அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயில், சேண்பாக்கம்

அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயில், சேண்பாக்கம்– 632008 , வேலூர் மாவட்டம்

+91-416 – 229 0182, 94434 19001 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – செல்வ விநாயகர்

தல விருட்சம்: – வன்னிமரம்

பழமை: – 500-1000 வருடங்களுக்கு முன்

புராண பெயர்: – சுயம்பாக்கம்

ஊர்: – சேண்பாக்கம்

மாவட்டம்: – வேலூர்

மாநிலம்: – தமிழ்நாடு

மராட்டிய அமைச்சரான துக்காஜி தனது தேரில் இவ்வழியாக வந்து கொண்டிருந்தபோது ஓரிடத்தில் சக்கரத்தின் அச்சு முறியவே கீழே இறங்கிப் பார்த்தார். சக்கரத்தின் கீழிருந்து ரத்தம் கொப்புளித்தது. பயந்து போன துக்காஜியிடம் விநாயகரின் அசரீரி தோன்றி, “இவ்விடத்தில் ஏகாதச (11) வடிவில் நான் இருக்கிறேன். என்னை வெளிக்கொண்டு வா,” என்றது. அதன்படி துக்காஜி லிங்க வடிவில் இருந்த 11 விநாயகர்களையும் எடுத்து நிறுவனம் செய்தார். மூலவரான செல்வ விநாயகரின் முதுகின் வலது பக்கத்தில் தேர் சக்கரம் ஏறிய வடு இன்னமும் உள்ளது.

இங்கு விநாயகர் 11 சுயம்பு மூர்த்திகளாக அருள்பொழிகிறார் .

ஆரம்பகாலத்தில் செண்பகக் காடாக இருந்ததால் இப்பகுதி செண்பகவனம் என அழைக்கப்பட்டதாம். சுயம்புவாக விநாயகர் சபை அமைத்து இருப்பதால் சுயம்பாக்கம்என இத்தலத்திற்கு பெயர் வந்ததாம். அதுவே மருவி சேண்பாக்கம் எனப் பெயர் வந்தது எனவும் கூறப்படுகிறது.

ஆதிசங்கரர் வழிபாடு:

ஆதிசங்கரருக்கு சுயம்புமூர்த்தி தரிசனம் செய்வதில் மிகவும் விருப்பம். சேண்பாக்கத்தில் 11 சுயம்புமூர்த்திகள் இருப்பதை அறிந்து இத்தலம் வந்தார். 11 சுயம்புமூர்த்திகளும் லிங்க வடிவில் இருப்பதைக் கண்டார். பின் தன் அகக்கண்ணால் அனைத்து லிங்கங்களும் விநாயகரே என்பதை அறிந்தார். சுயம்பு மூர்த்திகளுக்கு எதிரில் ஈசான்ய மூலையில் ஸ்ரீசக்கரம் நிறுவினார். ஆதிசங்கரரின் வழிபாட்டிலிருந்தே இந்த கோயிலின் பழமையும் சிறப்பும் விளங்கும். இந்த யந்திரத்தின் அருகே நவக்கிரக மேடை அமைத்துள்ளனனர். இதிலிருக்கும் சனிபகவான் தனக்கு அதிபதியான விநாயகரை பார்த்திருப்பது தனி சிறப்பு.

11 சுயம்பு மூர்த்திகள்:

மூலஸ்தானத்தில் உள்ள 11 விநாயகருக்கும் தனித்தனியே பெயர் உள்ளது. பால விநாயகர், நடன விநாயகர், ஓம்கார விநாயகர், கற்பக விநாயகர், சிந்தாமணி விநாயகர், செல்வ விநாயகர், மயூர விநாயகர், மூசிக விநாயகர், வல்லப விநாயகர், சித்திபுத்தி விநாயகர், பஞ்சமுக விநாயகர்.

இதில் பால விநாயகர் எப்போதும் நீரில் மூழ்கியபடி காட்சி தருகிறார். ஆறாவதாக வீற்றிருக்கும் செல்வ விநாயகருக்கு தான் திருமுழுக்காட்டும், ஆராதனையும் நடைபெறுகிறது.

தலச் சிறப்பு:

பதினாறு வகை செல்வங்களில் மனிதனுக்கு மிகவும் அத்தியாவசியமான 11 செல்வங்களை அள்ளித்தரும் வள்ளலாக 11 விநாயகர்கள் உள்ளனர். “விநாயக சபைஎன்று இந்த அமைப்புக்கு பெயரிட்டுள்ளனர்.

யானை வாகனம்:

பொதுவாக விநாயகரின் எதிரே எலி வாகனம் இருப்பதே இயல்பு. ஆனால், செல்வவிநாயகருக்கு எதிரில் யானை வாகனம் நிறுவப்பட்டுள்ளது. காலப்போக்கில் ஒவ்வொரு விநாயகருக்கும் எலி வாகனங்களை நிறுவினர்கள். பதினொரு விநாயகர், யானை மற்றும் எலி வாகனங்கள், கொடிமரம் ஆகியவற்றை சேர்த்து பார்க்கும் போது, “ஓம்என்னும் பிரணவ மந்திரத்தின் அமைப்பில் தெரியும். தேவர்கள், முனிவர்கள் தினமும் இங்கு வழிபாடு செய்வதாகக் கூறப்படுகிறது. அதற்கு வசதியாக கருவறைக்கு மேற்கூரை கிடையாது. கோயில் கொடிமரம் மற்ற கோயில்களைப் போல் வெளியே இல்லாமல், கருவறையிலேயே அமைந்துள்ளது மற்றொரு சிறப்பு.

இங்கு அனைத்துமே சுயம்பு என்பதால் ஒவ்வொரு விநாயகரையும் அந்தந்த பெயரில் சுதையில் வடித்துக் கோயில் சுற்று சுவரில் வைத்துள்ளார்கள். விநாயகரின் பின்புறம் மீனாட்சி சுந்தரேசுவரரும், அன்னை காமாட்சியும் உள்ளனர்.

இங்கு இரண்டு தெட்சிணாமூர்த்திகள் உண்டு. அதில் ஒருவர் விநாயகரைப்போலவே சுயம்பு மூர்த்தி. தல விருட்சமாக இருக்கும் வன்னிமரம் மிகவும் சக்தி வாய்ந்தது. கோயில் உருவான காலத்திலிருந்தே இருக்கும் இந்த மரம் மிகப்பெரிதாக வளர்ந்துள்ளது. விநாயகர் கோயிலில் வன்னிமரம் இருப்பது மிகவும் அரிது. வன்னிமரத்தின் அதிபதி சனீசுவரன். எனவே சனி தோடம் உள்ளவர்கள் இந்த பழமையான மரத்தை வழிபாடு செய்து பலனடைகிறார்கள். இதற்கு தனியாக விஜயதசமி நாளில் சிறப்பு பூஜையும் உண்டு.

திருவிழா:

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி 10 நாள் திருவிழா, ஆடி கடைசி வெள்ளி லட்ச தீபம், புரட்டாசியில் பவித்ர உற்சவம். மாதாந்திர சங்கடகர சதுர்த்தி. வாராந்திர வெள்ளிக்கிழமைகளில் விசேட பூசை நடத்தப்படுகிறது.

கோரிக்கைகள்:

திருமண தடை உள்ளவர்கள், குழந்தை இல்லாதவர்கள் சங்கடகர சதுர்த்தி நாளில் விரதமிருந்து தீபம் ஏற்றி விநாயகரை வழிபாடு செய்தபின், ஆதிசங்கரர் இயந்திரம் அமைத்துள்ள இடத்திலுள்ள நவக்கிரகத்தை வழிபட்டால் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் பாலவிநாயகருக்கு பால் முழுக்காட்டு செய்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

விநாயகருக்கு திருமுழுக்காட்டு செய்தும், புத்தாடை அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *