அருள்மிகு ஆதிகும்பேசுவரர் திருக்கோயில், செண்பகபுரம்

அருள்மிகு ஆதிகும்பேசுவரர் திருக்கோயில், செண்பகபுரம். மோகனூர் போஸ்ட் கீவளூர் தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டம்- 611 109.

+91- 4366 – 279 757, 94427 86870

காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – ஆதிகும்பேசுவரர்

தல விருட்சம்: – அரசு, வேம்பு

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்: – செண்பகபுரி

ஊர்: – செண்பகபுரம்

மாவட்டம்: – நாகப்பட்டினம்

மாநிலம்: – தமிழ்நாடு

ஒருசமயம் கைலாயம் சென்ற நாரதர், பார்வதியிடம் ஒரு கனியைக் கொடுத்தார். அக்கனியை முருகனுக்குத் தருவதா? விநாயகருக்குத் தருவதா? என அன்னைக்கு குழப்பம் ஏற்பட்டது. எனவே, உலகத்தை முதலில் சுற்றி வருபவருக்கு கனியைத் தருவதாகக் கூறினார் சிவன். முருகன் மயிலில் உலகத்தைச் சுற்றக் கிளம்பினார். விநாயகரோ, பெற்றோரைச் சுற்றி வந்து கனியை வாங்கிக் கொண்டார். எனவே, சினம் கொண்ட முருகன், அம்பிகை தடுத்தும் கேட்காமல் பழநிக்குச் சென்றார்.

அந்நிகழ்வை எண்ணிய விநாயகர் மனம் வருந்தினார். தனக்கு விட்டுக்கொடுக்கும் பக்குவம் இல்லாமல் போனதை எண்ணிக் கலங்கினார். எனவே பூலோகத்தில் தவமிருந்து, மன அமைதி பெறப் பெற்றோரிடம் அனுமதி வேண்டினார். அம்மை, அப்பன் இருவரும் அவரை சமாதானம் செய்தும் அவர் கேட்கவில்லை.


சிவன் அவரிடம் பூவுலகில் செண்பக மரங்கள் நிறைந்த செண்பகபுரியில் தவம் இருக்கும்படி கூறினார். அதன்படி இங்கு வந்த விநாயகர், இங்கு தவமிருந்தார்.

விநாயகர் முழுமுதற்கடவுள் என்றாலும், அவரும் ஒரு தாய்க்குப் பிள்ளைதான். வனத்தில் தனியே தவமிருக்கும் தன் மகனுக்கு பாதுகாப்பு வேண்டுமென்று சிவனிடம் வேண்டினாள். எனவே, சிவபெருமான் இங்கு வந்து விநாயகரை சுற்றிலும் ஐந்து இடங்களில் பஞ்சபூத வடிவில் பாதுகாப்புக்காகத் தங்கினார்.

சிவன் பஞ்சபூதங்களாக காத்தருளிய இடங்களில், லிங்க வடிவில் காட்சி தருகிறார். இங்கே தவமிருந்த விநாயகர், சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளினார்.

சிவன் கோயில் கோட்டத்தில் இருப்பது போலவே, கருவறை விமானத்தின் வலப்புறம் சிவன், பின்புறம் திருமால், இடப்புறம் பிரம்மா சிலை வடிவில் இருக்கின்றனர். இங்கு பிற்காலத்தில் கோயில்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த கோயில்களுக்கும், விநாயகர் கோயிலுக்கும் இடைப்பட்ட பகுதியில் வேறு எந்தக் கோயிலும் இல்லை. இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் பத்ம விமானம் எனப்படும்.

சிவன் பெயருடன் விநாயகர்: சிவனில் இருந்து தோன்றியதால் முருகனை சிவனின் அம்சம் என்றும், அம்பிகையால் தோற்றுவிக்கப்பட்டதால் விநாயகரை சக்தியின் அம்சம் என்றும் கூறுவர். சிவமின்றி சக்தியும், சக்தியின்றி சிவமும் இல்லை. எனவே, விநாயகரையும் சிவ அம்சமாக கருதலாம். இவர் தந்தையின் “ஈசுவரன்” பட்டத்தையும் பெற்றிருக்கிறார். இதனை உணர்த்தும்விதமாக இக்கோயிலில் விநாயகரே, சிவனாக கருதி வழிபடப்படுகிறார். சிவனின் பெயரால் இவர், “ஆதிகும்பேசுவரர்’ என்று அழைக்கப்படுவது சிறப்பு.

ஏகாதச ருத்ரசபம்: சிவனிடம் இருந்து படைப்புத்

தொழிலைப் பெற்ற பிரம்மா, ஒரு கோடி உயிர்களைப் படைத்தார். ஆனால் அவர்களுக்கு அழிவு உண்டாகவில்லை. எனவே, பிரம்மா சிவனிடம் வேண்டினார். சிவன் அவரிடம், தான் தவத்தில் இருந்தபோது பிறந்ததால்தான் அவர்களுக்கு அழிவில்லை என்றும், அவர்கள் தன் பெயராலேயே “ருத்ரர்கள்’ என அழைக்கப்படுவர் என்றார். மேலும் அவர்களுக்கு படைப்புத் தொழிலுக்கு உதவியாக இருக்கும் பணியையும் கொடுத்தார். மகிழ்ந்த ருத்ரர்கள் யாகம் நடத்தி சிவனை வணங்கினர். சிவ அம்சமான ருத்ரர்கள் சிவனுக்குரிய உயர்ந்த மந்திரங்களை சொல்லி வணங்கி செய்த பூஜையே, “ருத்ர சபம்’ ஆகும்.

ஆனி மாதம் வளர்பிறை பூச நட்சத்திரத்தன்று, இக்கோயிலில் விநாயகருக்கு, சிவனுக்குரிய “ஏகாதச ருத்ரசபப் பாராயணம்’ நடக்கிறது. இந்த பாராயணத்தின் போது 11 வேதவிற்பன்னர்கள், சிவனுக்குரிய மந்திரங்களை 11 முறை சொல்லி பூசை செய்கின்றனர். இந்த பாராயணம் கேட்பவர்களது பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சுயம்பு விநாயகர்: சுயம்பு மூர்த்தியான விநாயகர் முழு உருவமும், முறையான அமைப்பும் இல்லாமல் காட்சி தருகிறார்.

சிறப்பு:

தவம் செய்வதற்காக வந்தவர் என்பதால், இக்கோயிலில் விநாயகர் மட்டும் தனியாகக் கோயிலில் மூர்த்தியாக இருக்கிறார். பிரகார தெய்வங்கள் ஏதுமில்லை. கோயில் வளாகத்தில் ஒரு அரச மரம் உள்ளது. இம்மரத்திற்குள் ஒரு நாகர் சிலை இருக்கிறது. இதை வெளியில் இருந்து பார்க்க முடியாது. இதற்கு முன்னால் நாகதீபம் ஒன்று இருக்கிறது. இந்த தீபம் நாகம் போலவே, வளைவாக அமைக்கப்பட்டிருக்கிறது. நாகதோடம் உள்ளவர்கள் இந்த தீபத்தில் விளக்கேற்றி, மரத்திற்கு புத்தாடை அணிவித்து வழிபடுகிறார்கள். இதனால் தோடம் நீங்குவதாக நம்பிக்கை.

பிரார்த்தனை:

செய்த தவறுக்கு வருந்தி மன்னிப்பு வேண்டுபவர்கள், மன அமைதி பெற விரும்புபவர்கள் இவரிடம் வேண்டிக்கொண்டால் மன அமைதி உண்டாகும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

விநாயகருக்கு திருமுழுக்காட்டு செய்தும் புத்தாடை அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *