அருள்மிகு சோமநாதசுவாமி திருக்கோயில், நீடூர்

அருள்மிகு சோமநாதசுவாமி திருக்கோயில், நீடூர், மயிலாடுதுறை தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டம்.

+91- 4364 – 250 424, 250 142, 99436 68084 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சோமநாதர், நிருத்தகானப்பிரியர், கானநிர்த்தனசங்கரர், பத்ரகாளீஸ்வரர், கற்கடேசுவரர்
உற்சவர் சோமாஸ்கந்தர்
அம்மன் வேயுறுதோளியம்மை, ஆதித்ய அபயப்ரதாம்பிகை, வேதநாயகி, ஆலாலசுந்தரநாயகி
தல விருட்சம் மகிழம்
தீர்த்தம் செங்கழு நீரோடை, பத்திரகாளி தீர்த்தம், பருதிகுண்டம், வருண தீர்த்தம் முதலிய 9 தீர்த்தங்கள்
ஆகமம் காரணாகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் மகிழாரண்யம், வகுளாரண்யம், திருநீடூர்
ஊர் நீடூர்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் சுந்தரர், திருநாவுக்கரசர்

ஒருசமயம் இந்திரன் பூலோகத்திற்கு வந்தபோது, காலை நேரத்தில் சிவபூஜை செய்ய விரும்பினான். அருகில் இலிங்கத்தைத் தேடியும் கிடைக்கவில்லை. எனவே, காவிரி ஆற்றின் மணலை அள்ளி, இலிங்கமாகப் பிடித்து பூஜை செய்தான். பின் சிவனது நடன தரிசனம் வேண்டி ஒரு பாடலை பாடினான். மகிழ்ந்த சிவன் அவனுக்கு நடனக்காட்சி அருளினார். எனவே இவருக்கு கானநர்த்தன சங்கரன்என்றும் பெயர் உண்டு. “பாடலுக்கு இறங்கி ஆடிய தேவர்என்பது இதன் பொருள். பூஜை முடிந்தபின்பு இந்திரன், இலிங்கத்தை அப்படியே விட்டு சென்றுவிட்டான். பிற்காலத்தில் இங்கு கோயில் எழுப்பப்பட்டது. இலிங்கத்தில் இந்திரனின் விரல் தடம் இருப்பதை இப்போதும் காணலாம்.

தன்மசுதன் எனும் அசுரன் முன்வினைப்பயனால் அடுத்த பிறவியில் நண்டாக பிறந்தான். அவன் தன் பாவங்களுக்கு விமோசனம் பெற நாரதரிடம் ஆலோசனை கேட்டான். அவர், இத்தலத்தில் சிவனை வழிபட, விமோசனம் கிடைக்கப்பெறும் என்றார். அதன்படி தன்மசுதன் இங்கு வந்து காவிரி ஆற்றில் நீராடி, சிவனை வழிபட்டான்.

சிவன் அவனுக்கு காட்சி கொடுத்தார். அவன் தனக்குள் ஐக்கியமாவதற்கு வசதியாக, இலிங்கத்தில் துளையையும் ஏற்படுத்திக் கொடுத்தார். நண்டு வடிவில் இருந்த அசுரன், இலிங்கத்திற்குள்ளே சென்று ஐக்கியமானான். நண்டு சென்ற துளை தற்போதும் இலிங்கத்தில் இருக்கிறது. ஆடி மாத பவுர்ணமி தினத்தில் இங்கு சிவனுக்கு கற்கடக பூஜைநடக்கிறது. ஆவணி மாதத்தில் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது.

அம்பாள் வேயுறு தோளியம்மையை சூரியன் வழிபட்டுள்ளார். எனவே இவளுக்கு, “ஆதித்ய அபயவராதம்பிகைஎன்றும் பெயர் உண்டு. இவளது சன்னதி முன்மண்டபத்தில் சனீஸ்வரர் கிழக்கு பார்த்தபடி தனியே இருக்கிறார். ஒரே இடத்தில் இருந்து அம்பாளையும், சனியையும் தரிசிக்கலாம். இதனால் சனிதோஷம் விலகும் என்கிறார்கள். இங்கு நவக்கிரக சன்னதி கிடையாது. கோயிலுக்கு வெளியே பத்ரகாளியம்மன் தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவள் இத்தலத்தில் சிவனை வழிபட்டதாக ஐதீகம்.

எந்த செயலையும் செய்யும் முன்பு முழுமுதற் கடவுளான விநாயகரை வணங்கிவிட்டு, பின்பு பெரியவர்களின் ஆலோசனையையும், அனுபவங்களையும் கேட்டு அதன்படி நடக்க வேண்டும் என்பர். அதன்படி இத்தலத்தில் விநாயகரே பெரியவர், பழையவர், புனிதமானவர் என்ற 3 நிலைகளில் இருக்கிறார். இந்த வடிவங்களை சிந்தாமணி விநாயகர், செல்வமகா விநாயகர், சிவானந்த விநாயகர் என்றழைக்கின்றனர். புதிய செயல் தொடங்குபவர்கள் இவரை வணங்கி ஆலோசனை கேட்டு அதன்பின்பே செயலாற்றுகின்றனர். சாலைக்கு சற்று உள்ளடங்கி கோயில் உள்ளது. முகப்பு வாயில் மேலே ரிஷபாரூடர் சிற்பம் வண்ணச் சுதையில் உள்ளது. வாயிலைக் கடந்தவுடன் தலமரம் மகிழ மரம் உள்ளது. நேரே அம்பாள் சன்னிதி. துவார வினாயகராக சிவலோக கணபதி உள்ளார். அவரை வணங்கிக் கடந்து நேரே சென்றால் மூலவர் சன்னிதி. பிரகாரத்தில் இடப்பால் மூன்று கணபதிகள் உள்ளனர். சிந்தாமணி கணபதி, செல்வ கணபதி மற்றும் சீவானந்த கணபதி. சப்தமாதாக்களும், சின்மயானந்த கணபதியும், சுப்பிரமணியரும் அடுத்தடுத்து உள்ளனர் . அடுத்து மூன்று லிங்கத் திருமேனிகள். சிவலோகநாதர், கயிலாயநாதர் மற்றும் காசி விஸ்வநாதர். அடுத்து மஹாலக்குமி சன்னிதி உள்ளது. நடராஜ சபையும் உள்ளது. மூலவர் வெண்ணிறத் திருமேனி. கோஷ்டத்தில் நர்த்தன வினாயகர், தக்ஷிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா மற்றும் துர்கை உள்ளனர். சண்டிகேசுவரர் சன்னிதி உள்ளது. இத்தலவிநாயகர் சித்தி விநாயகர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இங்கு மூலவருக்கு மேல் உள்ள விமானம் இருதளம் எனப்படுகிறது. முனையடுவார் நாயனாரின் கைகூப்பியவாறு உள்ள திருமேனி உள்ளது.

தேவாரப்பதிகம்:

அல்லல் உள்ளன தீர்த்திடு வானை அடைந்த வர்க்கு அமுதாயிடுவானைக் கொல்லை வல்லரவம் அசைத்தானைக் கோல மார்கரி யின்உரி யானை நல்லவர்க்கு அணி ஆனவன் தன்னை நானும் காதல் செய்கின்ற பிரானை எல்லி மல்லிகையே கமழ் நீடூர் ஏத்தி நாம்பணி யாவிட லாமே.

சுந்தரர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 21வது தலம்.

திருவிழா:

பங்குனியில் 10 நாள் பிரம்மோற்ஸவம், சிவராத்திரி, திருவாதிரை.

பிரார்த்தனை:

திருமணத்தடை, புத்திரதோஷம் உள்ளவர்கள், செய்த தவறுக்கு மன்னிப்பு வேண்டுபவர்கள் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

வழிகாட்டி:
மயிலடுதுறையிலிருந்து வைத்தீஸ்வரன் கோயில் 
செல்லும் சாலையில் நேரே செல்லாமல் இடப்புறமாக 
பட்டவர்த்தி செல்லும் சாலையில் சென்றால் 1 கீ மீ 
தூரத்தில் கோயிலை அடையலாம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *