அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில், திருவேள்விக்குடி

அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில், திருவேள்விக்குடி, குத்தாலம் போஸ்ட், நாகப்பட்டினம் மாவட்டம்.

+91- 4364-235 462 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கல்யாண சுந்தரேஸ்வரர், மணவாளேஸ்வரர்
அம்மன் பரிமள சுகந்த நாயகி
தீர்த்தம் மங்கள தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருவேள்விக்குடி
ஊர் வேள்விக்குடி
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் சம்பந்தர், சுந்தரர்

திருவேள்விக்குடியின் அருகிலுள்ள குத்தாலத்தில் பரத மகரிஷியின் மகளாக பார்வதி அவதாரம் செய்தாள். அவள் தன்னைத் திருமணம் செய்ய வேண்டி, பரமேஸ்வரனை நினைத்து 16 திங்கள்கிழமை விரதம் இருந்து மண்ணில் இலிங்கம் பிடித்து பூஜை செய்தாள். 17வது நாளில் ஈசன் மணவாளேஸ்வரர்ஆக தோன்றி, அவளைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்தார். அதன்படி அம்மனுக்கு கங்கணம் கட்டி, வேள்விகள் செய்து, பிரம்மா நடத்தி வைக்க மணம் புரிந்து கொண்டார். எனவே தான் இத்தலம் திருவேள்விக்குடிஎன அழைக்கப்பட்டது.

இத்தலத்தில் அருள்பாலிக்கும் அன்னையின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. அவ்வளவு அழகு.


தவத்தின் ஆரம்பத்தில் துயரத்துடன் இருந்த அன்னை, சிவன் தன்னை மணந்து கொள்கிறார் என்றவுடன் ஏற்பட்ட ஆனந்தத்தில் புன்னகை பூக்க அருள்பாலிக்கிறாள்.

பார்வதியின் துயரத்தை போக்கிய சிவன், இங்கு வந்து வழிபடும் கல்யாணம் ஆகாத ஆண்கள், பெண்களின் துயரத்தை போக்கி, திருமணத்தை சிறப்பாக நடத்தி வைக்கிறார்.

திருத்துருத்தியாகிய குத்தாலத்தோடு சேர்த்து பாடப்பட்ட திருத்தலம் இது.

அரச குமாரன் ஒருவனுக்கு நிச்சயித்திருந்த பெண்ணின் தாய் தந்தையர் திருமணத்திற்கு முன் இறந்து விட்டனர். பின் பெண் வீட்டார் இத்திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை.

அரசகுமாரன் இத்தலம் வந்து இறைவனை வணங்கி, நின்ற திருமணத்தை நடத்தி வைக்கக் கேட்டான். சிவன் ஒரு பூதத்தை அனுப்பி அந்தப் பெண்ணை அழைத்து வந்து, திருமணம் செய்து வைத்தார். சிவனின் தோழரான சுந்தரர் இங்கு வந்து அக்னி தீர்த்தத்தில் நீராடி, சிவனை வழிபட்டு, தனது குஷ்டத்தை போக்கிகொண்டார். சிவன் தன்னில் ஒரு பகுதியை சக்திக்கு அளித்த தலம் இதுதான்.

இத்தல இறைவன் கிழக்கு நோக்கிய சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். இறைவனின் திருமணத் தலம் என்பதால் இங்கு நவக்கிரகங்கள் கிடையாது. அதற்கு பதில் ஈசனே ஈசான்ய மூலையில் அமர்ந்துள்ளார். கோபுரம் கிழக்கு நோக்கியது. கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் உள்ளன. கோஷ்டமூர்த்தங்களாக லிங்கோற்பவர், அர்த்தநாரீஸ்வரர், சந்திரசேகரர், தக்ஷிணாமூர்த்தி ஆகியோர் உள்ளனர். அர்த்தமண்டபத்தில் அகத்தியர் சிலையும், நடராஜர் பிள்ளையார் திருமேனிகளும் உள்ளன. முதல் பிரகாரத்தில் அம்பாள் கோயில் தெற்கு நோக்கியுள்ளது. இதன் பின்புறத்தில் ஈசானமூர்த்தி கோயில் உள்ளது. இக்கோயில் முதல் பராந்தகன் காலத்தில் கட்டப்பட்டது என்பர்.

தேவாரப்பதிகம்:

மூப்பதும் இல்லை பிறப்பதும் இல்லை இறப்பதில்லை சேர்ப்பது காட்டாகக் தூரினும் ஆகச்சிந் திக்கி னல்லால் காப்பது வேள்விக் குடிதண் துருத்திஎங் கோன்அரைமேல் ஆர்ப்பது நாகம் அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே.

சுந்தரர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 23வது தலம்.

திருவிழா:

மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம்

பிரார்த்தனை:

நவக்கிரகதோஷத்தால் திருமண தடை உள்ளவர்கள் இவருக்கு 48 அகல் விளக்கு ஏற்றி வழிபட்டால் தோஷம் நீங்கும்.

நேர்த்திக்கடன்:

பவுர்ணமி தினத்தில் காலை 10 முதல் மாலை 4 மணிவரை திருமண தடை நீங்க யாகம் நடக்கிறது. இந்த யாகத்தில் திருமணத் தடை உள்ள ஆண்கள், பெண்கள் இருபாலரும் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபடலாம். திருமணம் முடிந்தவுடன் தம்பதிகள் இத்தலத்திற்கு வந்து சுவாமி அம்பாளுக்கு அர்ச்சனை செய்து நன்றி சொல்லிவிட்டால் போதும்.

வழிகாட்டி:

மயிலாடுதுறையிலிருந்து வாணாதிராஜபுரம் வழியாக குத்தாலம் செல்லும் சாலையில் இத்தலம் உள்ளது.

சாலையிலிருந்து சற்று உள்ளடங்கி கோயில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *