பக்தஜனேசுவரர் திருக்கோயில், திருநாவலூர்

அருள்மிகு பக்தஜனேசுவரர் திருக்கோயில், திருநாவலூர், விழுப்புரம் மாவட்டம்

+91- 94861 50804, 94433 82945, 04149-224 391

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பக்தஜனேசுவரர், ஜம்புநாதேசுவரர், திருநாவலீசுவரர்
அம்மன் மனோன்மணி, நாவலாம்பிகை, சுந்தர நாயகி
தல விருட்சம் நாவல்மரம்
தீர்த்தம் கோமுகி தீர்த்தம், கருட நதி
ஆகமம் காமிக ஆகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் ஜம்புநாதபுரி, திருநாமநல்லூர்
ஊர் திருநாவலூர்
மாவட்டம் விழுப்புரம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் சுந்தரர்

அமிர்தத்தை கடைந்த காலத்தில், வாசுகி என்ற நாகத்தின் நஞ்சை, இறைவன் சாப்பிட்டு விடுகிறான். அதில் கொஞ்ச நஞ்சு, வித்தாக மாறி, பூமியில் விழுந்து நாவல் மரங்களாக முளைக்கப்பெற்றது. ஜம்புவனம் என்ற பெயரில் இந்த இடத்தில், இறைவன் தானாகத் தோன்றி, 4 யுகங்களாக இங்கு இருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆரம்ப காலத்தில் கருவறை மட்டும் முழுவதும் கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. பின்பு சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களால் பெரிய அளவில் விரிவு படுத்தப்பட்டுள்ளது. இது மிகப் பழமையான கோயில் ஆகும். ஜம்புநாதேசுவரர் என்று வழங்கி வந்த காலங்களில், சுந்தரர், “ஜம்புஎன்ற வடமொழிப் பெயரை நாவல்என்று அழைத்து திருநாவலீசன்என்று ஈசனையும் திருநாம நல்லூர்என்று ஊர்ப்பெயரையும் பாடலில் அழைத்துள்ளார்.

இங்குதான், இறைவனையே தோழனாக பழகிய சுந்தரர் பிறந்தது. ஒரு முறை சுக்கிர பகவான் காசிக்கு சென்று லிங்கம் ஒன்றைக் கொண்டுவந்து, பிரதிஷ்டை செய்து பல காலம் பூஜித்து வந்தார். இவரது பூஜைக்கு மகிழ்ந்த சிவன், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சஞ்சீவினிமந்திரத்தை உபதேசித்தார். இதையறிந்த அசுரர்கள் சுக்கிரனைத் தங்கள் குல குருவாக ஏற்றுக்கொண்டார்கள். தேவ, அசுர போர் ஆரம்பமானது. தேவர்கள் அசுரர்களை கொன்று குவித்தனர். ஆனால், இறந்த அசுரர்களை எல்லாம் சுக்கிரன் தன் சஞ்சீவினிமந்திரத்தால் உயிர் பிழைக்க செய்தார். பயந்து போன தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டார்கள். சிவன் சுக்கிரனை அழைத்து, அவரை விழுங்கி விட்டார். சிவனின் வயிற்றில் பல காலம் யோகத்தில் இருந்தார் சுக்கிரன். பின்னர் அவரை வெளியே வரவழைத்து, நவக்கிரகத்தில் பதவியைக் கொடுத்து அனைவரும் செய்யும் பாவ புண்ணியத்திற்கேற்ப செல்வத்தை வழங்கி வர உத்தரவிட்டார். பின்னர் சுக்கிரனுக்கு நான்கு குமாரர்கள், இரண்டு புதல்வியர் பிறந்தனர். அவர் பூலோகம் வந்து சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டார். இந்த இடமே இன்றைய திருநாவலூர் ஆகும். இங்கு வருவோருக்கு சுக்கிர கிரகம் தொடர்பான தோஷம் விலகி, செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை.

பிரம்மா, விஷ்ணு . சண்டிகேசுவரர், சப்தரிஷிகள், கருடன், சுந்தரர், சடைய நாயனார், இசைஞானியார், நரசிங்க முனையர் வழிபட்ட தலம்.

ஈசனை மூலையில் நவகிரகங்களுக்கு அருகிலேயே சுக்கிரனாலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டு ஆத்மார்த்த பூஜை செய்த இலிங்கமான பார்க்கவீசுவரர் லிங்கம்உள்ளது. பார்வதிதேவி இங்கு எழுந்தருளி சிவனை பூஜித்து, அவர் மனம் மகிழ மணம் புரிந்தார். இரணியனைக் கொல்வதற்காக மகாவிஷ்ணு இங்குள்ள சிவனை பூஜித்து நரசிம்ம அவதாரம் எடுக்கும் ஆற்றலைப் பெற்றார்.

சிவப்பிரியர் என்பவர் சிவனை பூஜித்து சண்டிகேஸ்வரர் பதவி பெற்றதும், ஆதிசேஷன் உமிழ்ந்த நஞ்சினால் கருநிறமடைந்த கருடன், சிவனைப் பூஜித்து விஷம் நீங்கியதுமான தலம்.

கிருதயுகத்தில் விஷ்ணு வழிபட்ட இலிங்கம், திரேதாயுகத்தில் சண்டிகேஸ்வரர் வழிபட்ட இலிங்கம், துவாபரயுகத்தில் பிரம்மா வழிபட்ட இலிங்கம், கலி யுகத்தில் சுந்தரர் வழிபட்ட இலிங்கம் இதுதான். அருணகிரிநாதர் இத்தல முருகனைப் பாடியுள்ளார்.

பங்குனி மாதம் 23 முதல் 27 ஆம் நாள் வரை சூரியனின் ஒளிக் கதிர்கள் கருவறையில் நுழைந்து மூலவர் மீது படுகின்றன.

இத்தலத்தின் சிறப்பை பெருமையை சேக்கிழார் பெரிய புராணத்தில் சிறப்பித்து கூறுகின்றார்.

அம்பாள் விரிசடை கோலத்தில் தியான சொரூபமாக உள்ளார் என்பது சிறப்பு. பிரம்மா, விஷ்ணு, பார்வதி, சண்டிகேஸ்வரர், இந்திரன், அஷ்டதிக்பாலகர்கள், சூரியன், சுக்கிரன், கருடன், சப்தரிஷிகள் ஆகியோர் இத்தலத்தில் வழிபட்டுள்ளனர்.

ஐந்தடுக்கு ராஜகோபுரமும், இரண்டு பிரகாரமும் கொண்ட இக்கோயிலின், முதல் பிரகாரத்தின் வலது பக்கத்தில் பரவை நாச்சியார், சங்கிலி நாச்சியார் ஆகியோருடன் சுந்தரருக்கு தனி சன்னதி உள்ளது. பொதுவாக நவக்கிரகங்களின் நடுவில் உள்ள சூரியன் கிழக்கு நோக்கி இருப்பார். ஆனால், இங்கு சூரியன் மேற்கு நோக்கி உள்ளார். இவர் இறைவனை தரிசிப்பதாக ஐதீகம்.

இத்திருத்தலத்தில் சுக்ரபகவான் இறைவனை வணங்கி பூஜித்து வக்ர தோசம் நிவர்த்தி பெற்ற தலம். கோயிலை அடுத்து சுந்தரமூர்த்தி சுவாமிகள் அவதாரம் செய்த இடத்தில் திருமடம் ஒன்றை எழுப்பி உள்ளனர். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

அருணகிரிநாதர்

தேவாரப்பதிகம்:

அஞ்சுங் கொண்டு ஆடுவார் ஆவினில் சேவினை ஆட்சி கொண்டார் தஞ்சங் கொண்டார் அடிச் சண்டியைத் தாமென வைத்துகந்தார் நெஞ்சங் கொண்டார் வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை ஆளுங்கொண்டு நஞ்சங் கொண்டார்க்கிடம் ஆவது நந்திரு நாவலூரே.

சுந்தரர்

தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் இது 8வது தலம்.

திருவிழா:

சுந்தரர் ஜனன விழா ஆவணி மாதம் உத்ர நட்சத்திரம் நாளன்று – 1 நாள் விழா.

சுந்தரரின் குருபூஜை விழா ஆடி சுவாதி நட்சத்திரத்தன்று நடைபெறும்.

சித்திரைத் தேர்த்திருவிழா – 15 நாட்கள்.

சித்திரைப் புத்தாண்டு நாளில் பஞ்சமூர்த்திகளுக்கும் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கும் உபயதாரர்களின் உதவியுடன் அபிசேக ஆராதனைகள் நடைபெறும். ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தன்று மனோன்மணியம்மனுக்குச் சிறப்பு வழிபாடும் உற்சவருக்கு ஊஞ்சல் உற்சவமும் நிகழும். வாரந்தோறும் செவ்வாய், வெள்ளி ஆகிய கிழமைகளில் துர்க்கை, மனோன்மணியம்மனுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கைக்கு இராகுகால வழிபாடு நிகழும். வெள்ளிக் கிழமைகளில் சுக்கிரனுக்கும், அவர் தாபித்த இலிங்கத்திற்கும் சிறப்பு பூஜைகள் நிகழும். வெண்ணெய், வெண்மை நிறமுடைய நெய், மொச்சை, வெண் பட்டாடை ஆகியவற்றுடன் வழிபாடு சிறப்பாக நடத்தப்படும். வியாழக்கிழமையன்று தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற ஆடை, மஞ்சள் மலர்கள், மஞ்சள் நிறக் கடலை ஆகிய பொருட்களுக்களைப் படைத்து சிறப்பாக வழிபாடுகள் நடைபெறுகின்றன. தவிர பிரதோச நாட்களின் போதும், விசேச நாட்களின் போதும் கோயிலில் பக்தர்கள் நிரம்ப அளவில் வருகின்றனர்.

பிரார்த்தனை:

சுக்ரனுக்கு வக்ர தோசம் தீர்ந்த தலம். சுக்ர தோசம், திருமண வரம், வியாபார விருத்தி, உத்தியோக உயர்வு, உடல் ஆரோக்கியம் ஆகியவற்றைப் பெற விரும்புவோர் வேண்டிக்கொள்கின்றனர்.

இங்கு வந்து வணங்கினால் மனதுக்கு நிம்மதியும், வாக்கு வன்மையும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் ஆற்றலும், ஈசனின் அருளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

வெள்ளிக்கிழமைகளில், வெண்தாமரைப்பூவினாலும் வெண்பட்டு ஆடை அணிவித்து, வெண்மொச்சை நிவேதனம் செய்து, வெண்ணையால் தீபம் போட்டு வழிபாடு செய்யும் பக்தர்கள் தங்கள் எண்ணப்படி எண்ணங்கள் தடங்கலின்றி நிறைவேறப் பெறுவார்கள். 3 மஞ்சள் 3 எலுமிச்சம் பழம் வைத்து குங்கும அர்ச்சனை செய்து, பழத்தை பெற்றுச் சென்றால், மங்கல காரியம் நிறைவேற வாய்ப்புண்டு. சுவாமிக்கு நல்லெண்ணெய், மஞ்சள் பொடி, பால், தயிர், பழ வகைகள், கரும்புச்சாறு, தேன், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர், ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். தவிர உலர்ந்த தூய ஆடை சாத்தலாம். தவிர சுவாமிக்கு வேட்டியும், அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிசேகம், புடவை சாத்துதல் ஆகியவற்றையும் செய்யலாம். தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *