சோமநாதர் திருக்கோயில், பெருமகளூர்

அருள்மிகு சோமநாதர் திருக்கோயில், பெருமகளூர், பேராவூரணி தாலுகா, தஞ்சாவூர் மாவட்டம்.

+91- 90479 58135

காலை 7 மணி முதல் 9 மணி வரை, மாலை மணி 5 முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சோமநாதமுடையார்
அம்மன் சுந்தராம்பிகை, குந்தளாம்பிகை
தல விருட்சம் செந்தாமரைக் கொடி
தீர்த்தம் லெட்சுமி தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் சதூர்வேதி மங்கலம், பெருமூள்ளுர், பேரூர்
ஊர் பெருமகளூர்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

முன்னொரு காலத்தில் பெருமகளூர் கிராமத்தில் உள்ள பொதுக் குளத்தில் சோழ மன்னனின் யானை ஒன்று செந்தாமரையை பறிக்க முயன்ற போது, குளம் முழுவதும் செந்நிறமாக மாறியிருந்தது. இதை அறிந்த மன்னன் பதறி வந்து பார்த்த போது, தண்ணீருக்கு அடியில் சிவலிங்கம் இருப்பதை அறிந்தான். தான் தவறு செய்து விட்டதாக சோழமன்னன் சிவலிங்கத்தை கட்டித் தழுவி தவறுக்கு மன்னிப்பு கேட்டுள்ளான். அவன் கட்டித்தழுவியபோது சிவலிங்கத்தின் மீது மன்னன் அணிந்து இருந்த முத்து, வைரம், வைடூரிய நகைகளின் தடயம் பதிந்தது. இதற்கு அடையாளமாக இன்றும் கூட சிவலிங்க பாணத்தின் மீது அடையாளங்கள் உள்ளன. இதை அடுத்து சிவலிங்கம் இருந்த இடத்தை தூர்த்து இந்த சோமநாதர் கோயிலை சோழ மன்னன் கட்டியுள்ளான். இக்கோவிலை பாண்டியர்களும் திருப்பணி செய்துள்ளனர்.

தசரத மகாராஜா குழந்தை வரம் வேண்டி, புத்திரகாமேஷ்டி யாகம் தொடங்கும் முன், மாபெரும் சோம யாகம் நடத்த எண்ணி, தக்க இடத்தை தேர்ந்தெடுக்குமாறு குலகுருவான வசிஷ்டர் மகரிஷியை வேண்டியுள்ளார். சோம யாகத்திற்கு பெயர் பெற்ற தஞ்சை மாவட்டத்தில் உள்ள அம்பர் மாகாளம் என்னும் திருத்தலத்தில் அவ்வாண்டு வசிஷ்டர் குறித்த தேதியில் வேறு ஒரு சோம யாகத்தை நிகழ்த்த அவ்வூர் மக்கள் நிச்சயித்து இருந்தனர். அத்தேதியில் செய்யாவிடில் அதற்கு அடுத்த சரியான தேதி மூன்று ஆண்டு கழித்து வருவதால் தசரத மகாராஜா அம்பர் மாகாளத்திற்கு ஈடான திருத்தலத்தை கண்டு சொல்லுமாறு வசிஷ்டரை வேண்டியுள்ளார்.

வசிஷ்டர் கைலாயம் சென்று அகத்தியரை நாடி விளக்கம் வேண்டினார். திரிபுவன சித்தர் தவ செய்த இடமான பெருமகளூரே, பூலோகம், பூவர்லோகம், சுவர்லோகம் என்ற மூன்று லோகங்களும் சோம யாகம் செய்ய சிறந்த இடமாகும். அத்துடன் அம்பர் மாகாளத்திற்கு ஈடான சிவத்தலமாகும். மேலும் இங்குள்ள மூலவர், இந்த யுகத்திலிருந்து சோமநாதர் என்ற திருநாமத்தை தாங்கி, சிவலிங்க மூர்த்தியாக அருள்பாலிப்பார் என்று அகத்தியர் விளக்கம் தந்திட, தசரத மகாராஜா இப்பெருமகளூர் சிவத்தலத்தில் பெரும் சோம யாகத்தை இயற்றினார். சேதுக்கரை செல்லுகையில் இராமன் இத்தலத்தை பூஜித்துள்ளார்.

குந்தளாம்பிகை உடனுறை சோமநாதர், இவ்வூரின் நடுவில் கோயில் கொண்டு அருளுகிறார். தாமரை விளங்கும் குளிர்ந்த பொய்கை அருகே திகழ, சோமநாத சுவாமியின் திருக்கோயில் சிறப்பாக விளங்குகிறது. கிழக்கு நோக்கிய திருவாயில், திருமதில் திருச்சுற்று, பரிவாராலயங்கள், இடப்பக்கத்தில் நந்தி மண்டபம், பலிபீடம் ஆகியவை அழகு செய்ய, சிதிலமடைந்த நிலையில் மூலவர் விமானம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், அம்மன் சன்னதி ஆகியவற்றுடன் திருக்கோயில் விளங்குகின்றது. மகாமண்டபத் தூண்களில் அழகிய கலை வேலைப்பாடும், புராணக்கதைகளை விளக்கும் சிற்பக்காட்சிகளும் விளங்குகின்றன. விநாயகப்பெருமான் அருள் காட்சி நல்க, குந்தளாம்பிகை அம்மன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றாள். சிவனது மூலஸ்தானத்தில் சதுர வடிவ பீடத்தில் சுயம்பு லிங்கமாக பாணம் விளங்க, சோமநாதரின் மூலவர் காட்சி தருகின்றார்.

ஆவுடையார் என்னும் கருங்கல்லால் அமைந்த சதுர பீடத்தில், விடங்க மூர்த்தியாக சோமநாதர் பாண வடிவத்தில் காட்சி தருகிறார். பொதுவாக கல்லால் அமைக்கப்பெறும், இலிங்கத் திருவுருவங்களின் பாணம், வட்ட வடிவில் தான் இருக்கும். பல்லவர் கால தாராலிங்கங்கள் மட்டும் பட்டை பட்டையான வடிவில் பாணம் காணப்பெறும், சகஸ்ரலிங்கங்களில் ஆயிரம் சிறு இலிங்க வடிவங்கள் ஒரே பாணத்தில் செதுக்கப்பட்டிருக்கும். ஆனால் இங்கு விடங்க வடிவமாகும். விடங்கம் என்பது, சிற்பியால், உளி கொண்டு செதுக்கப்படாத திருவடிவமாகும். திருவாரூர் கோயிலில் புற்றே இலிங்கமாக மாறி விட்டதால், விடங்க மூர்த்தியாக காணப்படுகிறார். இவரை வன்மீகர் என்றும், புற்றிடங்கொண்டார் என்றும் அழைப்பார்கள். திருநல்லூரில் உலோகப் படிவுப்பாறையே இலிங்க பாணமாக விளங்குகிறது.


திருவையாற்றில் பிருத்வி எனும் மண்ணே இலிங்க பாணமாக, பாறையாக மாறி காட்சி தருகின்றது. சில இடங்களில் மட்டுமே, மிக அபூர்வமாக கல்லாக மாறிய மரத்தின் அல்லது செடிகளின் பகுதிகளே இலிங்க பாணமாக விளங்குகின்றன. புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடிக்கு அருகில் உள்ள, மஞ்சக்குடி சிவாலயத்தில் லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு மரமாகத்திகழ்ந்த ஒரு பகுதி கல்லாக மாறி, அதுவே அங்கு சிவலிங்க பாணமாக காட்சி தருகின்றது.

இக்கோயில் அருகில் உள்ள லட்சுமி தீர்த்தமானது, சிவனது தலையிலிருந்து விழுந்த கங்கையிலிருந்து தோன்றியது ஆகும். இந்த இலட்சுமி தீர்த்த்ததிலிருந்து தோன்றிய தாமரைத் தண்டிலிருந்து உருவானதுதான் இத்தல இலிங்கமாகும். இவ்வுலக மக்களுக்காக, திரிபுவன சித்தரின் தவ வலிமையால், இங்கு சிவனும் அம்மனும் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கோயில் எழுப்பப்பட்டது. இந்த அருளாட்சி புரியும் சோமநாதரின் லிங்கம், கல்லால் அமையப் பெறவில்லை. தாமரைத் தண்டினால் ஆன சிவலிங்கம் இது. மிகவும் விசேஷமான தாமரைத்தண்டினால் ஆன இந்த சிவலிங்கத்தைத் தரிசித்தால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்

இக்கோயிலில் விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர், நவக்கிரகம், பைரவர், சுப்பிரமணியன் ஆகியோருக்கு தனி சன்னதிகள் உள்ளன.

சுயம்பு மூர்த்தியான இத்தல லிங்கம் வெள்ளை நிற தாமரைத்தண்டினால், சதுர வடிவ பீடத்தில் அமைந்துள்ளது. மாதம் தோறும் வரும் மூன்றாம்பிறை நாளில் இங்கு வந்து சிவனுக்கு அபிஷேகம் செய்து வேண்டிக்கொண்டால், வேண்டியது நிறைவேறும் என்பது நம்பிக்கை.

திருவிழா:

ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை சோமவாரம், மாசி சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, மாத பிரதோஷம், மற்றும் மாதந்தோறும் சந்திர தரிசனம் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது

கோரிக்கைகள்:

இத்தலத்தில் பெண் குழந்தை இல்லாதோர் மற்றும் துன்பங்களை அனுபவிக்கும் பெண்கள் வேண்டிக்கொண்டு வழிபட்டால் குறைகள் நீங்கும் என கூறப்படுகிறது. திருமணத்தில் தடை உள்ள பெண்கள் இங்கு வழிபாடு செய்தால் விரைவில் திருமணம் நடைபெறும். பெண்களுக்கு சுகப்பிரசவம் நடைபெறவும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்படுகிறது. இதனால் பெண் மருத்துவர்கள் பலர் இங்கு வழிபாடு செய்ய வருகிறார்கள்

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *