சுயம்புலிங்க சுவாமி திருக்கோயில் , உவரி

அருள்மிகு சுயம்புலிங்க சுவாமி திருக்கோயில் , உவரி, திருநெல்வேலி மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சுயம்புநாதர்
அம்மன் பிரம்பசக்தி
தல விருட்சம் கடம்பமரம்
தீர்த்தம் தெப்பகுளம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் வீரைவளநாடு
ஊர் உவரி
மாவட்டம் திருநெல்வேலி
மாநிலம் தமிழ்நாடு

அருகில் உள்ள கூட்டப்பனையிலிருந்து ஒருவர் பால் விற்க தினமும் உவரி வழியாக செல்லும் போது, தற்போது சுவாமி இருக்கும் இடத்தருகே வரும் போது, கால் இடறி விழுந்து கொண்டே இருந்தார். கால் இடறக் காரணமாக இருந்த கடம்ப மரத்து வேரை வெட்டி வீழ்த்திய போது இரத்தம் பீறிட்டது. இறைவனும் அசரீரியாக, தான் இந்த இடத்தில் குடிகொண்டிருப்பதாகவும், தனக்கு கோயில் கட்டி வழிபாடு நடத்தும்படியும் சொல்ல பனை ஒலையில் கோயில் கட்டினர். நாளடைவில் பெரிய அளவில் கோயில் கட்டப்பட்டது. சுவாமியை வழிபட்டால் கூன், குஷ்டம் ஆகிய நோய்கள் குணமாவதால் இத்தலம் மிகவும் பிரபலமானதாக உள்ளது.

இறைவனின் சிறப்புடைய 25 மூர்த்தங்களில் ஒன்று இலிங்கோத்பவர். இங்கே இறைவன் சுயம்பு இலிங்கோத்பவராக உள்ளார்.

மார்கழி மாதம் 30 நாளும் சுயம்பு லிங்கத்தின் மேல் சூரிய ஒளி படும். வேறு சில ஆலயங்களில் இது போல் சூரிய ஒளி லிங்கத்தின் மேல் விழுவதுண்டு என்றாலும் அங்கொல்லாம் ஒருநாள் இருநாள் மட்டுமே விழும். மாதத்தின் முப்பது நாளும் முழுமையாக சிவலிங்கத்தின் மீது மேல் சூரிய ஒளிபடுவது உலகிலேயே இங்கு மட்டும்தான். கடல் ஓரத்தில் 4 ஊற்றுகள் உள்ளன. இவை அனைத்தும் நல்ல தண்ணீர் ஊற்றுகள். சுவாமியின் அபிஷேகத் தண்ணீர் இது என்பது மற்றொரு அதிசயம். மனமுருக வழிபட்டால் வயிற்று வலி மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களின் நோய்குணமாகிறது. இந்த கடற்கரைக்கோயிலுக்கு ஒருமுறை சென்றவர்கள் மிகுந்த மனநிம்மதியோடு திரும்பி வருவார்கள்.

சுற்றுலாப்பயணிகள் வந்து போகுமளவுக்கு சிறப்புடைய அழகிய கோயில் பனையும் தென்னையும் பாக்கும் வாழையும் சூழ்ந்த இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரை கிராமத்தில்தான் இந்த உவரி கோயில் உள்ளது.

திருவிழா:

வைகாசி விசாகம் (3 நாள்) – மகர மீனுக்கு சுவாமி காட்சிதருதல். தைப்பூசம் – 1 நாள்.

ஒவ்வொரு தமிழ்மாத கடைசி வெள்ளிக் கிழமைகளிலும் இக்கோயிலில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வெள்ளமாக கூடுவர். தவிர வைகாசி விசாகம், தைப்பூசம், பங்குனி உத்திரம், ஆடி அமாவாசை, தை அமாவசை, திருவாதிரை திருநாள், கார்த்திகை தீபம் ஆகியவை இத்தலத்து விழாக்களாகும். தவிர பௌர்ணமி, கார்த்திகை, விநாயகர் சதுர்த்தி, தமிழ் மாதப்பிறப்பு, பிரதோசம், தீபாவளி, பொங்கல், ஆகிய நாட்களில் கோயிலில் விசேச பூஜைகளும் அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.

கோரிக்கைகள்:

எந்த நோயாக இருந்தாலும் 41 நாள் கடல் நீராடி சுயம்புலிங்க நாதரைத் தொழுதால் தீருகிறது. நொண்டிகள், கூன், குருடு, மனநோயாளிகள், பில்லி, சூன்யம், பேய் பிசாசு பிடித்தவர்கள் அகியோரது பிரச்னைகள் இங்குள்ள சுயம்புலிங்கநாரை வழிபட்டால் தீருகிறது.

கல்யாண வரம், குழந்தைபாக்கியம் வேண்டுவோர் இத்தலத்து ஈசனை வணங்கினால் அந்த வரங்கள் கிடைத்து வருவது இத்தலத்து பக்தர்கள் காலம் காலமாக பார்த்து வரும் உண்மை.

மனஅமைதி இழந்து தவிப்போர் இத்தலத்துக்கு வந்தால் மனநிம்மதி கிடைக்கும்.

நேர்த்திக்கடன்:

கடற்கரை மண்ணை 11 அல்லது 41 ஓலைப்பெட்டியில் சுமந்து போட்டு வழிபடுதல் இங்கு விசேசமான வழிபாடாக உள்ளது. நாகர் அடித்து வைப்பார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *