பெரியாவுடையார் கோயில், மானூர்

அருள்மிகு பெரியாவுடையார் கோயில், மானூர், திண்டுக்கல் மாவட்டம்.

+91- 4545 – 242 551

காலை 8 மணி முதல் மாலை 6 மணி மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பெரியாவுடையார், (பிரகதீஸ்வரர்)
உற்சவர் நடராஜர், சிவகாமி, மாணிக்கவாசகர், பிரதோச தாண்டவர்
தல விருட்சம் கடம்பமரம்
தீர்த்தம் சண்முகநதி
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் மானூர்
மாவட்டம் திண்டுக்கல்
மாநிலம் தமிழ்நாடு

பழனி நகரில் எழுந்தருளிய பெரியநாயகிக்கு நாயக்கர் காலத்தில் கோயில் கட்டப்பட்டது. ஆனால் சிவபெருமானோ தன்னை இந்த உலகிற்கு எடுத்துக்காட்ட திருவிளையாடல் புரிந்தார். விராட மகாராஜாவுக்கு வேட்டையாடுவது என்றால் மிகவும் விருப்பம். ஒருநாள் சிவன் மான் உருவம் கொண்டு மன்னன் முன்பு தோன்றினார். மானின் அழகில் மயங்கிய மன்னன் அதைப்பிடிக்கத் துரத்தினான். மானும் மன்னின் பிடியில் சிக்காமல் இலிங்க வடிவில் வீற்றிருக்கும் புதர் அருகில் வந்து மறைந்து கொண்டது.

மானைக் காணாததால் கோபம் கொண்ட மன்னன் அம்பெய்தான். புதரில் உள்ளே ஒரு புற்று இருந்தது. அங்கு ஒரு அற்புதம் நிகழ்ந்தது. அம்பு எய்ததும், புற்றிலிருந்து ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. பயந்து போன மன்னன் புதரை விலகி பார்த்த போது, அம்பு புதருக்குள் இருந்த புற்றுக்குள் இருந்த இலிங்கத்தின் மீது பட்டு ரத்தம் வடிந்தது. இறைவனிடம், அறியாமல் செய்த தவறுக்கு மன்னிக்கும் படி வேண்டினான் மன்னன். இறைவனும் அசரீரியாக தம்மை வெளிப்படுத்தவே இப்படி திருவிளையாடல் புரிந்தோம் என்று கூறினார். இறைவனின் கட்டளைப்படியே மன்னனும் அந்த இடத்தில் கருவறை அமைத்து பூஜை செய்து வந்தான். மன்னன், மானைத்துரத்தி வந்ததால் இந்த ஊர் மானூர் ஆனது. அம்பு பட்ட தழும்பை, இலிங்கத்தின் மேல் இப்போதும் காணலாம்.

கைலாயத்தில் ஞானப்பழம் முருகனுக்கு கிடைக்காமல் விநாயகருக்கு கிடைத்து விடுகிறது. இதனால் கோபம் கொண்ட முருகன் பழனி மலைக்கு வந்து விடுகிறார். முருகனைத் தேடிக்கொண்டு சிவனும் சக்தியும் பூலோகத்தில் பழனி மலைக்கு அருகில் வந்து இறங்குகிறார்கள். அப்படி இறங்கிய இடத்தின் இயற்கை எழிலை கண்ட சிவன் அங்கேயே வீற்றிருந்து அருள்பாலிக்க நினைத்துவிட்டார். ஆனால் உமையவளோ தன் மகன் முருகனைக் காண பழனிக்கே செல்ல அனுமதிக்கும்படி சிவனிடம் வேண்ட சிவனும் சம்மதிக்கிறார். பிரிய மனமில்லாமல் நாயகி விடை பெற்றதால் அன்னை பிரியா நாயகிஎன்றும், விடை கொடுக்க மனமில்லாமல் சிவன் விடை கொடுத்ததால் பிரியாவிடையார்என்றும் அழைக்கப்பட்டார்கள். இதுவே காலப்போக்கில் மருவி பெரியாவுடையார் பெரியநாயகிஆனது. பார்வதி முருகனைத் தேடி சென்று விட்டதால் இங்கு அம்மனுக்கென தனி சன்னதி எதுவும் கிடையாது. இருந்தாலும் சக்தி வேறு சிவம் வேறு என இல்லாமல் இரண்டும் ஒன்றானதால் இங்குள்ள சிவனை வழிபட்டாலே சிவசக்தியை வழிபட்ட பலன் கிடைக்கும்.

இக்கோயிலின் சிறப்பம்சமாக கோயில் மேற்கு பார்த்து அமைந்திருப்பதும், சிவனின் பீடம் சதுரமாக அமைந்திருப்பதும் ஆகும். மூர்த்தியும், தலமும் இங்கு சிறப்பு. அதே போல வடக்கு நோக்கி ஓடும் சண்முகாநதி தீர்த்தம் சிறப்பு. இந்நதியில் குளித்து சிவனை வழிபட்டால் ஏழேழு ஜென்ப பாவமும் விலகும் என புராணம் கூறுகிறது.

பழனி முருகனை தரிசிக்க வருபவர்கள், முருகனைத் தரிசிக்கும் முன் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, முருகனை தேடி வந்த தந்தையான பெரியாவுடையாரைத் தரிசனம் செய்த பின் பழனி முருகனைத் தரிசனம் செய்தால்தான் முழுப்பலன் கிடைக்கும் எனக் கூறுகிறார்கள்.

பொதுவாக, பிரதோஷ மூர்த்தி அம்பாளுடன் நான்கு கைகளுடன் நின்ற நிலையில் இருக்கும். ஆனால் இங்குள்ள பிரதோஷ மூர்த்தி தாண்டவ நிலையில் ஒருகாலைத்தூக்கி கையில் டமருகத்துடன் காணப்படுகிறார்.

இங்குள்ள நடராஜர், உடல் முழுக்க கருப்பு வண்ணமும், முகம் மட்டும் வெள்ளை வண்ணமும் கூடிய நிலையில் கல்லால் ஆன நடராஜர். அருகில் சிவகாமி அம்மனும் கிடையாது.

இங்குள்ள இறைவனைச்சுற்றிலும் கோஷ்ட தேவதைகளாக பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் அமைந்திருப்பதும் கோயிலின் சிறப்பம்சமாகும். மேலும் தட்சிணாமூர்த்தி மேதா தட்சிணாமூர்த்தியாக இங்கு வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார்.

திருவிழா:

ஆடி 18ம் நாளில் பெரிய நாயகி அம்மன் இங்கு எழுந்தருளி இருப்பதாக ஐதீகம். இந்த நாளில் பெண்கள் தாலிச்சரடு மாற்றுவார்கள். ஆடி அமாவாசை, மகா சிவராத்திரி, மாத பிரதோஷம், தமிழ்வருடப்பிறப்பு, ஆனி மாத ஜேஷ்டாபிஷேகம், ஐப்பசி பவுர்ணமி அன்னபிஷேகம், கார்த்திகை சம்வத்சராபிஷேகம், சங்காபிஷேகம், தனுர் மாத பூஜை, தை அமாவாசை ஆகியவை இங்கு முக்கிய திருவிழாக்கள்.

கோரிக்கைகள்:

இத்தல இறைவனை வழிபட்டால் தடைபட்ட திருமணம் நடக்கும்; குழந்தைப்பேறு கிட்டும்; தகுதியான வேலை கிட்டும்; பித்ரு சாபம் நீங்கும்; எதிரிகள் தொல்லை நீங்கும்; தன்னம்பிக்கையும் மனத்தெளிவும் கிடைக்கிறது; என்பது நம்பிக்கை. ஆயுள் ஆரோக்கியத்திற்காக ஆயுள்ஹோமம், மிருத்தியஞ்சய ஹோமம் இங்கு செய்யப்படுகிறது.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *