தென்திருவாலவாய் திருக்கோயில், மதுரை

அருள்மிகு தென்திருவாலவாய் திருக்கோயில், தெற்கு மாசி வீதி, மதுரை, மதுரை மாவட்டம்.

+91 452 2344360

காலை 6 .30 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்

மூலவர் திருவாலவாயர்
அம்மன் மீனாட்சி
தல விருட்சம் அரசமரம்
தீர்த்தம் சிவதீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் ஆலவாய்
ஊர் மதுரை
மாவட்டம் மதுரை
மாநிலம் தமிழ்நாடு

மதுரை மாநகரில் சைவசமயமும் சமண சமயமும் தீவிரமாக இருந்த சமயம். அப்போது மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் கூன்பாண்டியன். அவர் சைவசமயத்தை சேர்ந்தவன். ஆனால் தீடீரென்று சமண சமயத்திற்கு மாறிவிடுகிறான். அவன் மனைவி மங்கையர்க்கரசி சைவ சமயத்தை சார்ந்தவள். மிகவும் தீவிர பற்றுள்ளவள். கணவனின் திடீர் மாற்றம் அவளுக்கு மிகுந்த வருத்தத்தை தந்தது. அதனால் சிவபெருமானிடம் சென்று மனமுருக அழுது வேண்டுகிறாள். அப்போது சிவபெருமான் கூன்பாண்டியனுக்கு வெப்பு நோய் தருகிறார். உடம்பு பூராவும் வெப்பத்தால் பாதிக்கப்படும் மிகவும் கொடிய நோய் அது. கூன்பாண்டியனால் அந்த நோயைத் தாங்க முடியவில்லை. அப்போது சமணர்கள் எவ்வளவோ வைத்தியம் செய்து பார்க்கின்றனர். நோய் குணமாகவில்லை. அப்போது மங்கையர்க்கரசியின் கனவில் சிவபெருமான் தோன்றி,”தென்திருவாலவாய் கோயிலுக்கு சென்று ஞானசம்பந்தரால் இயற்றப்பட்ட திருநீற்றுப்பதிகம் பாடி அந்த சுவாமிக்கு அனைத்து அபிசேக அர்ச்சனைகளும் ‌செய்து அந்த திருநீற்ற‌ை எடுத்து உன் கணவனான பாண்டிய மன்னன் மீது பூசி விட்டால் அந்த வெப்பு நோய் தீர்ந்து விடும்என்று கூறுகிறார். உடனே அதுபடியே செய்ய அந்த வெப்பு நோய் தீர்ந்து விடுகிறது. கூன்பாண்டியன் சிவபெருமானின் இறையருளை முழுமையாக உணர்ந்து, தன் அங்கமெல்லாம் ஒரு கணம் ஆடிப்போய் அவரின் கருணைக்கு தலைவணங்கி சமணத்திலிருந்து மீண்டும் சைவ சமயத்திற்கு வந்து சிவத்தொண்டு புரியலானார் என வரலாறு கூறுகிறது.

பண்டைய காலத்தில் திருவிளையாடல் புராணத்தில் மதுரைக்கு வழிகாட்டிய படலம் உண்டு. ஒரு காலத்தில் கடல் பொங்கி மதுரை மாநகரமே எல்லைகள் எல்லாம் தெரியாமல் குறுகிப்போய், மதுரை சுருங்கிவிட்டது. அப்படி, கடல் பொங்கி குறுகிய மதுரையை முந்தைய அளவிற்கே மீண்டும் அமைக்க, வங்கிய சேகர பாண்டிய மன்னன், சிவ பெருமானிடம் வேண்டுகிறான். அப்போது சிவபெருமான் ஆலவாய் என்றழைக்கப்படும் ஒரு பெரிய பாம்பை வீசிப் போடுகிறார். போட்டு விட்டு அந்த பாம்பு மதுரைய‌ையே ஊரின் முழுக்க வட்டமடித்து காட்டுகிறது. அப்போது தென்திருவாலவாய் கோயில் இருக்கும் இடத்தில்தான் அந்த பாம்புடைய வாயும், வாலும் ஒன்று சேர்ந்தது. அதனால்தான் இந்த கோயிலும் தெற்கு திசையில் உள்ளது. அதனால் தென்திருவாலவாய் என்று அழைக்கப்படுகிறது. ஆலவாய் என்ற பாம்பு, தெற்கு திசை எல்லாம் சேர்ந்து தென் திரு ஆலவாய் என்று பெயர் வந்தது.

இக்கோயிலில் உள்ள அரசமரத்தை 108 முறை வலம் வந்து திருவாலவாய சுவாமியை நினைத்து உள்ளம் உருகி வேண்டி நின்றால், மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகள் கூட குணமடைந்து உடல்நலம் பெறுகிற அதிசயம் இத்தலத்தில் நடக்கிறது. ‌மேலும் நீண்ட ஆயுள் வேண்டுபவர்கள் இத்தலத்துக்கு வந்து இந்த அஸ்வத்தபிரதட்சணம் அதாவது 108 முறை வலம் வந்து வணங்குகின்றனர். இத்தலத்தில் 60ம் கல்யாணம் செய்வதும் ஏராளமாக நடக்கிறது. அவர்களே சதாபிசேகமும் (80) செய்து நல்ல ஆயுளை அடைகின்றனர். மதுரையில் உள்ள பஞ்ச பூத தலங்களில் பழைய சொக்கநாதரை வழிபட்டால் செல்வம் செழிக்கும். இம்மையில் நன்மை தருவாரை வணங்கினால் பதவி கிடைக்கும், தென்திருவாலவாய சுவாமியை வணங்கினால் மரண துன்பம் நீங்கும் என்று புராணங்கள் கூறுகின்றன. தவிர இந்த நான்கு ‌‌கோயில்களுக்கும் நடுவில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரரை வழிபட்டால் இந்நான்கும் கிடைக்கும். இங்குள்ள மூர்த்தி மதுரையில் உள்ள தலங்களில் அளவில் பெரியவர். இது திருநீற்றுப்பதிகம் பாடப்பெற்ற தலம்.

மனிதனுக்கு மரணத்தை விடக் கொடிய பகைவனும் இல்லை. அந்த மரணத் துயரை மாற்றும் வைத்தியனை விடச் சிறந்த நண்பனும் இல்லை. இத்தகைய வைத்தியநாதப்பெருமான் எழுந்தருளிக் காலன் வருங்கால் காட்சி கொடுக்கக் காத்திருக்கும் திருத்த‌லமே தென்திருவாலவாய் ஆகும். தனக்கு நோய் நொடி வந்து உயிருக்கு பங்கம் வருமோ எனும் பயம் எல்லோர் உயிரையும் எடுக்கும் எமனுக்கே வந்து விடுகிறது. சிவபெருமானை வணங்க அவரும் காட்சி தருகிறார். அப்போது சிவன், “தென்திருவாலவாய் க‌ோயிலுக்கு சென்று வழிபட்டு அந்த திருநீற்றை பூசு; இனி உனக்கு மரணபயமே கிடையாதுஎன்கிறார். எமனும் வந்து வழிபட்டு தன் மரணபயம் நீங்கப் பெற்றான். அத்தகையை சிறப்பு வாய்ந்த தலைம் இது.

வெளியூர்,வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள் ஆகியவற்றில் இருந்தெல்லாம் இக்கோயிலுக்கு உடல்நலம் வேண்டி வருகிறார்கள். இக்கோயில் மதுரையில் உள்ள பஞ்ச பூத தலங்களில் அக்னி தலம் ஆகும். திருவிளையாடற் புராணக் கதைகளில் ஒன்றான மதுரைக்கு எல்லை கட்டிய படலம் நிகழப்பெற்ற கோயில் இது.

திருவிழா:

கந்த சஷ்டி ஐப்பசி – 6 நாட்கள் திருவிழாசுப்ரமணியருக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள். அன்னாபிசேகம் ஐப்பசி பௌர்ணமி நாளில் சிறப்பாக நடைபெறும்.

ஆடிப்பூரம்,கார்த்திகை சோம வாரங்களில் சங்காபிசேகம் சிறப்பாக நடைபெறும்.

பௌர்ணமி தோறும் திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெறும்.

ஆடி வெள்ளி, தைவெள்ளி ஆகிய விசேச தினங்களில் 1008 திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது.

தவிர தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி, தமிழ் ஆங்கில வருடப்பிறப்பு உள்ளிட்ட அனைத்து விசேச நாட்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக அர்ச்சனைகள் நடைபெறும். மாதத்தின் பிரதோச நாட்களில் வெகுசிறப்பாக அபிசேக ஆராதனைகள் நடைபெறும்.

கோரிக்கைகள்:

இங்குள்ள தென் திருவாலவாய சுவாமியை வணங்கினால் நோய் நொடிகள் நீங்கப்பெறுவதால் ஏராளமான பக்தர்கள் இங்கு வரு‌கை தருகின்றனர். இறைவனை வணங்குவோர்க்கு மன நிம்மதி கிடைக்கும். இத்தலத்து அம்பாளை வழிபட்டால் திருமணவரம், குழந்தை வரம் ஆகி‌யன கிடைக்கின்றன. சுவாமிக்குப் புத்தாடை வழங்கினால் பெரிய அளவில் புண்ணியம் கிட்டும். கல்வி வரம், எடுத்தகாரியம் நடைபெற இத்தலத்தில் வழிபடலாம்.

நேர்த்திக்கடன்:

சுவாமிக்கு இத்தலத்தில் பால் அபிசேகம் செய்தல் சிறப்பு. தேன், என்ணெய், இளநீர், சந்தனம், பன்னீர், நல்லெண்‌ணெய் ஆகியவற்றால் சுவாமிக்கு அபிசேகம் செய்து நேர்த்திகடனை செய்கின்றனர். அம்பாளுக்கு புடவை சாத்துகின்றனர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம். வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *