புத்திரகாமேட்டீஸ்வரர் திருக்கோயில், ஆரணி-புதுக்காமூர்

அருள்மிகு புத்திரகாமேட்டீஸ்வரர் திருக்கோயில், ஆரணி(புதுக்காமூர்), திருவண்ணாமலை மாவட்டம்.

+91 97891 56179, 96294 73883

காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் புத்திரகாமேட்டீஸ்வரர்
உற்சவர் சோமாஸ்கந்தர்
அம்மன் பெரிய நாயகி
தல விருட்சம் பவளமல்லி
தீர்த்தம் கமண்டல நதி
ஆகமம் சிவாகமம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் தர்மாரண்யஷேத்ரம்
ஊர் ஆரணி
மாவட்டம் திருவண்ணாமலை
மாநிலம் தமிழ்நாடு

அயோத்தியை ஆண்ட தசரத சக்கரவர்த்திக்கு, நீண்ட நாட்களாகக் குழந்தை பாக்கியம் இல்லை. தனக்கு பின் நாட்டை ஆள இளவரசர் இல்லாததால் தசரதர் மிகவும் வருந்தினர். குழந்தைப்பேறு உண்டாவதற்கு வழி சொல்லும்படி, தன் குலகுரு வசிஷ்டரிடம் ஆலோசனை கேட்டார். அவர், இத்தலத்தைச் சுட்டிக்காட்டி சிவனை வழிபட அந்த பாக்கியம் கிடைக்குமென்றார். அதன்படி தசரதர், இவ்விடத்தில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து, ரிஷ்யசிருங்க மகரிஷியின் தலைமையில் புத்திரகாமேஷ்டி யாகம் நடத்தி சிவனை வழிபட்டார். இதன்பின், அவர் இராமர், இலட்சுமணன், பரதன், சத்ருக்கனன் என நான்கு பிள்ளைகளைப் பெற்றார். இங்கு சிவனுக்கு கோயில் எழுப்பிய தசரதர், அவருக்கு யாகத்தின் பெயரால் புத்திரகாமேட்டீஸ்வரர்என்றே பெயர் சூட்டினார்.

ஒருசமயம் ஜமதக்னி மகரிஷியின் கமண்டலத்தில் இருந்து கொட்டிய நீர் பெருகி நதியாகப் பெருக்கெடுத்த தீர்த்தம், கமண்டல நதி எனப்பட்டது. இதன் கரையில் அமைந்த கோயில் இது. கோயில் எதிரே மட்டும் இந்த நதி வடக்கில் இருந்து கிழக்காக திரும்பி சுழித்துக் கொண்டு ஓடுகிறது. மழைக்காலங்களில் இந்நதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். கருவறையில் சிவன், ஒன்பது தலை நாகத்தின் கீழ் காட்சியளிக்கிறார். பவுர்ணமிதோறும் இவருக்கு விசேஷ பூஜை நடக்கும். அன்று, சுவாமி புறப்பாடும் உண்டு. அம்பாள் பெரியநாயகிக்கு, தனிக் கொடிமரத்துடன் கூடிய சன்னதி உள்ளது. கோயிலுக்கு நேரே வெளியில் தசரதருக்கும் சன்னதி உள்ளது. இவர் சக்கரவர்த்தியாக இல்லாமல், யாகம் நடத்தியபோது இருந்த அமைப்பில் முனிவர் போல காட்சியளிக்கிறார். கைகளில் உருத்ராட்ச மாலை, கமண்டலம் வைத்திருக்கிறார். விழா நாட்களில் இவருக்கும் பூஜை உண்டு.

குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான பிரதான வழிபாட்டுத் தலம் இது. திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தைப்பேறு இல்லாதவர்கள், புத்திரகாமேட்டீஸ்வரரை வழிபட, விரைவில் அந்த பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. குழந்தை வேண்டி புத்திரகாமேட்டீஸ்வரரை வணங்குபவர்கள், ஆறு திங்கள் கிழமைகள் விரதமிருக்க வேண்டும். முதல் திங்களன்று விரதம் துவங்கி, மதியம் மட்டும் ஒரு குழந்தைக்கு அன்னம் கொடுத்து, பின் சாப்பிட வேண்டும். இரண்டாம் வாரத்தில் 2 குழந்தைகள், மூன்றாம் வாரத்தில் 3 என்ற அடிப்படையில், ஆறாவது திங்களன்று ஆறு குழந்தைக்கு அன்னதானம் பரிமாறி விரதமிருக்க வேண்டும். ஏழாவது திங்கள் கிழமையன்று இங்கு புத்திரகாமேட்டீஸ்வரருக்கு செவ்வலரிப்பூ மற்றும் கோயிலில் உள்ள பவள மல்லி மாலை அணிவித்து, மிளகு சேர்ந்த வெண்பொங்கல் நைவேத்யம் செய்து வணங்க வேண்டும். ஆனி பவுர்ணமியன்று சிவனுக்கு 11 சிவாச்சாரியார்கள், “புத்திரகாமேஷ்டி யாகம்நடத்துவர். இதிலும் கலந்து கொள்ளலாம். ஜாதக ரீதியாக 5ம் இடத்தில் கேது இருந்தால் உண்டாகும் புத்திர தோஷம், நாக தோஷம் நீங்க கோயில் வளாகத்திலுள்ள வேம்பு, ஆலமரத்தடியில் தங்கள் நட்சத்திர நாளில் நாகப் பிரதிஷ்டை செய்தும், புத்திர காமேஷ்டி யாகம் நடத்தியும் வேண்டிக்கொள்கிறார்கள். இவ்விரு பூஜைகளுக்கும் கட்டணம் உண்டு.

பிரகாரத்தில் அறுபத்துமூவர், சொர்ணவிநாயகர், அம்பிகையருடன் பஞ்சலிங்கம், அஷ்டோத்ர இலிங்கம், காளியுடன் வீரபத்திரர், வள்ளி தெய்வானையுடன் சண்முகர், பாமா உருக்மிணியுடன் கோபாலகிருஷ்ணர், காலபைரவர், சனீஸ்வரர், சூரியன் ஆகியோர் உள்ளனர்.

எந்த ஒரு செயலையும் விநாயகரிடம் துவங்கி, ஆஞ்சநேயரிடம் முடிக்க வேண்டும் என்பர். இங்கு நதிக்கரையில் வடக்கு நோக்கி விநாயகரும், அவருக்கு எதிரே ஆஞ்சநேயரும் உள்ளனர். பக்தர்கள் தாம் ஏதேனும் செயலைத் துவங்கும்போது, இந்த விநாயகரை வணங்கிச் செல்கின்றனர். அச்செயல் சிறப்பாக முடிந்ததும் ஆஞ்சநேயரை வழிபட்டுச் செல்கின்றனர். ஆஞ்சநேயர் சிலையில் சங்கு, சக்கரம் உள்ளது மற்றொரு சிறப்பு. இவ்வாறு, எதிரெதிரே விநாயகர், ஆஞ்சநேயரைக் காண்பது அரிது.

திருவிழா:

ஆடி சுவாதியில் லட்ச தீபம், நவராத்திரி, சிவராத்திரி.

கோரிக்கைகள்:

திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தைப்பேறு இல்லாதவர்கள், புத்திரகாமேட்டீஸ்வரரை வழிபட, விரைவில் அந்த பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *