புராதன வனேஸ்வரர் உடனுறை பெரியநாயகி அம்பாள் திருக்கோயில், பட்டுக்கோட்டை

அருள்மிகு புராதன வனேஸ்வரர் உடனுறை பெரியநாயகி அம்பாள் திருக்கோயில், பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம்.

காலை 6 மணி முதல்11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் புராதன வனேஸ்வரர்
அம்மன் பெரியநாயகி
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் பட்டுக்கோட்டை
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

வனவாசமும் வாழ்க்கையின் அவசியமே என உலகிற்கு உணர்த்திட இறைவன் தன் தேவியுடன், வனப்பிரதேசமாக விளங்கிய இப்புராதன வனத்தில், தேவர்களும், சித்தர்களும், துறவிகளும் சூழ வந்தமர்ந்தார். இத்தலத்தில் சிவபெருமான் நீண்ட கால நிஷ்டையில் அமர்ந்தார். இதனால் உலகில் அசுரர் பலம் மிகுந்தது. தேவர்களும், ரிஷிகளும் அசுரர்களின் செயல்களால் துன்பம் அடைந்தனர். எல்லோரும் ஒரு சேர தேவியிடம் முறையிட்டனர். தேவியரோ மன்மதனை அழைத்து சிவனின் தவத்தைக் கலைக்கலாம் என்றாள். உலக நன்மைக்காக மன்மதனும் மலர்க்கணைகளைத் தொடுத்து எய்தான். அவன் நின்று மலர்களை எய்த இடம் பூவனம்என்று இன்றும் அழைக்கப்படுகிறது. மலர்க்கணையால் நிஷ்டை கலைந்த முக்கண்ணன், மலர்க்கணை வந்த திசை நோக்க, மன்மதன் வெப்பசக்தியால் எரிந்தான். இந்த இடம் மதன்பட்டவூர்என்று ஆயிற்று. நிஷ்டை கலைய நாங்களே காரணமென்றும், மன்மதனை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டுமென தேவர்களும், ரிஷிகளும் கேட்டுக் கொண்டனர். மன்மதன் பால் தெளித்து உயிர்ப்பிக்கப்பட்டான். இந்த இடம் பாலத்தளிஎன்று விளங்குகிறது. இத்தலத்தில் காமனை எரித்ததற்கு சான்றாக காமன் கொட்டல்என்ற இடத்தில் காமன் பண்டிகை விழா நடக்கிறது.

இக்கோயிலில் அம்பாள் சன்னதியில் வலப்புறம் பழம் பெருமை வாய்ந்த விநாயகர் உள்ளார். இவரது செவியில் உள்ள துவாரங்களில், நமது வேண்டுதல்களை நினைத்து வைக்கப்படும் பூக்களை, இவ்விநாயகர் உள்ளே இழுத்துக் கொண்டால் நமது வேண்டுதல் நிறைவேறும், நினைத்த காரியம் கைகூடும். பக்தர்களின் நம்பிக்கையாக இன்றும் பூவைக்கும் பழக்கம் இருக்கிறது. இந்த விநாயகரால் இத்தலத்தின் பெயரே பூவிழுங்கி விநாயகர் கோயில்என்றே மருவி வருகிறது. இத்தலத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருச்சிற்றம்பலத்தில் வயல்வெளியில் தனி இடத்தில் எமன் வீற்றிருக்கிறார்.

திருவிழா: மகா சிவராத்திரி

கோரிக்கைகள்:

பெரிய நாயகி அம்மனை வழிபட்டால் குழந்தை வரம் கிட்டும். நோய்கள் தீரும். காளையர்களுக்கும், கன்னியர்களுக்கும் நல்ல மணமாலையும், வாழ்வும் அமையும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *