ஒத்தாண்டேஸ்வரர் திருக்கோயில், திருமழிசை

அருள்மிகு ஒத்தாண்டேஸ்வரர் திருக்கோயில், திருமழிசை, திருவள்ளூர் மாவட்டம்.

+91-9841557775

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஒத்தாண்டேஸ்வரர்
அம்மன் குளிர்வித்த நாயகி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் தெப்பம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் திருமழிசை
மாவட்டம் திருவள்ளூர்
மாநிலம் தமிழ்நாடு

கரிகால் பெருவளத்தான், இத்தலத்திற்கு அருகிலுள்ள மற்றொரு தலத்தில் சிவனை வழிபடுவதற்காக தனது யானையில் சென்றான். அப்போது யானையின் கால் ஒரு கொடியில் சிக்கிக்கொண்டது. கையால் அதனைக் களைய முயன்று முடியவில்லை. எனவே, தனது உடைவாளைக்கொண்டு அக்கொடிகளை வெட்டினான். அடியிலிருந்து ரத்தம் பீறிட்டது. அதிர்ச்சியடைந்த மன்னன், கொடிகளை விலக்கி பார்த்தபோது உள்ளே ஒரு இலிங்கம் இருந்தது. பதறிப் போன மன்னன், இலிங்கத்தை வெட்டிய அதே வாளைக்கொண்டு, சிவபாவம் செய்த தனது வலக்கையை வெட்டி வீசினான். அவனது பக்தியில் மெச்சிய சிவன், அம்பாளுடன் ரிஷபவாகனத்தில் காட்சி தந்து, இழந்த கையை மீண்டும் உடலுடன் பொருத்தினார். எனவே இவரை கைதந்தபிரான்என்று அழைக்கிறார்கள். மன்னனுக்கு ஆறுதல் மொழி சொல்லியும், சிவனுக்கு அவரது அடியார்களின் கதையைச்சொல்லியும் அவர்களின் மனதை அம்பிகை குளிர்வித்தாள். எனவே இவள் குளிர்வித்த நாயகிஎன்றழைக்கப்படுகிறாள்.

இங்குள்ள லிங்கம் தலையில் வெட்டுப்பட்ட தடத்துடன் உள்ளது. கருவறையில் இலிங்கத்திற்கு பின்புறம் அம்பாளுடன் அமர்ந்த கோலத்தில் சுவாமி காட்சி தருகிறார். கிழக்கு நோக்கியிருக்கும் இவ்விருவரையும் ஒரே நேரத்தில் தரிசனம் செய்தால் பாவங்கள் நீங்கி, முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஒத்தாண்டேஸ்வரரை வணங்கினால், மனோபலம் ஏற்படும் என்பதால் இவருக்கு மன அனுகூலேஸ்வரர்என்றொரு பெயரும் உள்ளது

இங்குள்ள விநாயகர் பிரசன்ன விநாயகர்.
குடும்பத்தில் பிரச்னை உள்ள தம்பதியர்கள் இங்கு ஒருவரை ஒருவர் பார்த்த நிலையில் உள்ள நடராஜர் அம்பாளை வணங்கினால், மனசஞ்சலம் நீங்கி ஒற்றுமை பிறக்கும், இல்வாழ்வு சிறக்கும் என்பது நம்பிக்கை. இத்தலத்து விமானம் கஜபிருஷ்ட அமைப்பில் உள்ளது. கோஷ்டத்தில் சுவாமிக்கு பின்புறம் மேற்கு நோக்கியபடி திருமால், பிரகாரத்தில் தனிச்சன்னதியில் சனீஸ்வரன், ரிஷபநாயகர் ஆகியோர் உள்ளனர். இங்குள்ள நடராஜர் அம்பாளைப் பார்த்த படியும், அம்பாள் அவரைப் பார்த்தபடியும் உள்ளனர்.

மன்னன் தனது கையை வெட்டியபோது அவனைக்காத்து, தர்மத்தை நிலைநாட்ட சிவன் வேகமாக வந்து மன்னனுக்கு காட்சி தந்தார். அப்போது, சிவனின் வாகனமான நந்தி அவருக்கு மிகவும் உறுதுணையாக இருந்ததாம். எனவே, இங்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் நடுவில் நந்தி இருக்கிறது. சுவாமிக்கு முன்புறம் அதிகாரநந்தி, பிரதோஷ நந்தி இருப்பதுடன் அவருக்கு பின்புறத்தில் கோஷ்டத்தையடுத்து கிழக்கு நோக்கியபடி தர்மநந்தியும் உள்ளது. சிவனின் அருளைப்பெறவும், தாங்கள் வேண்டும் செயல்கள் தடையின்றி நிறைவேறவும் இவரிடம் வேண்டிக்கொள்ளலாம்

திருவிழா:

பங்குனியில் பிரம்மோற்ஸவம், கார்த்திகையில் லட்சதீப திருவிழா, சனிப்பெயர்ச்சி

கோரிக்கைகள்

மன அமைதி பெறவும், செய்த பாவத்திற்கு மன்னிப்பு பெற இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *