிடுகிறார். அவ்வாறே துர்வாசர் திருக்கோடிக்கா தலத்திற்கு வந்து சேர்ந்தார். பின் திருக்கோடீஸ்வரரின் ஆணைப்படி, மகரிஷிகளுக்கு சிருங்கோத்பவ தீர்த்தத்தில் ஸ்நானம் செய்வித்து, அத்தீர்த்தத்தை சிறிது கையில் எடுத்துக்கொண்டு, அவர்களுடன் முக்கோடி மந்திரமந்திரதேவதைகள் கடுந்தவம் புரியும் இடமான திருமயிலைக்கு வந்தார்.

அப்போது திருக்கோடீஸ்வரர், அம்பாள் திரிபுரசுந்தரி மற்றும் இரு புத்திரர்கள், பரிவாரங்களுடன் வந்து தரிசனம் கொடுத்தார். சுவாமியின் முன்னிலையில் துர்வாசர் தன் கையில் கொண்டு வந்திருந்த, சிருங்கோத்பவ தீர்த்தத்தை, பன்னீராயிரம் ரிஷிகளுக்கும் தலையில் தெளிக்க, அப்போது ஓர் ஜோதி தோன்றி முனிவர்கள் யாவரும் அதில் ஐக்கியமானர்கள். அவர்களுக்கு ஞான முக்தி கிட்டிவிட்டது. இதைக் கண்ணுற்ற மந்திரதேவதைகள், துர்வாசரைப் பார்த்து, “உங்கள் முயற்சியாலோ, பரமேசுவரனின் அருளாலோ மகரிஷிகளுக்கு ஞானமுக்தி கிடைக்கவில்லை. அவர்களுடைய பூர்வ ஜென்ம கர்மபலன்களால் தான் அது கிட்டியது. நாங்கள் எப்படியாவது, நாராயணனிடமிருந்தே ஞான முக்தியை பெறுவோம் பாருங்கள்என்று சூளுரைத்தார்கள். மந்திரதேவதைகளின் கர்வம் இன்னும் அடங்கவில்லை என்பதைக் கண்ணுற்ற துர்வாசர் கோபம் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார். சுவாமி புஷ்கரணியின் கரையில் தவமிருந்த திரிகோடி மந்திரதேவதைகளுக்கு பல இடையூறுகள் ஏற்படவே, அவை அங்கிருந்து புறப்பட்டு பத்ரிகாச்சரம், நைமிசாரணியம், துவாரகை, கோஷ்டிபுரம் முதலிய வைணவ தலங்களுக்குச் சென்று தங்கள் தவத்தைத் தொடர்ந்தனர். அவர்கள் முன் நாராயணன் தோன்றி, “நீங்கள் துர்வாசரை விரோதித்துக்கொண்டு, அவரது கோபத்திற்கு ஆளானது மிகத்தவறு. என்னால் உங்களுக்கு சாயுஜ்ய முக்தி தர இயலாது. பரமசிவனால் மட்டும்தான் அது சாத்தியம். ஆகவே அவரை வழிபடுங்கள்எனக் கூறுகிறார்.

மாற்றமடைந்த முக்கோடி மந்திர தேவதைகள், அடுத்து என்ன செய்வது என்று புரியாமல், திகைத்து நின்றபோது நாரத முனிவர் தோன்றி பரமேஸ்வரனால் மட்டுமே ஞான முக்தி தரமுடியும்என வலியுறுத்துகிறார். துர்வாசர் போன்றே, இவரும் கூறியதைக் கேட்டு, கோபமடைந்த மந்திரதேவதைகள், நாரதரையும் இழிவாகப் பேசினர். நாரதர் அவர்களைப் பார்த்து, “நீங்கள் நூறு ஜென்மங்கள், மீண்டும் பிராம்மணர்களாகப் பிறந்து, கடைசி ஜென்மத்தில் நாராயணனின் அனுக்கிரகத்தால் முக்தி பெறுவீர்கள்என்று கூறி மறைந்து விடுகிறார். இதைக் கேட்டு ஓரளவு சமாதானம் அடைந்த மந்திரதேவதைகள் பிராம்மண வடிவம் ஏற்று, நூற்றெட்டு திவ்ய தேசங்களிலும், நாராயணனைக்குறித்து, தவமிருந்து விட்டு, கடைசியாக, சுவேத தீவிற்கு வந்தனர். இவர்களது தீவிர தவத்தைக் கண்டு, என்ன செய்வது என்று புரியாத நாராயணன், வீரபத்திரரிடம் செய்தியைக் கூறி, ஆலோசனை கேட்கிறார். வீரபத்திரர் அவரிடம் திருக்கோடிக்கா தலத்தின் மகிமையை எடுத்துக் கூறுகிறார்.

இந்த உலகில் பாவக சேத்திரம் ஒன்று உள்ளது. அது அரசமரத்தைத் தல விருட்சமாகக் கொண்டது. அங்கு ஈசன், திருக்கோடீஸ்வரர் என்ற பெயருடன் திரிபுரசுந்தரி தேவியுடன் இருக்கிறார். அங்கே சிருங்கோத்பவ தீர்த்தம், சித்ர குப்த தீர்த்தம், யம தீர்த்தம், வருண தீர்த்தம், குபேரதீர்த்தம், அக்னி தீர்த்தம், துர்கா தீர்த்தம், பூத தீர்த்தம், காளி தீர்த்தம், நிர்நதி தீர்த்தம் என்ற தீர்த்தங்கள் உள்ளன.

இங்கு பரமசிவனை ஆராதித்து, தர்ம, அர்த்த, காம, மோட்ச என்கிற நான்கு தேவதைகள் சித்தி பெற்றன. மேலும் சப்தரிஷிகளும், சனாகதி முனிவர்களும் மற்றும் அநேக மகான்களும் சித்தி பெற்றுள்ளார்கள். தவிர, ஜமதக்னி முனிவரின் புதல்வரான பரசுராமர், தன் தாயைக் கொன்றதால் ஏற்பட்டமாத்ருகத்திதோஷம், ஸ்ரீ ராமருக்கு ஏற்பட்ட பிரம்மகத்திதோஷம், பிரலம்பாசுரனைக் கொன்றதால் பலராமனுக்கு நேர்ந்த பாவம், தட்சயாகத்தில் பலபேரைக் கொன்றதால் எனக்கும், காளிக்கும் ஏற்பட்ட பாபம் இவற்றிற்கெல்லாம், திருக்கோடிக்கா தலத்தில்தான் பாப நிவர்த்தி கிடைத்தது.” இவ்வாறு இத்தல மகிமையைக் கூறி திருக்கோடிக்கா சென்று தவமிருக்கும்படி வீரபத்திரர் ஆலோசனை கூறுகிறார். நாராயணனும் அவ்விதமே, திருக்கோடிக்கா வந்து, இங்குள்ள சிருங்கோத்பவ தீர்த்தத்தில் நீராடி, அரசமரத்தைப் வலம்வந்து, ஈசுவரனைக் குறித்து தவமிருந்து, அசுவமேத யாகங்கள் செய்ய, ஈசுவரன் மனம் மகிழ்ந்து, நாராயணன் முன்தோன்றி, அவரது விருப்பம் என்னவென்று வினவுகிறார். நாராயணன் மூன்று கோடி மந்திரங்களுக்கு எப்படியாவது முக்தி தரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார். “நீங்கள் தவம் இருந்ததாலும், பெரிய யாகங்கள் செய்ததாலும், உங்களுக்காக திரிகோடி மந்திரங்களுக்கு முக்தி அளிக்கிறேன்என்று பரமேஸ்வரன் வாக்குறுதி அளிக்கிறார். பின் நாராயணன், திரிகோடி பிராமணர்களிடம், அவர்களை திருக்கோடிக்கா சென்று, திருக்கோடீஸ்வரரைக் குறித்து, ஒரு வருடம் தவம் இருக்கும்படி கூறுகிறார். மந்திர தேவதைகளும், மகிழ்ச்சி அடைந்து, திருக்கோடிக்காவை அடைந்து, பரமேஸ்வரனைக் குறித்து, தவம் இயற்றத் தொடங்கினர். இத்தருணத்தில் நாரதர், துர்வாசரைத் சந்தித்து இன்னும் இரண்டு மாதங்களில், மந்திர தேவதைகளுக்கு, முக்தி கிடைக்கப்போகிறது. அதுமட்டுமன்று, அவர்களுக்கு இன்னும் புத்தி வரவில்லை. கர்வமும் அடங்கவில்லை. நாராயணனின் முயற்சியால், அவர் மூலமாகத்தானே தங்களுக்கு முக்தி கிடைக்கப்போகிறது என்று கூறுகிறார்கள். குரு சேவை செய்து, குரு பிரசாதமாக ஞான முக்தி அடைந்தால்தானே உங்களுக்கு வெற்றி கிடைத்ததாகும்எனக் கூறி கலகமூட்டி விடுகிறார். அதன் பலனாக துர்வாசரும் கடும் கோபம் கொண்டு கணபதியைத் தொழுகிறார். கணபதி தோன்றியவுடன், முக்கோடி மந்திரங்கள் தம்மை அவமதித்ததை கூறி, அவர்களுக்கு முக்தி கிடைக்குமுன், பல இடையூறுகளை உண்டு பண்ணவேண்டும் என்று கணபதியை வேண்டுகிறார். கணபதியும் துர்வாசரின் வேண்டுகோளுக்கினங்க, காவிரி நதியை திருக்கோடிக்காவுக்கு கொண்டு வந்து, நடு இரவில், எல்லோரும் நித்திரை செய்து கொண்டு இருக்கும் சமயத்தில் வெள்ளத்தைப் பெருகச் செய்து, மந்திர பிராமணர்களை அதில் முழ்கடித்து, திணற அடிக்கிறார். அந்த பிரவாகத்தில், மகா காளியும், வீரபத்திரரும், மகாகணபதியின் கட்டளையின் பேரில், திரிகோடி மந்திரதேவதைகளை மிகவும் துன்புறுத்தினார்கள். துர்வாசரும், நாரதரும் அக்காட்சியைக் கண்டு மகிழ்கிறார்கள். வேறு வழி தெரியாத, மந்திர பிராமணர்கள் இறுதியில் துர்வாசரிடம் சரணடைந்து, தாங்கள் செய்த தவறுக்காக வருந்துகிறார்கள். மேலும் அவரையும், நாரதரையும் போற்றி, வணங்கினர். பிறகு கணபதியைத் துதித்து, தங்களை வெள்ளத்திலிருந்து கரையேற்ற வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறார்கள். கணபதியும், ஒரு பிரம்மச்சாரியாக வந்து, அவர்களைக் காப்பாற்றி, கரையேற்றி விட்டு, “பிரம்ம வித்தையை பழிப்பதோ, வேத மார்க்கத்திற்கு விரோதமாக இருப்பதோ, மகான்களை தூற்றுவதோ, மாபெரும் பாபச் செயலாகும். உங்கள் கர்வத்தை அடக்குவதற்காகத்தான் இந்த தண்டனையைக் கொடுத்தேன்என்று அவர்களிடம் கூறிவிட்டு, தமது சுய வடிவத்தைக்காட்டுகிறார். தங்கள் தவறுகளை மன்னித்து முக்திக்கு வழிகாட்ட வேண்டும் என்று அவர்கள் கணபதியை வேண்ட, அவரும், “திருக் கோடிக்காவில் எழுந்தருளியிருக்கும் சுவாவமியைப் பூஜை செய்யுங்கள், உங்களுக்கு முக்தி கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்என்று கூறி மறைகிறார். பின் மந்திர பிராமணர்கள் துர்வாசரை அணுகி, முறையாக சிவ ஆராதனை செய்யும் வழியை கூறும்படி வேண்டுகிறார்கள். “அகஸ்தியர் வந்து உங்களுக்கு எல்லாம் விளக்குவார்.” என்று துர்வாசர் கூறிவிட்டு, நாரதருடன் சென்று விடுகிறார். நான்கு நாட்கள் கழித்து, லோபா முத்திரையுடன், அகத்தியர், திருக்கோடிக்கா வந்து சேருகிறார்.

திரிகோடி மந்திரதேவதைகள் வேண்டுகோளின்படி, அவர்களுக்கு அத்யாத்ம வித்தையை உபதேசம் செய்து, முத்திரைகளை சொல்லித்தந்து, சிவபூஜா விதிகளையும், எல்லா மந்திர சாஸ்திரங்களையும் கற்றுக் கொடுக்கிறார். அவரோடு சேர்ந்து, மந்திர பிராமணர்கள், சாஸ்தா, காளி, துர்க்கை மற்றும் வீரபத்திரர் ஆகியோரைப் பூஜை செய்தனர். பின் அகத்தியர், திருக்கோடீஸ்வரருக்கு தென்மேற்கு பகுதியில், மணலால், கணபதியைப் பிரிதிஷ்டை செய்ய, எல்லோரும் சஹஸ்ர நாமத்தால் அக்கணபதியை பூஜை செய்தனர். பின்னர் திருக்கோடீஸ்வரரை சஹஸ்ர நாமத்தால் அர்ச்சனை செய்தனர். இந்த சஹஸ்ரநாமம் அபூர்வமானது. இதற்கு சமம் எதுவும் கிடையாது. இந்த சஹஸ்ரநாமத்தை திரிகோடி மந்திர தேவதைகளுக்கு, அகஸ்தியர் கற்றுக்கொடுத்தார். (அகஸ்தியருக்கு, சண்முகராலும், சண்முகருக்கு விநாயகராலும், விநாயகருக்கு சிறுவயதில் ஈஸ்வரியாலும் சொல்லிக் கொடுக்கப்பட்டதாகும்.) சிருங்கோத்பவ தீர்த்தத்தில், ஒரு சமயம் பரமேஸ்வரனும், பார்வதியும், ஜலக்கிரீடை செய்யும்போது, மிக்க சந்தோஷம் அடைந்த சுவாமியிடமிருந்து, திரிபுரசுந்தரியானவள், முதன் முதலில் இந்த சஹஸ்ரநாமத்தைக் கற்றுக் கொண்டாளாம். இத்தருணம், மகாகணபதி, முக்கோடி மந்திரதேவதைகள் முன் தோன்றி, தமது முர்த்தி ஒன்றை பிரதிஷ்டை செய்து, அவருக்கு துர்வாச கணபதி என்று பெயர் வைக்கும்படி கூறுகிறார். அதன்படி மந்தர தேவதைகள், நந்திக்கு சமீபம், கிழக்கே பார்த்து, ஒரு பிள்ளையாரை பிரிதிஷ்டை செய்து பூசித்தனர். மேலும் பைரவருக்கு தெற்கு பாகத்தில் நாதேஸ்வரர், சண்டிபீடேஸ்வரர், கஹோனேஸ்வரர்என்ற மூன்று இலிங்கங்களையும் பிரதிஷ்டை செய்து, பூஜை செய்தார்கள். இவற்றையெல்லாம் கண்டு, திருப்தி அடைந்த துர்வாசர், கைலாசம் சென்று, விநாயகரிடம், திரிகோடி மந்திரதேவதைகளின் முக்திக்காக சிபாரிசு செய்ய, கணபதியும் பரமஸ்வரனிடம் சென்று, நாராயணனுக்கு அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும்படி முறையிட்டார். அதன்படி, முக்திக்காக காத்திருக்கும் மூன்றுகோடி மந்திர பிராமணர்கள் முன், கைலாசபதி திருக்கோடிக்காவில் உள்ள சிவலிங்கத்தில் தோன்றினர். சுவாமி, சைகையால் சிருங்கோத்பவ தீர்த்தத்தைக் காட்டினார். அது அவர்களுக்குப் புரியவில்லை. இதைக் கண்ணுற்ற அதிகார நந்தி, தமது பிரம்பால், திருக்குளத்தைக் சுட்டிக்காட்டிய பின், அப்புனித தீர்த்தத்தில் அனைவரும் இறங்கி நீராடினார். அடுத்த கணம், நீரிலிருந்து ஒரு ஜோதி கிளம்பிற்று, அந்த ஒளிப்பிழம்பில், மூன்று கோடி மந்திர தேவதைகளும் ஐக்கியமாகி விட்டனர். அவர்களுக்கு ஞானமுக்தி” (சாயுஜ்ய முக்தி) கிட்டி விட்டது. அக்கணம் அங்கு குழுமியிருந்த சப்தரிஷிகள், பிரம்மாதி தேவர்கள், சனகாதி முனிவர்கள் முதலியோர், திருக்கோடீஸ்வரரைத் துதிக்கத் தொடங்கினார். பரமேஸ்வரன், கரம் உயர்த்தி அவர்களை ஆசீர்வதித்து விட்டு, திருக்கோடிக்கா தலத்தின் மகிமையை கூறலானார். “நந்தியின் கொம்பால் உண்டான, இந்த சிருங்கோத்பவ தீர்த்தக் கரையில் இருப்பது என்னுடைய தலம். இது எல்லா நலன்களையும் கொடுக்கும். எல்லோருக்கும் எல்லா இஷ்ட சித்திகளையும் அளிக்க வல்லது. இது பாவகம் என்ற உத்தம சேத்திரமாகக் கூறப்படுகிறது. பிரம்மாண்டத்தில், இதற்கு சமமாக ஒன்றைக் கூற இயலாது. ஒரு சமயம் கைலாசத்தையும், திரிக்கோடிக்காவையும் ஒரு தராசில் வைத்துப் பார்த்த போது, இத்தலம் உயர்ந்து, கைலாசம் கீழே போய்விட்டது. என்னுடைய திருமேனிக்கு சமமான பெருமை கொண்ட பூமி இது. இங்கே கணபதியின் மகிமையும் கூடியுள்ளது. இந்த இடத்தில் செய்யும் தியானம், ஹோமம், ஜபம், எல்லாம் மும்மடங்காகப் பலிக்கிறது. இங்கே காவிரி உத்திரவாஹினியாக இருக்கிறாள். என்னுடைய சந்நிதியில் இருக்கும் இந்த உத்திரவாஹினியில், கார்த்திகை மாதம், ஞாயிறு அன்று விடியற்காலையில் நீராடினால், எல்லா பாவங்களும் தொலைந்துவிடும்என பகவான் கூறினார்.

இத்தலத்தில் நவக்கிரகம் கிடையாது.
விதியின் பயனை யாராலும் மாற்ற முடியாது. ஆனால் குறைக்க முடியும். விதியினால் கஷ்டப்படுபவர்கள் இத்தலம் வந்து தரிசித்தால் அதன் பாதிப்பு குறையும்.

1) “காஎன்றால் சோலை எனப் பொருள்படும். “காஎன முடியும் ஐந்து சிவத்தலங்களை பஞ்ச காக்கள்என அழைப்பர். அவை திரு ஆனைக்கா (திருவானைக்காவல்). திருக்கோலக்கா (சீர்காழி சட்டநாதர் கோவில் எதிரில்), திருநெல்லிகா, (திருத்துறைப் பூண்டி), திருகுறக்குக்கா (நீடுர் அருகில்), மற்றும் திரு கோடிக்கா, ஆகும். சோலைகளுக்கு இடைய அமைந்து ஊர் என பொருள் கொள்ளலாம்.

2) “திரிகோடிஎன்றால் மூன்றுகோடி என்று பொருள் ஆகவே, மூன்று கோடி மந்திர தேவதைகளுக்கு ஏற்பட்ட சாபம் இத்தலத்தில் நீங்கியதால், “திரிக்கோடிக்காஎன்ற காரணப்பெயர் ஏற்பட்டு, நாளடைவில் திருக்கோடிக்காவல்என்று மருவி இருக்கலாம்.

சிவபுராணத்தில் பன்னிரெண்டாவது அத்தியாயத்தில் விவரிக்கப்படும், மற்றொரு நிகழ்ச்சி, இத்தலத்தின் மகிமைக்கு மேலும் சிறப்பூட்டுவதாக அமைந்திருக்கிறது.

தன் கணவனைக் கொன்றுவிட்டு, நெறி தவறி தன் வாழ்க்கையை நடத்தி வந்த லோக காந்தா என்ற பெண்மணி, வாழ்க்கையின் இறுதிகாலத்தில், திருக்கோடிக்கா வந்து தங்க நேர்ந்தது. அவள் மரணமடைந்ததும், யமன், அவளைத் தண்டிக்க, நரகலோகம் அழைத்துச் செல்லுகிறான். சிவ தூதர்கள், இதை வன்மையாக கண்டிக்கின்றனர். யமதர்மராஜன், சிவபெருமானிடம் வந்து முறையிடுகிறார். “தமது தலமான திருக்கோடிக்காவோடு, சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிக்க யமனுக்கு அதிகாரம் இல்லை என்றும், காலதேச வர்த்தமானங்களால், இங்கு வந்தவர்களை எமன் கண்ணெடுத்தும் பார்க்கக் கூடாது என்றும், அந்த மண்ணை மிதித்தவர்களிடம் அவன் நெருங்கவே கூடாதுஎன்றும் கட்டளையிடுகிறார்.

பாவக சேத்திரமான திருக்கோடிக்காவில் ஸ்நான, ஜப, தப, தியானங்கள் செய்கிறவர்களை நான் எதுவுமே செய்ய முடியாது என்று யமதர்மராஜன், யமலோகத்தில் முழக்கமிடுகிறான். லோககாந்தா என்ற அந்தப் பெண்மணி இத்தலத்தில் சம்பந்தப்பட்டுவிட்டதால், யமனிடமிருந்து விடுபட்டு, பின் முக்தி அடைகிறாள்.

காசியைப் போல இத்தலத்தில் வாழ்பவர்களுக்கும் யமபயம் கிடையாது. இந்த நம்பிக்கையை உறுதி செய்வது போல, இவ்வூரில் ருத்ரபூமி (மயானம்) தனியாக இல்லை. இவ்வூரில் இறப்பவர்களை, காவிரி நதியின் மறுகரைக்கு கொண்டு சென்று, தகனம் செய்யும் வழக்கம் தொன்று தொட்டு இன்றுவரை தொடர்கிறது.

இவ்வூருக்கு மேற்கே அமைந்துள்ள சுக்ரத்தலமான கஞ்சனூர் கிராமத்தில் ஹரதத்தர் என்ற பெரியவர் வாழ்ந்து வந்தார். பிறப்பால் வைணவரானாலும், இவர் தீவிர சிவபக்தர். கண்பார்வைக் குறைவு உள்ளவர். தினமும் காலையில் கஞ்சனூரிலிருந்து கிளம்பி திருமாந்துறை, திருமங்கலக்குடி, திருக்குரங்காடுதுறை, திருவாவடுதுறை, திருவாலங்காடு மற்றும் திருக்கோடிக்கா ஆகிய சிவத்தலங்களை தரிசித்து விட்டு, அர்த்த ஜாம பூஜைக்கு, தனது சொந்த ஊரான கஞ்சனூர் ஆலயத்துக்கு திரும்பிவிடுவதை, தினம் தனது வழக்கமாகக் கொண்டவர். ஒரு நாள் மாலை, திருக்கோடிக்கா ஆலயத்தில், திருக்கோடீஸ்வரர் தரிசனத்தை முடித்துக் கொள்ளும் சமயம் பேய்மழை அடிக்க ஆரம்பித்து விட்டது. வெளியே புறப்பட முடியவில்லை. ஒரே இருட்டு வேறு, அவருக்கு நல்ல பார்வையும் கிடையாது. அர்த்த ஜாமம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. “கஞ்சனூர் போயாக வேண்டுமே? ஈஸ்வரா, இப்படி ஏன் சோதனை செய்கிறாய்என்று துயரப்பட்டுக்கொண்டே நடுங்கும் குளிரில் கோபுர வாசலில் காத்துக் கிடந்தார். அக்கணம் அவ்வழியே ஒர் அரிஜனன் வந்தார். “சுவாமி இதோ இந்தக் கம்பைப் பிடித்துக்கொள்ளுங்கள். உங்களை நொடியில் கஞ்சனூர் கொண்டுபோய்ச் சேர்த்து விடுகிறேன்என்றார். ஹரதத்தருக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. தெய்வாதீனமாக, அங்கு வந்த அரிஜனன் நீட்டிய கம்பைப் பற்றிக்கொண்டு வேகமாக நடந்து, கஞ்சனூரை அடைந்து. அங்கு கோயில் அர்த்தஜாம வழிபாட்டை இனிதாக முடித்தார். தக்க சமயத்தில் வந்த தனக்கு உதவி புரிந்த அந்த அரிஜனனுக்கு, கோயிலில் தனக்கு பிரசாதமாகக் கிடைத்த அன்னத்தையும், சுண்டலையும் வழங்கினார். அரிஜனனும் நன்றி சொல்லி, அதைப் பெற்றுக் கொண்டு போய்விட்டார். மறுநாள் காலை, திருக்கோடீஸ்வரர் ஆலயத்தில் நந்தி, அம்பாள், சுவாமி, விநாயகர் மற்றும் சுப்பிரமணியர் சந்நிதிகளில், அன்னமும், சுண்டலும் காணப்பட்டன. முதல் நாள் இரவு அரிஜனனாக வந்து, ஹரதத்தருக்கு கை கொடுத்து உதவியவர், திருக்கோடீஸ்வரர்தான் என்பதில் சந்தேகம் உண்டோ?

திருக்கோடீஸ்வரரைப் போல் திரிபுரசுந்தரி அம்பாளும், அருள்பாலித்த விபரம் வருமாறு.

1. ஆழ்வாருக்கு காட்சி கொடுத்தல்

ஆழ்வார்கள், வெங்கடாஜலபதியின் தரிசனத்திற்காக, திருப்பதி சென்றார்கள். அங்கு இறைவன், அவர்களுக்கு காட்சி தரவில்லை, மாறாக, “திருக்கோடிக்காவில் திரிபுரசுந்தரி அம்பாள், நீங்கள் விரும்பும் தரிசனம் கொடுப்பாள், அங்கே செல்லுங்கள்என்று அசரீரியாக உத்தரவு பிறந்தது. ஆழ்வார்களும், ஆவலுடன் புறப்பட்டு, திருக்கோடிக்காவை அடைந்தனர். ஊரை நெருங்கியபோது, காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதைக்கடந்து வரமுடியாமல் ஆழ்வார்கள் சிரமப்பட்டபோது, அகத்திய முனிவர், அவர்கள் முன் தோன்றி, ஆலயத்திலுள்ள கரையேற்று விநாயகரை, மனதில் பிரார்த்தித்துக் கொள்ளும்படி கோரினார். அவர்களும் அவ்வாறே செய்ய, காவிரியில் வெள்ளம் குறைந்தது. ஆழ்வார்கள், கரையைக் கடந்து ஆலயத்தினுள் வர, அங்கு அம்பாள் அவர்களுக்கு வெங்கடாஜலபதியாக தரிசனம் தந்தருளினாள்.

2. துர்வாசருக்கு காட்சி கொடுத்தல்

பிருங்கி முனிவர், தனித்த சிவமே பரம்பொருள் என்று துணிந்து சக்தியின்றி, சிவனை மட்டுமே வழிபடலானார். இதைக் கண்டு கோபம் கொண்ட அன்னை, அவருடைய கால்கள், இரண்டையும் செயலிழக்கச் செய்தாள், ஆனால், பிருங்கி முனிவர் சிவபெருமானிடம் முறையிட்டு, மூன்றாவதாக ஒரு காலைப் பெற்றுச் சிவனை சுற்றி வரலானார். இதைப் பார்த்த அன்னை, மேலும் கோபம் கொண்டு அவரை நடக்கவே முடியாதபடி முற்றிலும் சக்தி அற்றவராகச் செய்தார். மனம் தளராத பிருங்கி, சிவபெருமானைத் துதித்து வேண்டி, ஒரு வண்டாக உருப்பெற்று ஈசனை மட்டும் சுற்றிப் பறந்தார். இதைக் கண்ணுற்ற அன்னை, ஈசனிடம் வரம்பெற்று, அவர் உடம்பில் பாதி ஆனார். (அர்த்த நாரீஸ்வரர்). இதைச் சகிக்காத வண்டு உருவில் உள்ள பிருங்கி, அர்த்த நாரீஸ்வரரின் உடலில் பாதியை துளைத்து சிவனைதனிமைப்படுத்தும் காரியத்தில் இறங்கினார். இத்துடன் தனது சோதனையை நிறுத்திக்கொண்ட பரம்பொருள், அன்னையின் கோபத்தை தணித்து, பிருங்கியின் தீவிர சிவபக்தியை நிலைநாட்டி, அவரை ஆட்கொண்டார்.

துர்வாச மகரிஷி, “திருக்களர்என்ற ஊரில் பாரிஜாதவனேஸ்வரரை தரிசித்துவிட்டு, ஆருத்ரா தரிசனத்தன்று, ஸ்ரீ நடராஜரை வணங்கிவிட்டு, திருக்கோடிக்கா வந்தடைந்தார். திருக்கோடீஸ்வரரை தரிசிக்க, ஆலயத்தில் வேகமாக பிரவேசிக்கையில், அம்பாளின் சந்தியைத் தாண்டிச் சென்று விடுகிறார். இதைக் கண்ட திரிபுரசுந்தரி அன்னை, எங்கே பிருங்கி முனிவர் போல் துர்வாசரும், சிவன்வேறு, சக்தி வேறு, எனப் பிரித்து எண்ணிவிடுவாரோ என அஞ்சி. அதற்கு சந்தர்ப்பமே கொடுக்கக்கூடாது என்று எண்ணி, தானே வலியச் சென்று திருக்கோடீஸ்வருக்கு முன்னால் துர்வாசருக்கு காட்சி கொடுக்கிறாள் என்று ஒரு புராணக்கதையும், கூறப்படுகிறது.

திருக்கோயிலில், சுவாமி சந்நிதியில் திருக்கோடீஸ்வரருக்கும், துர்வாசர் சிலைக்கும் நடுவில், மகா மண்டபத்தில் காட்சி கொடுத்த அம்பாள் சிலை இருப்பது இக்கதைக் கருத்துக்கு வலுவூட்டுவதாக அமைந்துள்ளது.

மேற்கு திருச்சுற்றில் முதலில் உள்ள அறையில் நாகலிங்கம், காசி விஸ்வநாதர், விசாலாட்சி மற்றும் மனோன்மணி அம்பாள் விக்ரகங்கள் உள்ளது. அடுத்து முருகன் சந்நிதி. ஆறுமுகம், பன்னிரண்டு கைகளுடன், கைகளில் நாககனி, வில், பாணம் மற்றும் பிற படைக்கலங்களோடு வள்ளி, தேவானையுடன் அசுரமயில் வாகனத்தில் காட்சியளிக்கிறார். இதை அடுத்து ரிக், யஜுர், சாம, அதர்வண என்னும் நான்கு வேத சிவலிங்கங்கள் காணப்படுகிறது. அதையடுத்து கஜலட்சுமி விக்ரகம் இரு கால்களையும் தொங்கவிட்டுக் கொண்ட நிலையில் உள்ளது. இறுதியில் சனீஸ்வரனின் மனைவியான ஜேஷ்டாதேவி, தன் மகன் மாந்தி, மகள் மாந்தாவுடன் உள்ள சிலை உள்ளது. மாந்தாவின் கையில் தாமரை மலரும், மாந்தியின் முகம் ரிஷப முகமாயும், இம்மூன்றும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டு அற்புதமாய் காட்சியளிக்கிறது.

இனி வடபுற திருச்சுற்று சந்நிதிகளைப் பார்ப்போம். முதலில் திருக்கோடீஸ்வர் கருவறைச் சுற்றின் அருகில் கோயிலின் தல விருட்சமான பிரம்பு மரம் உள்ளது. அடுத்து அஷ்டபுஜ துர்க்கை வலக்கைகளில் சூலம், பாணம், கட்கம்(கத்தி), சங்கு, இடக்கைகளில் சக்ரம், வில், கேடயம் ஆகியவையும் உள்ளன. இடக்கை ஒன்றை தொடையில் ஊன்றி உள்ளார். துர்க்கையை ஒட்டி சண்டிகேஸ்வரர் தனிச்சந்நிதியும், அருகில் புஷ்கரணியும் (கிணறு) உள்ளது. இதைக்கடந்து சென்றால் பிரம்மாவுக்கு என்று ஒரு சிறு தனிச்சந்நிதி உள்ளது. இத்தல விநாயகர் கரையேற்று விநாயகர்என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இங்குள்ள மூலவர் ஐந்து நிலை ராஜகோபுரத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். உள்பிரகாரத்தில் கரையேற்று விநாயகர், கற்சிலை நடராஜர், சப்தரிஷிகள், அகத்தியர், சித்திரகுப்தர், யமன் முதலிய சன்னிதிகள் உள்ளன.

இக்கோயிலில் காணப்படும் கல்வெட்டு களிலிருந்தும் கோயில் அமைப்பிலிருந்தும் கீழ்க்கண்ட விபரங்கள் அறிய வருகிறது.

சுமார் 1250 வருடங்களுக்கு முன்பு கி.பி. எட்டாம் நூற்றாண்டில் (750) தழிழகத்தில் பல்லவர்களுடைய ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்த சமயம். நந்திவர்மபல்லவன் காலத்தில் இக்கோயிலின் கருவறை மட்டும் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது.

பின் கி.பி. 950 – 957க்கு இடைப்பட்ட காலத்தில் தஞ்சையை உத்தமசோழ மன்னர் ஆண்ட சமயம், அவருடைய தாயாரும் கண்டராதித்த சோழரின் மனைவியுமான செம்பியன்மாதேவியாரின் ஆணைப்படி செங்கற்களால் ஆன கோயில் இடிக்கப்பட்டு கருங்கற்களால் திரும்பக் கட்டப்பட்டது. அதற்குப் பிறகு வழிவழியாக நாட்டை ஆண்ட மன்னர்களால் இக்கோயிலின் மற்ற பகுதிகள் பல்வேறுகால கட்டத்தில் கட்டப்பட்டன.

ராஜராஜசோழன் காலத்தில் மூன்று நிலைக் கோபுரமும் பின்னர் மூன்றாம் குலோத்துங்கன் காலமான 13ம் நூற்றாண்டில் முன்வாயில் ஐந்து நிலை ராஜகோபுரமும் கட்டப்பட்டு திருப்பணிகள் நடத்திருக்க வேண்டும். அதற்குப் பிறகு 16ம் நூற்றாண்டில் தஞ்சை நாயக்கர் மன்னர் காலத்தில் பாழ்பட்ட பகுதிகள் திருத்தம் செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டதோடு முன் கோபுரமும் இக்காலத்தில் புதியதாக மறுபடியும் கட்டப்பட்டிருக்க வேண்டும் எனத்தெரிகிறது.

செம்பியன் மாதேவியார் கருங்கற் கோயிலாக திருப்பணி செய்த சமயம் மற்றொரு சிறந்த சேவையும் செய்தார். கோயிலில் ஆங்காங்கே சிதறுண்டு கிடந்த பழைய கல்வெட்டுகளைத் திரட்டி எடுத்து அதிலுள்ள விபரங்களை புதியதாகக் கட்டிய கருங்கற் சுவற்றில் திரும்பவும் செதுக்கச் செய்தார். இவ்வாறு மொத்தம் 26 கருங்கற் பலகைகளைப் பதித்து வருங்கால சந்ததியினர் இக்கோயிலின் வரலாறு அறிந்து கொள்ள பேருதவி செய்துள்ளார். பல்லவர்கால கல்வெட்டுக்கள் தஞ்சை மாவட்டத்தில் வேறு எங்கும் காணப்படவில்லை என்ற சரித்திர ஆராய்ச்சியாளர்களின் கூற்று இங்கே குறிப்பிடத்தக்கது.

கல்வெட்டுச் செய்திகள் இத்திருக்கோயிலில் மூன்று நிலைக் கோபுர நுழைவாயிலின் தென்புரம் மதிற்சுவற்றிலும் வாகன மண்டபத்தில் காட்சி கொடுத்த அம்பாள் சிலையின் வடபுறத்திலும் சுவாமியின் கருவறை வெளிப்புற சுவற்றிலும் காணலாம்.

செம்பியன் மாதேவியார் அவ்வாறு பாதுகாத்த கல்வெட்டுச் செய்திகளிலிருந்துதான் அவருக்கும் முந்தைய காலமான பல்லவர் ஆட்சியில் இக்கோயிலில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள் நமக்குத் தெரிய வருகிறது.

கி.பி. 850 ல் காஞ்சியை ஆண்ட நிருபதுங்கவர்ம பல்லவனின் மனைவி வீரமகாதேவியார் திருக்கோடீஸ்வரருக்கு, துலாபார நோன்பும் ஹிரண்யகர்ப்ப பூஜையும் செய்து தங்கம் தானமாக அளித்தார் என்றும் மற்றும் ஸ்வாமிக்கு எதிரில் ஒரு தூங்கா விளக்கு ஏற்பாடு செய்து அதற்கு வேண்டிய பொருளுதவியும் செய்தார் என்றும் தெரிகிறது.

கி.பி. 10ம் நூற்றாண்டின் முற்பகுதியில் பாண்டிய மன்னன் வரகுணபாண்டியன் இக்கோயிலில் உள்ள லெட்சுமி, சரசுவதி, கணபதி சன்னிதியில் மூன்று தீபங்கள் ஏற்றுவதற்காக தங்கக் காசுகள் வழங்கினான் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் கி.பி. 1264ம் ஆண்டு கல்வெட்டுகள் இரண்டு உள்ளது. அது பல்லவ மன்னன் கோப்பெருஞ்சிங்கன் காலத்தில் செதுக்கப்பட்டுள்ளது. இவ்வரசன் தஞ்சையை ஆண்ட மன்னன் மூன்றாம் இராசராசனைத் தோற்கடித்துச் சிறை பிடித்தவன். மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தவன். இவ்விருகல்வெட்டுகளில் இவ்வரசன் மாணிக்கவாசக ஸ்வாமிகளின் உலோகச் சிலையொன்றை இக்கோயிலுக்கு அளித்தது குறிப்பிடப்பட்டுள்ளது.

கி.பி. 950ல் செம்பியன் மாதேவியால் கட்டப்பட்ட இக்கோயிலை அவர் காலத்திற்குப் பிறகு நாட்டை ஆண்ட சோழ, பாண்டிய, பல்லவ மற்றும் நாயக்கர் அரச பரம்பரையினர் இக்கோயிலுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வழிபாடுகள் செய்து போற்றிப் பாதுகாத்து வந்துள்ளனர். கோயிலைப் பராமரிக்கவும் 6 கால பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் சிறந்த முறையில் நடைபெறும் பொருட்டும் ஏராளமான நிலங்களை இக்கோயிலுக்கு தானமாக வழங்கியுள்ளனர்.

தினமும் 5 குடம் தண்ணீர் காவிரி நதியிலிருந்து எடுத்துவந்து சுவாமிக்கு அபிசேகம் செய்யவும் அவ்வப்போது சுவாமிக்கு புனுகு காப்பு செய்யவும் அதற்காக புனுகு பூனைகள் கோயிலில் வளர்த்து வருவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுவந்ததும் மற்றும் பூஜைக்கு வேண்டிய புஷ்பங்கள், மாலைகள் ஆகியவற்றிற்காக தனியாக நந்தவனங்கள் ஏற்படுத்தி பராமரிக்கப்பட்டதும் மேற்கூறிய கல்வெட்டுகளிலிருந்து அறியப்படுகிறது.

பொதுவாக எல்லா சிவன் கோயில்களிலும் காணப்படும் சுதை வேலைபாடுகள் எதுவும் இக்கோயிலில் கோபுரத்திலோ அல்லது மதிற்சுவர்களிலோ காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பிரகாரத்தின் தளவரிசை சுமார் 1000 வருடங்களுக்கு முன்னால் செங்கற்களால் வேயப்பட்டிருந்தாலும் இன்றும் உபயோகத்திற்கு தகுதியுடையதாய் உள்ளது. மேலும் மழைக்காலத்தில் கோயிலின் உள்ளே தங்கும் நீர் அருகில் உள்ள திருக்குளத்தில் சேரும்படியாக அமைந்துள்ள வடிகால்களைப் பார்க்குமிடத்து பண்டைக்கால நம் முன்னோர்களின் கட்டிடக்கலை அறிவு நம்மை வியக்க வைக்கிறது.

கோயிலின் உள்ளே சிவபெருமானின் 64 லீலைகளில் பெரும்பான்மைகளை மிக நுட்பமாக பல்லவகால சிற்ப அமைவில் திருச்சுற்றிலும் ஏனைய பல இடங்களிலும் காணமுடிகிறது. சிற்பங்கள் யாவும் வெகு அற்புதம்.

ராஜகோபுர வாயிலில் காமதேனு கற்பக விருட்சம் குதிரை மற்றும் யானை வீரர்களின் போர்க்காட்சிகள் மனுநீதி சோழன், நீதிவரலாறு கண்ணனின் கோகுல லீலைகள் மிக நுணுக்கமாக செதுக்கப்பட்ட 22 விதவிதமான வாத்தியங்களை இசைக்கும் மாந்தர்கள் யாவும் கண்ணிற்கு விருந்தாய் அமைந்துள்ளன.

இதே போன்று திருக்கோடீஸ்வரரின் கருவறை வெளிச்சுவற்றின் தெற்குச் சுவரில் முதலில் கூத்தபிரான் உள்ளார். ஊன்றிய கால் தனியாகவே உள்ளது. இடப்புறம் சிவகாமி நின்ற கோலத்தில் திருபங்க நிலையில் உள்ளாள். வலப்பக்கம் காரைக்கால் அம்மையார் பேய் உருவில் தலைவிரி கோலமாய் தாளமிட்டப்படி சிவனது கூத்தினைக் கண்டு ஆனந்திக்கிறாள். திருவடியின் கீழ் இசைபாடுவோர். மத்தளம் அடிப்போர், தாளமிடுவோர் என மூன்று கணங்கள் உள்ளனர்.

அடுத்து வரிசையாக பிட்சாடனர், விஷ்ணுவின் மோகினி அவதாரம், ஒரு குள்ளபூதம், அமர்ந்த நிலையில் மகாகணபதி, அகத்திய முனிவர், தட்சிணாமூர்த்தி, அத்ரி முனிவர், பிருகு முனிவர் உள்ளார்கள். விமானத்தில் பிட்சாடனர் உருவம் எட்டு கரங்களுடன் சூலம் ஏந்தி அகோர தாண்டவமூர்த்தியாய் மிக நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது.

சுவாமியின் கருவறை மேற்குச் சுவற்றில் இலிங்கோத்பவர், மகாவிஷ்ணு நின்ற கோலம், அவருக்கு இருபுறமும் குத்ச முனிவரும் வசிஷ்டமுனிவரும் உள்ளனர். விமானத்தில் மகாவிஷ்ணு அமர்ந்த கோலத்தில் காணப்படுகிறார்.

வடக்குத் கருவறை சுவற்றில் முதலில் கௌதம மகரிஷியும் அடுத்து அக்கமாலை, கரகம், அபயஹஸ்தம், தொடையில் ஊன்றிய கைகளோடு பிரம்மாவும், தொடர்ந்து காஸ்யப ரிஷி, அஷ்டபுஷ துர்க்கை, அர்த்தநாரீஸ்வரர் உள்ளனர். விமானத்தில் பரமேஸ்வரன் காட்சி அளிக்கிறார்.

கிழக்குபுற விமானத்தில் ஸ்வாமி மற்றும் அம்பாள் சிற்பம் அமைந்துள்ளது.

இது 1008 ஈஸ்வரர்களால் சூழப்பட்ட தலம். சனிபகவானும் எமனும் எதிரெதிர் சன்னதியில் அருள்கின்றனர். அதேபோல் சித்திரகுப்தனும், துர்வாச முனிவரும் எதிரெதிர் சன்னதியில் உள்ளனர். இங்குள்ள சனிபகவான் பாலசனிஎன அழைக்கப்படுகிறார். இவரது தலையில் சிவலிங்கம் உள்ளது. காக வாகனத்திற்கு பதில் கருட வாகனம் உள்ளது. மங்கு, பொங்கு, ஸ்மரணச் சனி மூன்றிற்கும் வழிபடக்கூடிய சனிபகவான் இவர். இவ்வூரை ஒட்டி காவேரி நதி தெற்கிலிருந்து வடக்காகப் பாய்கிறது.

தேவாரப் பதிகம் :

இன்று நன்று நாளை நன்று என்று நின்று இச்சையால் போன்றுகின்ற வாழ்க்கையைப் போகவிட்டுப் போதுமின் மின்தயங்கு சோதியான் வெண்மதி விரிபுனல் கொன்றைதுன்று சென்னியான் கோடிகாவு சேர்மினே.

திருஞானசம்பந்தர்

தேவார பாடல் பெற்ற காவிரி வடகரை தலங்களில் இது 37வது தலம்.

திருவிழா:

நான்கு கால பூஜை. சித்திரை பௌர்ணமியன்று உற்சவம் நடைபெறுகிறது.

பிரார்த்தனை:

இங்குள்ள உத்திரவாகினியில் கார்த்திகை ஞாயிறு அன்று விடியற்காலையில் நீராடினால் எல்லாப் பாவங்களும் தொலையும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

2 Responses to அருள்மிகு திருக்கோடீஸ்வரர் திருக்கோயில், திருக்கோடிக்காவல்

  1. பாலா says:

    வணக்கம் விளக்கம் அருமை.இத்திருக்கோவிலின் சகரஸ்நாமம் கிடைத்தால் தெரிவிக்கவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *