அருள்மிகு காரிய சித்தி கணபதி திருக்கோயில், நத்தம்

அருள்மிகு காரிய சித்தி கணபதி திருக்கோயில், நத்தம், பஞ்செட்டி, திருவள்ளூர் மாவட்டம்
தல வரலாறு

முன்பொரு சமயம் சிவதரிசனம் செய்ய பிரமன் சென்றார். அப்போது முருகனால் வழிமறிக்கப்படுகிறார். ஓம் எனும் பிரணவத்தின் பொருள் சொல்லுமாறு முருகன் கேட்க விடை தெரியாத பிரமன் முருகனால் சிறைப்படுத்தப் படுகிறார். படைப்புத் தொழில் தடைபடுவது கண்டு நாரதரின் அறிவுறைப்படி பிரம்மன் இங்கு வந்து கணபதியைக் குறித்து தவமியற்றி காரியசித்தி அடைந்ததாகத் தல வரலாறு. பிரம்மன் வழிபட்ட பிள்ளையாரான அருள்மிகு காரியசித்தி கணபதி தொந்தியின்றி முக்கண்ணோடு மேலிரு கரங்களில் ருத்ராட்சமும் கோடரியும் ஏந்தி கீழிரு கரங்களில் மோதகமும் தந்தமும் ஏந்தி தாமரை பீடத்தில் அமர்ந்துள்ளது போல திருவுருவச்சிலை அமைந்துள்ளது.
சிறப்புகள்

திருமணத் தடை உள்ளவர்கள், ஒருகிலோ பச்சரிசி, வெல்லம், அருகம்புல் படைத்து ரோஜா மாலை சாற்றி சிதறு காய் உடைத்து 16 வலம் வந்து அர்ச்சனை செய்து வழிபட திருமணத்தடை அகன்று திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இங்குள்ள வாலீசுவரரையும் ஆனந்தவல்லியையும் வழிபட ராகு கேது சர்ப்ப தோடங்கள் அகலும்.

முருகனுக்கு வெண் சங்கு தீபம் ஏற்றி எதிரில் உள்ள திருமாலுக்குத் தயிர்சாதம் படைத்து வழிபட மாமியார் மருமகள் பிரச்சனை விலகும்.

உமையொருபாக கோலத்தில் உள்ள சண்டேசுவரரை வழிபடத் தம்பதியரிடையே ஒற்றுமை ஏற்படும்.

பிரதோச வழிபாடு இங்கு செய்வதால் சுருட்டப்பள்ளி தலத்தில் பிரதோசவழிபாடு செய்வதைப் போன்று மும்மடங்கு பலன் கிடைக்கும் எனவும் தலபுராணம் கூறுகிறது.
வழிகாட்டி:

சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையில் காரனோடைப்பாலம் அடுத்து பஞ்செட்டி நிறுத்தத்தில் இறங்கி மேற்கே 3 கீ.மி தொலைவு சென்றால் நத்தம் கிராமத்தை அடையலாம். சென்னை கோயம்பேட்டிலிருந்து 58சி, 112ஏ, 112பி, 132, 133, 131ஏ, 113, 533 ஆகிய வழித்தடப் பேருந்துகள் பஞ்செட்டிக்கு செல்லுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *