திருநோக்கிய அழகிய நாதர் திருக்கோயில், திருப்பாச்சேத்தி

அருள்மிகு திருநோக்கிய அழகிய நாதர் திருக்கோயில், திருப்பாச்சேத்தி, சிவகங்கை மாவட்டம்.

+91 04574266 303, 266 495

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் திருநோக்கிய அழகிய நாதர்
அம்மன் மருநோக்கும் பூங்குழலி
தல விருட்சம் பாரிஜாதம்
தீர்த்தம் இலட்சுமி தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் திருப்பாச்சேத்தி
மாவட்டம் சிவகங்கை
மாநிலம் தமிழ்நாடு

சிவன் நெற்றிக்கண் கொண்ட கோபக்காரர். மன்மதன் ஒரு நல்ல காரியத்திற்காக சிவனை எழுப்பப்போக, அவனையே எரித்து சாம்பலாக்கி விட்டவர்.

இவர் அடிக்கடி கோபப்பட்டால் உலகம் தாங்காது என்பதால், பிரம்மா சிவனின் கோபத்தை அனலாகத் திரட்டி கடலுக்குள் சென்று புகுத்தி விட்டார். அந்த கோப அனல் சிறு குழந்தையாக ஜலத்தில் பிறந்தது. பிரமன் அந்த குழந்தைக்கு ஜலந்திரன் என பெயரிட்டார். ஜலந்திரன் முனிவர்களுக்கும், தேவர்களுக்கும் மிகவும் தொந்தரவு கொடுத்தான். இதை தேவர்கள் திருமாலிடம் தெரிவித்தனர். இவனை அழிக்க வேண்டுமானால் இவனது மனைவி பிருந்தையின் பதி விரதத்தன்மையை முதலில் அழிக்கவேண்டும் என திருமால் உணர்ந்தார். (பிருந்தை என்றால் துளசி என்று பொருள்). திருமாலே ஜலந்திரன் உருவெடுத்து பிருந்தையிடம் சென்றார். வந்திருப்பது திருமால் என்பதையும், தனது பதி விரதத்தன்மையை சோதிக்க அவர் வந்திருப்பதையும், அறிந்த பிருந்தை தீயில் புகுந்து உயிரை விட்டாள். பிருந்தை இறந்தவுடனேயே ஜலந்திரன் தன் வலிமையை இழந்து சிவனிடம் தோற்று போனான்.

இதனை உணர்ந்த சிவன் பூமியில் ஒரு வட்டத்தை வரைந்து அதை ஜலந்திரனிடம் எடுக்க கூறினார். வலிமையில்லாத ஜலந்திரன் அந்த வட்டத்தை தூக்கிய போது அது மாபெரும் சக்கரமாக மாறி அழித்து விட்டது. ஜலந்திரனின் சாம்பலை, பிருந்தையின் சாம்பலில் கலந்தார் திருமால். இதனால் வைகுண்டம் இருண்டது. திருமகள் வருந்தினாள். இதனை அறிந்த பார்வதி, மகாலட்சுமியிடம், “பூமியில் திருப்பாச்சேத்தி எனப்படும் உன்னதபுரியில் தங்கி, பாரிஜாத வனத்தில் சுயம்பு மூர்த்தியாக வீற்றிருக்கும் புற்றிடங்கொண்டாரை சிவ தீர்த்தத்தால் வழிபட்டால் உன் கணவனை அடையலாம்என்றாள். திருமகளும் திருப்பாசேத்தியில் ஒரு மண்டலம் தங்கியிருந்து அப்படியே செய்ய, சிவன் மகிழ்ந்து திருமகளுக்கும் திருமாலுக்கும் காட்சி தந்தார். பின் இருவரும் அருகிலுள்ள வேகவதி (வைகை) ஆற்றுக்கு சென்று நீராடி, சிவனை பூஜை செய்து வழிபட்டனர். சிவன் சில விதைகளை திருமாலிடம் கொடுத்து பிருந்தையின் சாம்பலில் தூவச் சொல்கிறார். அதன்படியே செய்ய அதிலிருந்து துளசி தோன்றியது. திருமால் அந்த துளசியை எடுத்து சிவனை அர்ச்சித்து விட்டு, மீதியை மாலையாக்கிக் கழுத்தில் அணிந்து கொண்டார். இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தது ஒரு திங்கட்கிழமையில்தான்.

எனவே இன்றைக்கும் இந்த சிவாலயத்தில் சோமவாரத்தில் சிவனுக்கு துளசியால் அர்ச்சனை செய்யப்படுகிறது. இசைக்கு அதிபதியான நடராஜர் இங்கு ஒலிவடிவாக இசைக்கல் நடராஜராக இருக்கிறார். சிவாலயம் என்றாலே அர்ச்சனைக்கு வில்வம் தான். நளச்சக்கரவர்த்தியால் கட்டப்பட்டு பூஜிக்கப்பட்ட 1300 ஆண்டு பழமையான இத்தலத்திற்கு வந்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

திருவிழா:

மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, சோமவாரம்.

கோரிக்கைகள்:

திருமணமானபின், கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அழகிய நாதரை வழிபட்டால் போதும். பிரிந்தவர்கள் சேர்கிறார்கள். நளமகாராஜன் இத்தல இறைவனை வழிபட்டு பிரிந்த மனைவி, குழந்தையை அடைந்தான். மகாலட்சுமியே வழிபட்ட தலம். ஆதலால் இங்கு வந்து வழிபடுபவர்களுக்கு திருமணம் கைகூடுகிறது. குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களும், சனி தோஷம் நிவர்த்தி, கலி தோஷ நிவர்த்தி, பிரம்மகத்தி தோஷ நிவர்த்தி வேண்டுபவர்களும் இத்தலம் வந்து தரிசனம் செய்ய சிறந்த பலன் கிடைக்கும். பழமையான இத்தலத்திற்கு வந்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள்நிறைவேறியவர்கள்றைவனுக்கும்

அம்மனுக்கும்திருமுழுக்காட்டுசெய்து, புத்தாடைஅணிவித்து, சிறப்புபூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். தங்களால் இயன்ற பொருளுதவி, அன்னதானம் செய்தும் நேர்த்திக்கடன் செய்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *