பரசுநாதசுவாமி திருக்கோயில், முழையூர்

அருள்மிகு பரசுநாதசுவாமி திருக்கோயில், முழையூர், தஞ்சாவூர் மாவட்டம்.

+91 4374 267 237

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பரசுநாதர்
அம்மன் ஞானாம்பிகை
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் முழையூர்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

தந்தையின் உத்தரவுப்படி தனது தாயை வெட்டிய பரசுராமர், பிரம்மகத்தி தோஷம் நீங்குவதற்காக சிவபூஜை செய்தார். அவர் முழையூர் திருத்தலத்திற்கு வந்ததார். ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, பூஜை செய்தார். அவருடைய தோஷம் நீங்கியது. இதன் காரணமாக சுவாமிக்கு பரசுநாதர்என்ற பெயர் ஏற்பட்டது. இந்த தலத்தில் அம்பாள் ஞானாம்பிகையுடன், பரசுநாதர் கோயில் கொண்டுள்ளார். இங்கே ஒரு காலத்தில், மகாமகம் போல மிகப்பெரிய அளவில் திரிதியை விழா நடந்திருக்கிறது. வட மாநில பக்தர்களும் வந்தார்கள். அப்போது தங்கக்காசுகளால் சுவாமிக்கு காப்பிடப்படும். பிறகு இது படிப்படியாக குறைந்து விட்டது. சமீப காலமாக இந்தத்தலம் மீண்டும் புகழ் பெற்று வருகிறது.

இந்தக் கோயில் கருவறை கோஷ்டத்தில் (சுற்றுச் சுவர்) இலிங்கோத்பவருக்கு பதிலாக அர்த்தநாரீஸ்வரர் காட்சி தருகிறார். இலிங்கோத்பவர் என்பது பிரம்மனும், விஷ்ணுவும் சிவனின் முடியையும் அடியையும் காணச் சென்ற கோலமாகும். இங்குள்ள பரசுநாத இலிங்கம் பீஜாட்க்ஷர இலிங்க வடிவைச் சார்ந்தது. “நீண்ட கூம்பு நெடுந்திடை லிங்கம்என்பது இதன் பொருள். வட்டவடிவில், எட்டுப் பட்டைகளுடன் இது காட்சி தருகிறது. மேற்கு பார்த்த திருத்தலம் இது. தேவார வைப்புத்தலங்களில் இதுவும் ஒன்று. பாடல் பெற்ற தலம் என்பது அப்பர், சம்பந்தர், சுந்தரரால் நேரடியாக பாடல் பெற்றதாகும். வைப்புத்தலம் என்றால், ஏதாவது ஒரு கோயிலைப் பற்றி பாடும்போது, இன்னொரு கோயிலின் சிறப்பையும் இணைத்து பாடுவதாகும். இத்தலத்தில் முருகப்பெருமான் வேலுக்கு பதிலாக சக்திக்குரிய சூலத்தை தாங்கியிருக்கிறார். அதையும் இடது கை நடுவிரலின் நுனியில் தாங்கியிருப்பது விசேஷம்.

இந்த ஊருக்கு முழையூர் என பெயர்வர காரணம் இருக்கிறது. அக்காலத்தில் முழை எனப்படும் வாத்தியத்தில் வேத இசை ஒலியை துல்லியமாக வாசிப்பார்கள். “அட்சய திரிதியை நாளன்று சிவலோகத்தில் பூதகணங்கள் இந்த வாத்தியத்தை வாசிப்பதுண்டு. இது ஒரு வகை மேள வாத்தியம். இதை வாசிக்கும்போது பத்தாயிரம் கஜ தூரம் உயரே குதித்து பூதகணங்கள் வாசிப்பார்கள்.” இது புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

இத்தலத்தில் திரிதியை திதி நாட்களில் விசேஷ பூஜை நடத்தப்படுகிறது. அட்சய திரிதியை மட்டுமின்றி எல்லா வளர்பிறை, தேய்பிறை திரிதியை திதிகளில் சுவாமிக்கு நெய் அன்னம் படைத்து வழிபடுகின்றனர். உணவு தொடர்பாக உடலில் ஏற்படும் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், செரிவின்மை போன்ற நோய்களுக்கு நிவாரணம் வேண்டி இந்த பூஜையை செய்கின்றனர். முடங்கிக் கிடக்கும் பணம், தரிசாக கிடக்கும் நிலம், தோட்டம், வீடு ஆகியவை விருத்தி பெறுவதற்காக அட்சய திரிதியை அன்று மாதுளை முத்துக்களால் காப்பிட்டு, பரசுநாதரை வணங்குகின்றனர். அட்சய திரிதியை அன்று விநாயகர், பரசுநாதர், ஞானாம்பிகை, சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் உலா வருவர். பிறரை நம்பி ஜாமீன் கொடுத்து ஏமாந்து பணக் கஷ்டத்தில் சிக்கியவர்களுக்காக இந்த கோயிலில் சிறப்புபூஜை செய்யப்படுகிறது. திரிதியை நாளன்று மல்லிகை பூக்களை தங்கள் கையாலேயே தொடுத்து, பக்தர்கள் இறைவனுக்கு அணிவிக்கிறார்கள்.

பிரகாரத்தில் நர்த்தன விநாயகர், உச்சிஷ்ட கணபதி, அப்பர், சம்பந்தர் ஆகியோர் உள்ளனர்.

திருவிழா:

அட்சய திரிதியை, மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை.

கோரிக்கைகள்:

திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் பெற, கல்வியில் சிறந்து விளங்க இறைவனைப் பிரார்த்திக்கலாம்.

நேர்த்திக்கடன்:

அட்சய திரிதியை நாளன்று மல்லிகை பூக்களை தங்கள் கையாலேயே தொடுத்து, பக்தர்கள் இறைவனுக்கு அணிவித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *