தீர்த்தகிரீசுவரர் திருக்கோயில், தீர்த்தமலை

அருள்மிகு தீர்த்தகிரீசுவரர் திருக்கோயில், தீர்த்தமலை, தர்மபுரி மாவட்டம்.

+91-4346 -253599

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் தீர்த்தகிரீசுவரர்
அம்மன் வடிவாம்பிகை
தல விருட்சம் பவளமல்லிமரம்
தீர்த்தம் இராமதீர்த்தம், குமாரர், அகத்தியர்,கௌரி, அக்னி தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் தவசாகிரி
ஊர் தீர்த்தமலை
மாவட்டம் தர்மபுரி
மாநிலம் தமிழ்நாடு

இராவணனை சம்காரம் செய்து விட்டு அயோத்தி நோக்கி போகும் போது இங்கு சிவபூஜை செய்ய விரும்பினார். இராமன் அனுப்பிய அனுமனால் பூஜைக்கு காசியிலிருந்து தீர்த்தமும் பூவும் எடுத்து வரத் தாமதமாகி விட்டது. ஆஞ்சநேயர் தீர்த்தம் எடுத்து வரத் தாமதமாகி விட்டதால் இராமர் தனது பாணத்தை எடுத்து மலையில் விட்டார். அவர் பாணம் விட்ட பாறையிலிருந்து தீர்த்தம் வந்தது. அதை வைத்து சிவபூஜை நடத்தினார். இதனால் இதற்கு இராமர் தீர்த்தம் என்று பெயர் வந்தது. மேலும் ஆஞ்சநேயர் தான் எடுத்து வந்த தீர்த்தத்தை வீசி எறிய அது 12 கி.மீ. தூரத்தில் தென்பெண்ணையாற்றங்கரையில் விழுந்து, அனுமந்த தீர்த்தம் என்று பெயர் பெற்றது. அனுமந்த தீர்த்தத்தில் குளித்து விட்டு இங்கு வந்து இராம தீர்த்தத்தில் குளித்தால் பாவங்கள் விலகும்.

இராம பிரான், சிவபெருமானை இரண்டிடங்களில் பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்துள்ளார். அதில் ஒன்று பெருஞ்சிறப்பு பெற்ற இராமேசுவரம். மற்றொன்று தீர்த்தங்கள் நிறைந்த தீர்த்த மலை.

இத்தலத்தின் மிக விசேஷமானவை தீர்த்தங்கள் ஆகும். அற்புத மூலிகைகளின் சத்து கலந்து விளங்குவதால் பக்தர்களின் உடற்பிணி உளப்பிணி யாவும் தீர்ந்து, புத்துணர்வும் புதுவாழ்வும் பெறுகின்றனர். மலை மீது அமைந்துள்ள இக்கோயிலில் இந்த தீர்த்தங்களின் சிறப்பு:

மரம், செடி, கொடி, இலைகளில் இருந்தும் பாறைகளில் இருந்தும் இறைவனால் வெளிப்படுத்தப்பட்ட அரிய தீர்த்தம் இது. இராமனுக்காக அருளப்பெற்ற இதில் ஸ்ரீராமஜெயம் என்று முழுகினால் சகல பாவங்களும் நீங்கும் என்று புராணம் கூறுகிறது.

முருகனை தேவ சேனாதிபதியாக நியமித்த போது இத்தீர்த்தத்தால் முருகனுக்கு அபிஷேகம் செய்தனர் என, புராணம் கூறுகிறது. முருகனுக்காக வழங்கப்பட்ட இத்தீர்த்தத்தை தெளித்துக் கொள்வதாலும் பருகுவதாலும் உயர்ந்த வாழ்வும் ஞானமும் பெருகும்.

இது அன்னை வடிவாம்பிகைக்காக வழங்கப்பெற்றது. இத்தீர்த்தத்தை கொண்டு இறைவனை வழிபாடு செய்ததால், அன்னை வடிவாம்பிகை இறைவனை மணந்தார். இறைவனின் இடப்பாகத்தில் இடம் பெற்றவள் என புராணம் கூறுகிறது. இதனைக்கொண்டு அம்மை அப்பரை வணங்கினால் திருமண பாக்கியம் கிடைக்கும். திருமணத் தடையாக இருக்கும் சகல தோசங்களும் நீங்கும். இல்லறம் நல்லறமாக இருக்கும்.

அகத்திய மாமுனிவரின் குன்ம நோய்(அல்சர்) நீங்க இறைவனால் அருளப்பெற்றது. இத்தீர்த்தம் தாமிரசத்தும், மூலிகைகளின் சக்தியும் கொண்டது. இத்தீர்த்தத்தை குடிக்கவும், உணவு சமைக்கவும் பயன்படுத்தி வந்தால் அல்சர் நீங்கி ஜீரண சக்தி கிடைக்கும். வயிற்று வலியும் குணமடையும்.

அக்னி தேவனின் பெண்ணாசையால் ஏற்பட்ட பாவங்களைப் போக்கிய தீர்த்தம் இது. இதனால் உடலின் தட்பவெப்பம் சமமாகும். ஆஸ்துமா, அடிக்கடி சளிப்பிடித்தலும் குணமாகும்.

1000 வருடங்களுக்கும் மேலாக பழமை வாய்ந்த கோயில் இது. 1041 ல் ராஜ ராஜ குலோத்துங்க சோழனால் திருப்பணி நடைபெற்ற பழமையான கோயில் இது. மலை மீது அமைந்த அற்புதமான சிவ தலம் இது.

அருணகிரி நாதர் இத்தலம் குறித்து பாடியுள்ளார்.

இத்தல விநாயகர் சித்தி விநாயகர். மலைக்கு மேற்கே வாயுதீர்த்தம், வருண தீர்த்தம் உள்ளது. கிழக்கில் இந்திர தீர்த்தம் உள்ளது. வடக்கே அனுமந்த தீர்த்தம் உள்ளது. தெற்கே எம தீர்த்தம் உள்ளது. மலையின் உச்சியில் வசிஷ்டர் தீர்த்தம் உள்ளது. இப்படியாக தீர்த்தங்களால் சூழப்பெற்ற அற்புத மலை தீர்த்த மலை என்பது குறிப்பிடத்தக்கது.

திருவிழா:

மாசி மாதம் பிரம்மோற்சவம் – 10 நாட்கள் வாகனத்தில் சுவாமி புறப்பாடு – 7ம் நாள் தேரோட்டம் – 5 ம் நாள் திருக்கல்யாணம், 10 ம் நாள் சத்தாபரண உற்சவம்(சயன உற்சவம்). சித்திரை மாதம் வருடப்பிறப்பு – 365 லிட்டர் பால் அபிஷேகம் (உச்சி கால பூஜை).

நவராத்திரி, ஆடி 18 திருவிழா ஆகியவை இத்தலத்தில் விசேஷம். பவுர்ணமி அன்று இரவு 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். அன்று இரவு இத்தலத்தில் பவுர்ணமி கிரிவலம் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இத்தலத்தில், ஆங்கில, தமிழ்ப்புத்தாண்டு தினங்கள், மாதந்தோறும் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது.

கோரிக்கைகள்:

இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும். இது உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீருகிறது. மேலும் குழந்தை வரம் மற்றும் குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பக்தர்கள் பெரும்பாலும் பிரார்த்தனை செய்கிறார்கள். கடன் தொல்லை தீரவும் இத்தலத்தில் வேண்டுகின்றனர். இங்கு வழிபட்டால் பக்தர்களின் எல்லா குறைகளும் நிவர்த்தியாகும். குழந்தை வரம் வேண்டுவோர் தொட்டில் கட்டி வழிபடுகின்றனர். இங்குள்ள பெரிய புற்றில் கயிறு கட்டி வழிபடுகின்றனர். இந்த நாகப்புற்றை வணங்கினால் நாக தோஷம் நிவர்த்தியாகிறது. தலமரமான பவளமல்லி மரத்தில் கயிறு கட்டினால் திருமண தடை நீங்கும். மலை மீது ஏறிவந்து வழிபடும் போது மூலிகை காற்றை சுவாசிப்பதால் பக்தர்களின் நோய் நொடிகள் நீங்குகின்றன

நேர்த்திக்கடன்:

முடி எடுத்தல், காது குத்தல் ஆகியவற்றை பக்தர்கள் நேர்த்திகடன்களாக இத்தலத்தில் பக்தர்கள் செலுத்துகின்றனர். தவிர சுவாமிக்கு தேன், நல்லெண்ணெய், திரவியப் பொடி, பால், தயிர், பழச்சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீறு, அரிசி மாவு, பழவகைகள் ஆகியவற்றால் அபிஷேகம் செய்கிறார்கள். சொர்ணாபிசேகம் செய்கிறார்கள். தவிர உலர்ந்த தூய புத்தாடை சாத்தலாம். அம்பாளுக்கு புடவை சாத்துகிறார்கள். அன்னதானமும் பக்தர்கள் செய்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *