யோகீஸ்வரர் திருக்கோயில், புத்தேரி – நாகர்கோயில்

அருள்மிகு யோகீஸ்வரர் திருக்கோயில், புத்தேரி நாகர்கோயில், கன்னியாகுமரி மாவட்டம்.

+91 – 4652- 275 230 , 94871 01770

காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். மற்ற நேரங்களில் சுவாமியை வெளியிலிருந்தே தரிசிக்கலாம்.

மூலவர் யோகீஸ்வரர்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் புத்தேரி, நாகர்கோயில்
மாவட்டம் கன்னியாகுமரி
மாநிலம் தமிழ்நாடு

முற்காலத்தில் இங்கிருந்த பூலாத்தி மரத்தின் அடியில், காவல் தெய்வமான சாஸ்தா, பீட வடிவில் எழுந்தருளியிருந்தார். இப்பகுதி மக்கள் இவருக்கு பூலா உடைய கண்டன் சாஸ்தாஎன்று பெயரிட்டு, சிறிய அளவில் கோயில் எழுப்பி வழிபட்டு வந்தனர். ஒருசமயம் யோகி ஒருவர் இத்தலத்திற்கு வந்தார். சாஸ்தாவை வழிபட்ட அவர், இங்கே பலகாலம் தங்கினார். இங்கேயே ஜீவசமாதியடைந்தார். சிலகாலம் கழித்து, யோகியின் ஜீவசமாதிக்கு மேலே பெரிய புற்று வளர்ந்தது. வியந்த மக்கள், புற்றையே சுவாமியாக கருதி வழிபட்டனர். பிற்காலத்தில் புற்று இருந்த இடத்தில் பெரிய சுவர் எழுப்பினர். பின்னர் சுவரை இறைவனாகக் கருதி வழிபட்டனர். இந்தச் சுவரை சிவ அம்சமாகக் கருதிய பக்தர்கள், “யோகீஸ்வரர்என்றும் பெயர் சூட்டினர். தினசரி பூஜையின்போது சாதம் நைவேத்யமாகப் படைக்கப்படுகிறது.
வைகாசி விசாகத்தன்று சாஸ்தா மற்றும் யோகீஸ்வரருக்கு விசேஷ பூஜை நடக்கும். அப்போது மாம்பழம், பலாப்பழம், பச்சரிசி மாவு மற்றும் சர்க்கரை ஆகியவற்றைச் சேர்த்து சாறு தயாரிக்கப்படும். “மாம்பால்எனப்படும் இந்த கலவையை சுவாமிக்கு படைத்து வழிபடுகிறார்கள்.

பூலா உடைய கண்டன் சாஸ்தா தனி சன்னதியில் இருக்கிறார். பீட வடிவிலுள்ள சாஸ்தாவின் பின்புறம், அவரது சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பங்குனி உத்திரத்தன்று மட்டும் இவர் குதிரை வாகனத்தில் புறப்பாடாகிறார். யோகி இருந்த இடத்தில் புற்று வளர்ந்ததால், “புற்றேரிஎனப்பட்ட இவ்வூர் புத்தேரிஎன மருவியது.

கோபுரம், விமானம், கொடிமரம், பலிபீடம் என எதுவும் இல்லாத வித்தியாசமான கோயில் இது. திறந்த வெளியில் 22 அடி உயரத்தில் பெரிய சுவர் உள்ளது. இதன் உச்சியில் யோகி ஒருவர் படுத்திருக்கும் வடிவம் இருக்கிறது. பங்குனி உத்திரத்தை அடுத்து வரும் வெள்ளிக்கிழமையன்று, இந்த சுவருக்கு செம்மண் பூசுகிறார்கள். அன்று மாலையில் கண் திறப்பு வைபவம்நடக்கும். வைகாசி விசாகம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

மூலவராக வணங்கும் சுவரின் மணலையே பக்தர்களுக்கு பிரசாதமாகத் தருகிறார்கள்.

கோரிக்கைகள்: புத்திர தோஷம் உள்ளவர்கள் இங்கு வேண்டிக்கொண்டு, மூலவராக வணங்கும் சுவரின் மணலை சிறிதளவு நீரில் கரைத்துச் சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்று நம்புகிறார்கள்.

நேர்த்திக்கடன்:

யோகீஸ்வரரிடம் வேண்டி பிரார்த்தனை நிறைவேறியவர்கள், காவடி எடுத்து காவி வஸ்திரம் அணிவித்து வழிபடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *