சிகாநாதர் திருக்கோயில், குடுமியான்மலை

அருள்மிகு சிகாநாதர் திருக்கோயில், குடுமியான்மலை, புதுக்கோட்டை மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சிகாநாதர்
அம்மன் அகிலாண்டேஸ்வரி
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருநலக்குன்றம்
ஊர் குடுமியான்மலை
மாவட்டம் புதுக்கோட்டை
மாநிலம் தமிழ்நாடு

உலகெங்கும் இலிங்கவடிவில் அருள்பாலிக்கும் சிவபெருமான் குடுமியான்மலையிலும் எழுந்தருளினார். “குடுமியான்என்றால் உயர்ந்தவன்என்றும், “குடுமிஎன்றால் மலையுச்சிஎன்றும் பொருள்படும். உயர்ந்தமலையை ஒட்டி இவர் கோயில் கொண்டதால் இவ்வாறு அழைக்கப்பட்டிருக்கலாம்.


இக்கோயிலில் பணிபுரிந்த அர்ச்சகர் ஒருவருக்கு காதலி ஒருத்தி இருந்தாள். இவள் தினமும் சிவனை வழிபட வருவாள். தன் காதலனாகிய அர்ச்சகருடன் சிறிதுநேரம் பேசிவிட்டு செல்வாள். ஒருநாள் காதல் மோகத்தில் இருவரும் தங்களை மறந்து பேசிக் கொண்டிருக்க, அப்பகுதி அரசர் முன்னறிவிப்பின்றி கோயிலுக்கு வந்துவிட்டார். அர்ச்சகர் அதுவரை இறைவனுக்கு பூ கூட போடவில்லை. பதட்டமடைந்த அவர், இனி பூத்தொடுத்து இறைவனுக்கு சூட்டுவதற்கு கால அவகாசமில்லை என்பதை உணர்ந்து, தன் காதலியின் தலையிலுள்ள பூவை எடுத்து இலிங்கத்திற்கு அவசரமாக சூட்டிவிட்டார். அரசர் வந்தார். பூஜை முடிந்து அப்பூவை பிரசாதமாக அரசரிடம் அர்ச்சகர் கொடுத்தார். அதில் தலைமுடி இருந்தது. கோபமடைந்த அரசர் அதுபற்றி அர்ச்சகரிடம் விசாரிக்க, என்ன செய்வதென அறியாத அர்ச்சகர் கணநேரத்திற்குள், “ஆண்டவா. உனக்கு இதுகாலம் வரை தவறாமல் சேவை செய்தேன். இன்று காதல் மோகத்தில் சிக்கி, அறியாமல் தவறிழைத்து விட்டேன். என்னைக் காப்பாற்றுஎன மனதிற்குள் வேண்டினார்.

இறைவன் மீது பாரத்தை போட்டுவிட்டு, “அரசே. இலிங்கத்தின் தலையில் குடுமி இருக்கிறது. அதிலுள்ள முடி ஒட்டிக் கொண்டிருக்கிறதுஎன்றார் அர்ச்சகர். இதை நம்பாத அரசர், இலிங்கத்தின் அருகே சென்று பார்த்தார். கருணைக்கடலான சிவனின் தலையில் ஒரு குடுமி இருந்தது. அரசர் ஆச்சரியப்பட்டார். அர்ச்சகரும், அவரது காதலியும் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். விரைவில் அவர்களுக்கு திருமணமும் நடந்தேறியது.

சிவாலயமாக இருந்தாலும் பெருமாளின் தசாவதார சிலைகள் தூண்களில் வடிக்கப்பட்டுள்ளன. அதிலும் குதிரையில் அமர்ந்துள்ள வீரனின் சிலை கல்கி அவதாரம் என்றே கருதப்படுகிறது. ஒரு குதிரையில் இளைஞனும், மற்றொரு குதிரையில் முதியவர் ஒருவரும் உள்ளனர். கல்கி அவதாரத்தின்போது இளைஞர், முதியவர் என்ற பாகுபாடின்றி, இவ்வுலகத்தில் உள்ளோர் அழிக்கப்படுவார்கள் என்ற நியதியின் அடிப்படையில் இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

நவக்கிரகங்களின் அடிப்படையில் இதை சனித்தலமாகக் கொள்ளலாம். பத்தாம் நூற்றாண்டில் இத்தலம் திருநலக்குன்றம்என்று அழைக்கப் பட்டது. சனீஸ்வரனால் சோதிக்கப்பட்ட நளன் இத்தலத்தில் வந்து சிகாநாதரை வணங்கி அருள்பெற்றான் என்று கர்ண பரம்பரைக் கதை கூறுகிறது. எனவே சனி பார்வையால் துன்பப்படுபவர்கள் இத்தல இறைவனை வணங்கி அருள்பெறலாம்.

சங்கீத வித்வான்கள் அவசியம் செல்ல வேண்டிய கோயில் இது. இவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விதிமுறைகள் கொண்ட கல்வெட்டைக் காணலாம். கிரந்தத்தில் இங்கு எழுதப்பட்டுள்ளது. உருத்ராச்சாரியார் என்பவரின் சீடரான பரமமகேஸ்வரன் என்ற மன்னன் இந்த ராகங்களை பாடியதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், தற்போது இதன் அருகே நெருங்கமுடியாத அளவுக்கு தேனீக்கள் கூடுகட்டி வாழ்கின்றன.

பொதுவாக சிவாலயங்களில் துவாரபாலகர்கள் கண்டிப்பான முகத்தோற்றத்துடன் கிழக்கு நோக்கி வாயில் காப்பார்கள். ஆனால், இங்கோ தெற்கும், வடக்குமாக நின்ற நிலையில் இருதுவாரபாலகர்கள் உள்ளனர். இவர்களில் ஒருவர் புன்னகை பூத்தநிலையிலும், மற்றொருவர் சற்றே கடுமையான முகத்தோடும் செதுக்கப்பட்டுள்ளனர். இது ஒரு அதிசயமாகும்.

இங்கே அம்பிகை அகிலாண்டேஸ்வரி என அழைக்கப்படுகிறாள். மற்றொரு அம்பிகை சன்னதியும் இங்குள்ளது. உமையாள்நாச்சி என்ற தேவதாசி, அம்மன் சன்னதி ஒன்றை கட்டினாள். அவளுக்கு மலையமங்கை என பெயர் சூட்டினாள். காலப்போக்கில் அது சவுந்தரநாயகி சன்னதியாக மாறியிருக்கக்கூடுமென தெரிகிறது.

இங்குள்ள இறைவனை சிகாநாதர்என்கிறார்கள். சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டான இக்கோயிலில் நுழைந்ததில் இருந்து கருவறை செல்லும் வரை எங்கும் சிலைமயம்தான். அனைத்து சிலைகளும் கலை நுட்பம் உடையவை என்பதால் மத்திய தொல்பொருள்துறை இக்கோயிலை தன்வசப்படுத்தியுள்ளது.

கண்ணில் பீதியை ஏற்படுத்தும் அதிபயங்கர நரசிம்மர், அதே கண்களுக்கு குளிர்ச்சியைத் தரும் இரதி, மன்மதன் சிலைகள், பதஞ்சலி முனிவர், உலகளந்த விஷ்ணு, அகோர வீரபத்திரர், பத்துதலை ராவணன், மோகினி அவதார விஷ்ணு, வினை தீர்க்கும் விநாயகர் என எண்ணிலங்கா எழில் மிகு சிற்பங்களை பார்த்து ரசிக்கலாம்.

நாயன்மார்கள் அறுபத்துமூவரின் சிலைகளை பொதுவாக, பிரகாரங்களிலேயே காணமுடியும். ஆனால், இக்கோயிலில் மலை உச்சியில் சிற்பமாக வடித்துள்ளனர். நாயன்மார்கள் சிலை முடியும் இடத்தில் விநாயகர் சிலை வைப்பது மரபு. ஆனால், இங்கு ரிஷபத்தில் அமர்ந்த சிவபார்வதி நடுவில் இருக்க, நாயன்மார்கள் இருபுறமும் இருப்பது சிறப்பான அம்சம். இத்தகைய அமைப்பை தமிழகத்தில் வேறெங்கும் காணமுடியாது. கோயில் பிரகாரம் சுற்றி வரும்போது, இந்தச் சிற்பங்களை மலையுச்சியில் ஏறாமல், கீழிருந்தபடியே தெளிவாகப் பார்த்து தரிசிக்க முடிகிறது.

திருவிழா: மகாசிவராத்திரி

பிரார்த்தனை:

காதல் திருமணம் செய்ய விரும்புவோர், தங்களுக்கு ஏற்படும் தடைகள் விலக இத்தலத்திற்கு வந்து வழிபடலாம்.

நேர்த்திக்கடன்:

சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

வழிகாட்டி :

புதுக்கோட்டையில் இருந்து விராலிமலை செல்லும் ரோட்டில் 16 கி.மீ., தொலைவில் இவ்வூர் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *