அருள்மிகு சிவலோகநாதர் சுவாமி திருக்கோயில், திருப்புங்கூர்

அருள்மிகு சிவலோகநாதர் சுவாமி திருக்கோயில், திருப்புங்கூர், நாகப்பட்டினம் மாவட்டம்.

+91- 9486717634 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சிவலோகநாதர்
அம்மன் சவுந்திரநாயகி
தல விருட்சம் புங்கமரம்
தீர்த்தம் இரிஷப தீர்த்தம்,தேவேந்திர தீர்த்தம், நந்தனார் தீர்த்தம்
ஆகமம் காரண ஆகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருப்புன்கூர்
ஊர் திருப்புன்கூர்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருஞானசம்பந்தர், சுந்தரர், திருநாவுக்கரசர்

மேல ஆதனூர் என்ற கிராமத்தில் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவர் நந்தனார் என்பவர். மிகச் சிறந்த சிவபக்தர். இவர் சிதம்பரத்தில் வீற்றிருக்கும் நடராஜப்பெருமானைத் தரிசிக்க மிகுந்த ஆவல் கொண்டிருந்தார். ஆனாலும் கூலி வேலை செய்து பிழைக்கும் அவரால் உடனடியாக சிதம்பரம் செல்லமுடியவில்லை. அவர் வேலை செய்யும் இடத்திலும் அனுமதி கிடைத்த பாடில்லை. நாளை போகலாம், நாளை போகலாம் என்றே இருந்தார். அதனால் அவருக்கு திருநாளைப்போவார்என்று கூட பெயர் உண்டு. ஒருநாள் முதலாளி அனுமதி கிடைத்து சிதம்பரம் செல்கையில் திருப்புன்கூர் தலத்திற்கு வருகிறார். அப்போது அவர் தாழ்த்தப்பட்ட குலத்தவர் என்பதால் கோயிலுக்குள் சென்று வழிபட அனுமதி மறுக்கப்படுகிறது. கோயில் வாசலில் இருந்தபடியே எட்டி எட்டி உள்ளே பார்க்கிறார். சுவாமி தெரியவில்லை. முன்னால் இருக்கும் பெரிய நந்தி மறைத்துக் கொண் டிருந்தது. என்ன செய்வேன் இறைவா என்று மனமுருகுகிறார். “மலைபோல் நந்தி படுத்திருக்கேஎன்று பாடுகிறார். துவார பாலகர்கள் மூலவரிடம் நந்தனார் வந்திருக்கிறார் என்று கூற சிவபெருமான் நந்தானாரின் பக்தியை மெச்சி, தனக்கு முன்னால் அமர்ந்திருக்கும் நந்தியை சற்றே விலகி இருக்குமாறு பணித்தார். இறைவன் சொல்படி நந்தி விலக இறைவன் நந்தனாருக்கு காட்சி தந்தார்.

அத்தகைய சிறப்பு வாய்ந்த சிவதலம் இது. நந்தனாருக்காக சிவபெருமான் நந்தியை விலகிய இருக்கச் சொன்ன தலம். எல்லாக் கோயில்களிலும் நந்திக்கு நாக்கு இருக்கும். ஆனால் இங்கிருக்கும் நந்திக்கு நாக்கு இருக்காது. துவார பாலகர்கள் எல்லாக்கோயில்களிலும் நேராக இருப்பர். ஆனால் இங்கு தலை சாய்த்து இருப்பர். சுவாமியிடம் தரிசிக்க நந்தனார் என்ற பக்தன் வந்துள்ளார் என்று கூறியதால் இவ்வாறு அமைந்துள்ளளது.

புங்க மரம் நிறைந்த காட்டுப்பகுதியில் இருந்ததால் இந்த கோயிலுக்கு புங்கூர்கோயில்என்று பெயர் வந்தது. புங்க மரக்காட்டுப் பகுதியில் இறைவன் புற்று வடிவமாக உள்ளார். சிறிய அளவில் உள்ளார். இத்தலத்தில் முதலில் தோன்றியது புற்று வடிவமான இலிங்கமே. பின் வந்தது நந்தி. இவை இரண்டும்தான் இந்த ஆலயத்திற்கு பெருமையும் புகழும் சேர்த்தன. புற்று வடிவமாக மூலவர் இருப்பதால் வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் மாலை 8.30 மணிக்கு குவளையை எடுத்துவிட்டு புனுகு சட்டம் சாத்தி வழிபடுகிறார்கள். சுவாமியை திருக்குவளை சாத்தியுள்ள நிலையில்தான் தினசரி பக்தர்களால் காணமுடியும்.

சுவாமிக்கும் அம்பாளுக்கும் அழகில் யார் சிறந்தவர் என்ற போட்டி வந்து விடுகிறது. போட்டி வரும்போது, “பூலோகத்தில் ஒரு தர்ப்பை புல்லை எடுத்து மூன்று முடிச்சு போட்டு கீழே போடுகிறேன். அது எங்கு எந்த இடத்தில் கீழே விழுகிறதோ அங்கு அழகில் சிறந்தவள் என்று ஒப்புக்கொள்கிறேன்என்று சுவாமி சொல்ல அதற்கு அம்பாள் சம்மதிக்கிறாள். அதுபடி சுவாமி தர்ப்பையை கீழே போட அது வந்து விழுந்து பஞ்சலிங்கமாக ஆகிவிடுகிறது. அந்த பஞ்ச லிங்கங்கள் இங்கு உள்ளது. அதன் மகிமை என்னவென்றால் திருமண வரம், நாகதோச நிவர்த்தி இவைகளைத் தரக்கூடியதாக பக்தர்களால் வணங்கப்படுகிறது.
குளம் வெட்டிய பிள்ளையார் என்பவர் இங்கு பிரசித்தம். நந்தனாருக்காக, அவர் சிவபெருமானை தரிசிக்கும் முன் குளித்து விட்டு வர வசதியாக, இந்த பிள்ளையார் ஒரே இரவில் பூதங்களை கொண்டு குளம் வெட்டினார் என்பது வரலாறு. மிகவும் பழமையான கோயில் இது. இராஜேந்திர சோழன் காலத்தில் கோயில் திருப்பணிகள் நடந்துள்ள கோயில்.

தேவாரப்பதிகம்:

பவள வண்ணப் பரிசார் திருமேனி திகழும் வண்ணம் உறையும் திருப்புன்கூர் அழகர் என்னும் அடிகள் அவர்போலும் புகழ நின்ற புரிபுன் சடையாரே.

திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 20வது தலம்.

திருவிழா:

வைகாசி விசாகம் – 10 நாட்கள் திருவிழா பிரம்மோற்சவம் இத்தலத்தில் மிகச்சிறப்பாக நடக்கும் இந்த திருவிழாவில் பத்து நாட்களும் சுவாமி வீதியுலா வரும். மாதாந்திர பிரதோச நாட்கள், வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி, பொங்கல், தமிழ் ஆங்கிலப் புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.

பிரார்த்தனை:

நாக தோசம், பூர்வ ஜென்ம பாவ தோசம் ஆகியவை உள்ளவர்கள் இத்தலத்தில் வழிபட்டால் தங்கள் தோசங்கள் நிவர்த்தி ஆகும். இத்தலத்தில் புற்று வடிவாய் வீற்றிருக்கும் மூலவர் சிவலோக நாதர் சுவாமியை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு,தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.

நேர்த்திக்கடன்:

புற்று வடிவாய் அமைந்துள்ள சிவலோக நாதருக்கு வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் இரவு 8.30 மணியளவில் புனுகு சட்டம் சாத்துகிறார்கள். சுவாமி மீது திருக்குவளை சாத்தி பக்தர்கள் பூஜைகள் நடத்துகிறார்கள். நாக தோஷத்தினால் நீண்ட நாள் கல்யாணம் ஆகாமல் இருப்பவர்கள் தங்கத்தில் நாகத் தகடு செய்து உண்டியலில் போடுகிறார்கள். இவ்வாறு செய்தால் திருமணத்தடை நீங்கி உடனே கல்யாணம் நடக்கிறது. திருமண வரம் வேண்டுவோர் அர்ச்சனை மாலை சாத்துவது என்பது இத்தலத்தில் விசேசம். மேலும் பரிகார அர்ச்சனை என்பதும் இத்தலத்தில் விசேசம். இத்தலத்தில் உள்ள மூர்த்திகளான சுவாமி, அம்பாள், பிள்ளையார், முருகன், அகஸ்தியர் ஆகியோருக்கு பஞ்ச அர்ச்சனைகள் செய்து பூர்வ ஜென்ம பாவங்கள் விலகப் பெறுகிறார்கள். அம்பாளுக்கு புடவை சாத்துதலும், அபிசேகம் செய்தலும், சந்தனகாப்பு சாத்துதலும் பக்தர்களின் முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது. சுவாமிக்கு புத்தாடை சாத்தலாம். மா, மஞ்சள் பொடி, திரவியப் பொடி, தைலம், பால், தயிர், விபூதி, பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கலாம். தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம். வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *