சொக்கநாதர் திருக்கோயில், திருமங்கலம்

அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில், திருமங்கலம், மதுரை மாவட்டம்.

+91- 452 – 234 2782.

காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சொக்கநாதர்
அம்மன் மீனாட்சி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் ஆகாயகங்கை
ஆகமம் காரணாகமம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருமாங்கல்யபுரம்
ஊர் திருமங்கலம்
மாவட்டம் மதுரை
மாநிலம் தமிழ்நாடு

மீனாட்சியைத் திருமணம் செய்ய, கயிலையில் இருந்த சிவன் மதுரைக்கு வந்தார். அவர்களின் திருமணம் மதுரையில் நடந்தது. திருமணத்திற்கு முன்பு, தேவர்கள் மதுரை அருகிலுள்ள ஒரு பகுதிக்கு வந்தனர். பொன்னை உருக்கி மாங்கல்யம் செய்தனர். மாங்கல்யம் செய்வதற்கு முன்பு, சிவனை வழிபட, தேவர்கள் விரும்பினர். அவர்களின் விருப்பத்தை உணர்ந்த சிவன், இவ்விடத்தில் தனது திருமணத்திற்கு முன்பே பார்வதி சமேதராக எழுந்தருளி, காட்சி தந்தார். எனவே இங்கும் இறைவனை சுந்தரேஸ்வரர் என்றும், சக்தியை மீனாட்சி என்றும் அழைத்து, அந்த இடத்திலும் தங்க வேண்டும் என தேவர்கள் கேட்டுக் கொண்டனர். அங்கு திருமாங்கல்யம் செய்யப்பட்டதால், அப்பகுதியை தேவர்கள் திருமாங்கல்யபுரம்என அழைத்தனர். காலப்போக்கில் திருமங்கலம்எனப் பெயர் மாறியது. பிற்காலத்தில், மன்னர்கள் இங்கு கோயில் கட்டினர்.

இத்தலத்தில், யோகசனீஸ்வரர் தனிச்சன்னதியில் தெற்குநோக்கியபடி அருளுகிறார். இவரை, சனி தோஷம் உள்ளவர்கள் சனிக்கிழமைகளில் எள்விளக்கு போட்டு, காக்கைக்கு அன்னமிட்டு மனமுருக வேண்டிக்கொண்டால், துன்பங்கள் நீங்கி நல்வாழ்வு கிடைக்கும்.

இங்கு வில்வமும், வேம்பும் இணைந்து அர்த்தநாரீஸ்வரர் வடிவில் இருக்கிறது. இதனடியில் வில்வவிநாயகர் உள்ளார். சுவாமியுடன் அம்பாளாக, கருதப்படும் விருட்சங்களின் மடியில் இவர் அமர்ந்திருப்பதால் இவரிடம் வேண்டிக்கொள்ளும் அனைத்து செயல்களும் நிறைவேறும். இவருக்கு அருகம்புல் மாலையிட்டு, கொழுக்கட்டை நைவேத்யம் செய்து வணங்கினால் கல்வி, கேள்வி, ஞானம், திருமணம், குழந்தை பாக்கியம், குடும்ப நலம், உடல் பலம் உட்பட சகல பலன்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சுவாமி கிழக்கு நோக்கியிருக்க, அம்பாள் தனிச்சன்னதியில் தெற்கு நோக்கியபடி உள்ளாள். பிரகாரத்தில் வில்வவிநாயகர், உஷா, சாயாதேவியுடன் சூரியன், நாகர், மேற்கு நோக்கியபடி ஆஞ்சநேயர், மங்கள தெட்சிணாமூர்த்தி, மயில் மீது அமர்ந்தபடி வள்ளி, தெய்வானையுடன் முருகன், நவக்கிரகங்கள், காசிவிஸ்வநாதர், அஷ்டபுஜதுர்க்கை ஆகியோர் உள்ளனர்.

திருவிழா:

சித்திரையில் திருக்கல்யாணம், மாசிமகம், மகாசிவராத்திரி.

கோரிக்கைகள்:

திருமண தோஷத்தால் பாதிக்கப்பட்டு, நீண்ட நாட்களாகத் திருமணம் ஆகாமல் இருப்பவர்கள் இங்குள்ள மீனாட்சி, சொக்கருக்கு புத்தாடை சாத்தி, திருமுழுக்காட்டு செய்து வேண்டிக்கொண்டால் விரைவில் திருமணம் நடக்கும்; திருமணத்துக்கு முன்னதாக இங்கு வந்து தாலிக்கொடியை வைத்து பூஜை செய்திட அவர்களின் இல்வாழ்வு சிறக்கும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *