சுகந்த பரிமளேஸ்வரர் திருக்கோயில், திருமணஞ்சேரி

அருள்மிகு சுகந்த பரிமளேஸ்வரர் திருக்கோயில், திருமணஞ்சேரி, புதுக்கோட்டை மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பரிமளேஸ்வரர்
தீர்த்தம் கிணற்று நீர்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் திருமணஞ்சேரி
மாவட்டம் புதுக்கோட்டை
மாநிலம் தமிழ்நாடு

இத்தலம் ஒரு காலத்தில் ராஜராஜ வளநாடு என அழைக்கப்பட்டது. இங்கு வசித்த வணிகர் ஒருவருக்கு அழகான மகள் இருந்தாள். இவளை மதுரையில் வசித்த தன் தங்கை மகனுக்குத் திருமணம் செய்ய முடிவெடுத்தார் வணிகர். ஆனால், அவன் இன்னொரு பெண்ணை காதலித்து திருமணமும் முடித்து விட்டான். இவ்விஷயம் தெரிந்தும், தங்கை மகனுக்கே மகளைக் கொடுப்பதென்ற முடிவில் இருந்தார் வணிகர். பெற்றவர் பேச்சை மீறாத அந்த பெண்ணும், கடவுள் சித்தப்படி நடக்கட்டும் என விட்டுவிட்டாள். தினமும் தங்கள் ஊரிலுள்ள சுகந்த பரிமளேஸ்வரர் கோயிலுக்கு சென்று, சுவாமியையும், பெரியநாயகி அம்பாளையும் வணங்கி வந்தாள். காலம் சென்றது.

அப்பெண்ணின் பெற்றோர் இறந்து விட்டனர். அனாதையான அவள் பரிமேளஸ்வரர் சன்னதிக்கு சென்று அழுதாள். இறைவன் அவளுக்கு தந்தை ஸ்தானத்தில் இருந்து உதவ முடிவெடுத்தார். அவர் முதியவர் வடிவில் அங்கு வந்து, அந்த பெண்ணுக்கு ஆறுதல் கூற வந்த அவளது முறைப்பையனிடம், “அவள் உனக்காகவே பிறந்தவள். நீ இன்னொரு திருமணம் செய்திருந்தாலும் கூட, ஆதரவற்றவளாய் நிற்கிறாள். எனவே, நீயே அவளைத் திருமணம் செய்து கொள்என்றார். அவன் அவளுக்கு அவ்விடத்திலேயே மாலை சூடினான்.அப்பெண் அந்த முதியவரிடம்,”பெரியவரே! நான் அவரது மனைவியாகி விட்டேன். இங்கு உங்களைத் தவிர வேறு சாட்சி இல்லை. மதுரையில் உள்ளவர்கள் எங்களுக்கு திருமணம் நடந்ததற்கு சாட்சி கேட்டால் என்ன செய்வேன்?” என்றாள். அதற்கு பெரியவர், “இத்தல விருட்சமான வன்னிமரமும், இக்கோயில் கிணறும்தான் இத்திருமணத்தைப் பார்த்தன. உனக்கு பிரச்னை ஏற்படுமானால், இவை மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்து சாட்சி சொல்லும்என்றார். பின்னர் மறைந்து விட்டார். இறைவனே தங்கள் திருமணத்தை நடத்தி வைத்துள்ளார் என்பதை உணர்ந்த அத்தம்பதியர் மகிழ்வுடன் மதுரை வந்தனர். இதை மூத்தவளும், அவளது உறவினர்களும் ஏற்கவில்லை. இறைவன் திருமணம் முடித்து வைத்தார் என்பதற்கு என்ன சாட்சி என கேட்டனர். அவர்கள் மீனாட்சியம்மன் கோயிலுக்குள் சென்றால், வன்னிமரமும், கிணறும் தோன்றி சாட்சியளிக்கும் என்றனர். எல்லாரும் கோயிலுக்குச் சென்றனர். கோயிலின் வடக்கு பிரகாரத்தில் வன்னிமரமும், கிணறும் தோன்றின. (இக்கிணறு இன்றும் உள்ளது. வன்னிமரம் ஆடிவீதியில் இருக்கிறது) அனைவரும் இறைவனின் லீலையே இது என்பதை உணர்ந்தனர். பின்னர் இருவரும் அவனுடன் இன்புற்று வாழ்ந்தனர். இக்கோயிலில் இருந்த வன்னிமரமும், கிணறும் மதுரைக்கு சாட்சி சொல்ல சென்று விட்டதால், இக்கோயிலுக்கென தல விருட்சம் கிடையாது. தல விருட்சம் இல்லாத சிவாலயம் என்ற சிறப்பை இது பெறுகிறது. அதுபோல் இக்கோயிலைச் சுற்றி, கோயிலின் சங்கு ஒலி கேட்கும் தூரத்துக்குள் கிணறு வெட்ட முயற்சித்தால், வேலையில் தடங்கல் ஏற்பட்டு நின்று விடுகிறது. கோயில் குளத்தில் இருந்தே சுவாமிக்கு அபிஷேக நீர் எடுக்கப்படுகிறது. மழை காலத்தில் குளத்தில் தண்ணீர் அதிகமாக இருக்கும். கோயிலில் உள்ள குளத்து நீருக்கு விஷத்தை முறிக்கும் சக்தியுண்டு என நம்பப்படுகிறது. சுவாமிக்கு திருமணநாதர் என்ற பெயரும் உள்ளது.

எல்லா சிவாலயங்களிலும் நந்திதேவர் கோயிலுக்குள் கொடி மரத்தின் அருகில்தான் இருப்பார். ஆனால், இந்தக் கோயிலில் ராஜகோபுரத்துக்கு முன்னால் நந்தி தேவர் உள்ளார். இவர் சுயம்புவாக எழுந்தருளியவர் (தானாக தோன்றியவர், சிற்பி செதுக்காத சிலை) என்பதால் சக்தி அதிகம். இதனால் நந்திக்குத் தனி மண்டபம் இல்லை. தரையிலேயே அமர்ந்துள்ளார். இவரை வணங்கி அபிஷேகம் செய்தால் மழை பெய்யும் என்ற நம்பிக்கை உள்ளது.

காளமேகப்புலவர் இத்தலத்து இறைவனை வணங்க வந்த போது அக்னி ஆற்றை கடும் வெயிலில் கடந்தார். கால் சூடு தாங்காமல், திருமணநாதரைக் குறித்து பாடல் பாடினார். இறைவன் இவரது பக்தியை மெச்சி ஆற்றில் திடீரென தண்ணீர் வரச் செய்தார். காளமேகப்புலவர், நீர் நிறைந்த ஆற்றில் இறங்கி நடந்து வந்தார். வறட்சி வராமல் தடுக்கவும் இவரை பிரார்த்திக்கலாம். அர்த்தநாரீஸ்வரர் சிற்பமும் இக்கோயிலில் உள்ளது. திருமணத்தலம் என்பதற்கு மற்றொரு சான்றாகும். வாழ்க்கையில் இணைபவர்கள் கருத்தொருமித்து வாழ வேண்டும் என்பதற்கு இது சாட்சியாக உள்ளது.

கோயிலில் இருந்து 2 கி.மீ., தூரத்தில் அக்னியாறு ஓடுகிறது. இந்நதியில் மழைக்காலத்தில் மட்டுமே தண்ணீர் வரும். அவ்வாறு வந்து இதில் நீராடும் பாக்கியம் கிடைத்தால் அஞ்ஞானம் (அறியாமை) அழியும் என்பது நம்பிக்கை.

திருவிழா:

சித்திரை மாதப்பிறப்பு, வைகாசி விசாகம் (பத்துநாள் விழா), ஆனி திருமஞ்சனம், ஆடிப்பெருக்கன்று புதுமணத்தம்பதிகள் கூடும் விழா ஆகியவை முக்கியமானவை.

கோரிக்கைகள்:

இறைவனே முன்னின்று திருமணம் நடத்தி வைத்த தலம் என்பதால், நீண்ட காலமாய் திருமணம் தடைபடுவோர் திருமண வரம் வேண்டி பிரார்த்தனை செய்து கொள்ளலாம்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள்நிறைவேறியவர்கள்றைவனுக்கும்  அம்மனுக்கும்திருமுழுக்காட்டுசெய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *