அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில், எலுமியன்கோட்டூர்

அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில், எலுமியன்கோட்டூர், திருஇலம்பையங்கோட்டூர், காஞ்சிபுரம் மாவட்டம்.

+91- 44 – 2769 2412, 94448 65714 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 8 மணி வரை, மாலை மணி முதல் இரவு மணி வரை திறந்திருக்கும். கோயிலுக்கு செல்பவர்கள் முன்னதாகவே அர்ச்சகரிடம் போனில் தொடர்பு கொண்டு செல்வது நல்லது.

மூலவர் தெய்வநாயகேஸ்வரர்
அம்மன் கனககுசாம்பிகை
தல விருட்சம் மரமல்லிகை
தீர்த்தம் மல்லிகா புஷ்கரணி
ஆகமம் காமீகம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் இலம்பையங்கோட்டூர், திருவிலம்பையங்கோட்டூர்
ஊர் எலுமியன்கோட்டூர்
மாவட்டம் காஞ்சிபுரம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருஞானசம்பந்தர்

தேவர்களைக் கொடுமைப்படுத்திய திரிபுர அசுரர்களை சம்காரம் செய்வதற்காக, மரமல்லிகை வனமாக இருந்த இவ்வழியே சிவன் சென்றார். அப்போது, சிவனுடன் சென்ற தேவர்கள் விநாயகரை வணங்காமல் சென்றதால், அவர் சிவனது தேரின் அச்சை முறித்தார். தேர் நிலைகுலைந்து சாய்ந்தது. தேர் கீழே கவிழாமல் மகாவிஷ்ணு தாங்கிபிடித்தார். அப்போது, சிவன் கழுத்தில் அணிந்திருந்த கொன்றை மாலை இவ்விடத்தில் விழுந்தது. மாலை விழுந்த இடத்தில் சிவன் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளினார்.

ஒருசமயம், சிவத்தலங்களுக்கு சென்று பதிகம் பாடிய திருஞானசம்பந்தர் இவ்வழியாக திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, சிறுவன் மற்றும் முதியவர் வடிவில் சென்ற சிவன், அவரிடம் இவ்விடத்தில் சிவன் குடிகொண்டிருக்கிறார். அவரைக்குறித்து பதிகம் பாடுஎன்றார். அதன்படி, இங்கு வந்த சம்பந்தர், சிவன் இருந்த இடத்தை தேடிவிட்டு, அவரைக் காண முடியாமல் திரும்பினார். மீண்டும் பசு வடிவில் சென்று அவரை மறித்த சிவன், தான் இருக்கும் இடத்தை காட்டினார். அதன்பின், சம்பந்தர் சிவனை குறித்து பதிகம் பாடினார்.

அரம்பையர்களான(தேவலோக கன்னிகள்) அரம்பை, ஊர்வசி, மேனகை ஆகிய மூவரும் இத்தலத்திற்கு வந்து, தங்களது அழகு என்றும் குறையாது இருக்க அருளும்படி சிவனை வேண்டித் தவம் இருந்தனர். அவர்களுக்கு சிவன், “யோக தெட்சிணாமூர்த்தியாகக் காட்சி தந்து என்றும் இளமையாக இருக்கும்படியாக அருளினார். இவர், கோஷ்டத்தில் சின்முத்திரையுடனான வலக்கையை இதயத்தில் வைத்தபடி, வலது பாதத்தை மடக்கி, யோகபட்டையுடன் அபூர்வ கோலத்தில் காட்சி தருகிறார். பேரின்ப நிலையில் உள்ள இவரை வணங்கினால் காண்போரை வசீகரிக்கும் முகப்பொலிவையும், மனஅழகையும் பெறலாம். குறிப்பாக பெண்கள் வணங்கினால் கூடுதல் அழகைப்பெறுவர் என்பது நம்பிக்கை.

கோயில் நுழைவுவாயில் அருகே தேவதையர்கள் வணங்கிய சிவன், “ரம்பாபுரிநாதராக” 16 பேறுகளை அளிக்கும்படி, 16 பட்டைகளுடன் மேற்கு நோக்கிக் காட்சி தருகிறார்.

தேவர்கள் படைக்கு தலைமையேற்று சம்காரத்திற்கு சென்றதால், இத்தலத்து சிவன், “தெய்வநாயகேஸ்வரர்என்றும், அரம்பையர்களுக்கு அருளியதால், “அரம்பேஸ்வரர்என்றும் அழைக்கப்படுகிறார். இதனால், “அரம்பையங்கோட்டூர்எனப்பட்ட இத்தலம் காலப்போக்கில் எலும்பியங்கோட்டூர்என்று மருவியது.

தட்சனால் சாபம் பெற்ற சந்திரன், இங்குள்ள மல்லிகாபுஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி, சுவாமியை வணங்கி சென்றுள்ளார். இதில் நீராடி சுவாமியை வணங்கினால் மறுபிறவி இல்லை என்பது நம்பிக்கை.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என சிறப்பு பெற்ற இங்கு அம்பாள் தெற்கு நோக்கியபடி, ஸ்ரீசக்கரபீடத்துடன் அருளுகிறாள்.

இங்குள்ள தலவிநாயகர், குறுந்த விநாயகர். இங்கு சுத்தான்னம் நைவேத்தியம் செய்யப்படுகிறது.

தீண்டாத்திருமேனியான சிவன், கொன்றை மலரின் இதழைப்போன்று காட்சி தருகிறார். தினமும் கோபூஜை நடக்கும் இத்தலத்து சிவன்மீது வருடத்தில் ஏப்ரல் 2 – 7 , செப்டம்பர் 5 – 11 வரையில் சூரியனின் ஒளிக்கற்றை விழுகிறது.

தேவாரப்பதிகம்:

மலையினார் பருப்பதம் துருத்தி மாற்பேறு மாசிலாச் சீர்மறைக் காடுநெய்த் தானம் நிலையினான் எனதுஉரை தனதுஉரையாக நீறு அணிந்து ஏறு உகந்து ஏறிய நிமலன் கலையினார் மடப்பினை துணையொடும் துயிலக் கானலம் பெடைபுல்கிக் கணமயில் ஆலும் இலையினார் பைம்பொழில் இலம்பையங் கோட்டூர் இருக்கையாப் பேணிஎன் னெழில் கொள்வதியல்பே.

திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 13வது தலம்.

திருவிழா:

குரு பெயர்ச்சி, மகாசிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், திருக்கார்த்திகை, ஆடிப்பெருக்கு.

பிரார்த்தனை:

தெய்வநாயகேஸ்வரரை வணங்கிட தோஷங்கள் நீங்கும்.

நேர்த்திக்கடன்:

குருதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் யோக தெட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம், அர்ச்சனைகள் செய்து வணங்கினால் தோஷம் நீங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *