நட்டாற்றீஸ்வரர் திருக்கோயில், காங்கயம்பாளையம்

அருள்மிகு நட்டாற்றீஸ்வரர் திருக்கோயில், காங்கயம்பாளையம், ஈரோடு மாவட்டம்.

+91- 424- 3201 675, 2920 039, 98420 22017

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் நட்டாற்றீஸ்வரர்
அம்மன் நல்லநாயகி (அன்னபூரணி)
தல விருட்சம் அத்தி மரம்
தீர்த்தம் காவிரி தீர்த்தம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் காங்கயம்பாளையம்
மாவட்டம் ஈரோடு
மாநிலம் தமிழ்நாடு

வாதாபி, வில்வலன் என்னும் இரு அசுரர்கள், மகரிஷிகளின் வயிற்றுக்குள் ஏதோ ஒரு உணவின் வடிவில் சென்று, பின்பு வயிறைக்கிழித்து வெளியேறி, அவர்களை உணவாக சாப்பிடும் வழக்கமுடையவர்கள். அவர்கள், உலகைச் சமப்படுத்த பொதிகை சென்ற அகத்தியரைக் கண்டனர். அவரையும் உண்ண திட்டமிட்டனர். வாதாபி மாங்கனி உருவெடுத்தான். அதை எடுத்துக்கொண்ட வில்வலன், சிவனடியார் வேடத்தில் அகத்தியர் முன் சென்றான். அவரிடம், “சிவனின் கட்டளைக்காக தென்திசை செல்லும் தாங்கள், என் உபசரிப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும்என வேண்டி மாங்கனியைக் கொடுத்தான். அவரும் அதை சாப்பிட்டுவிட்டார். அப்போது, வில்வலன் அகத்தியரின் வயிற்றுக்குள் இருந்த வாதாபியை வெளியே அழைத்தான். தன் ஞானதிருஷ்டியால் இதையறிந்த அகத்தியர், “வாதாபி ஜீரணோத்பவஎனச் சொல்லி வயிற்றைத் தடவினார். வாதாபி ஜீரணமாகிவிட்டான். கோபம் கொண்ட வில்வலன், சுயவடிவமெடுத்து அகத்தியரை அழிக்க முயன்றான். அகத்தியர் அவனையும் சம்காரம் செய்தார். இருவரைக் கொன்றதால் அகத்தியருக்கு பிரம்மகத்திதோஷம் (கொலை பாவம்) உண்டானது. இந்த தோஷம் நீங்க, காவிரி ஆற்றின் நடுவில் இருந்த குன்றில், மணலில் இலிங்கம் வடித்து பூஜை செய்து விட்டு கிளம்பினார். அந்த இலிங்கம் அப்படியே இறுகிப்போனது. ஆற்றின் நடுவில் இருந்ததால் பிற்காலத்தில் இவருக்கு, “நட்டாற்றீஸ்வரர்என்ற பெயர் ஏற்பட்டது.

காவிரியின் நடுவிலுள்ள குன்றின் மீது, ஓம்கார வடிவில் அமைந்த கோயில் இது. இதைச் சுற்றியுள்ள கொக்கராயன் பேட்டையில் முக்கூடநாத சுவாமி கோயில், சாத்தம்பூரில் வல்லாளேஸ்வரர், காளமங்கலத்தில் மத்தியபுரீஸ்வரர், மொளசியில் முக்கண்ணீஸ்வரர் என நான்கு சிவன் கோயில்கள் அமைந்துள்ளன. இந்நான்கு சிவத்தலங்களுக்கும் மத்தியில் இக்கோயில் அமைந்துள்ளதால் இவை பஞ்சபூத தலங்களாகக் கருதப்படுகின்றன. இங்கு மணலில் வடிக்கப்பட்ட லிங்கம் இருப்பதால், இதை பிருத்வி (மண்) தலமாகக் கருதி வழிபடுகிறார்கள். இக்கோயிலுக்குச் செல்பவர்கள் ஆற்றைக் கடந்துதான் செல்ல வேண்டும். இதற்காக பரிசல் உண்டு.

காவிரியாற்றின் நடுவில் அமைந்த தலம் என்பதால், ஆடிப்பெருக்கன்று சிவனுக்கு காவிரி நீர் அபிஷேகத்துடன் பூஜை நடக்கும். அன்று அகத்தியருக்கு தலைப் பாகை மற்றும் வஸ்திரம் அணிவிப்பர். சித்திரை முதல்நாள், ஆடிப்பெருக்கு மற்றும் கார்த்திகை கடைசி திங்களன்று சுவாமிக்கு 108 சங்காபிஷேகம் நடக்கும். அகத்தியர் சிவபூஜை செய்த போது, சுவாமிக்கு கம்பு தானியத்தை படைத்து வழிபட்டார். இதன் அடிப்படையில் சித்திரை முதல் நாள் மட்டும் சிவனுக்கு தயிர் கலந்த கம்பங்கூழ் நைவேத்யமாகப் படைக்கப்படும். அன்று பக்தர்களுக்கு இதையே பிரசாதமாகத் தருவர்.

அம்பாள் நல்லநாயகி, சிவன் சன்னதிக்கு வலப்புறம் இருக்கிறாள். தன்னை வேண்டும் பக்தர்களுக்கு நற்பலன்களைத் தருபவள் என்பதால் இவளுக்கு இப்பெயர். அன்னபூரணி என்றும் பெயருண்டு. ஆடிப்பூரத்தன்று மதிய பூஜையில் இவளுக்கு 108 சங்காபிஷேகம் நடக்கும். கோயில் வளாகத்திலுள்ள பாறை மீது தலவிருட்சம் ஆத்திமரம் இருக்கிறது. மிகவும் பழமையான இம்மரத்தில் புதிய கிளைகள் தோன்றுவதில்லை என்பது அதிசயம். இம்மரத்தின் கீழ் காவிரி கண்ட விநாயகர் இருக்கிறார்.

இங்குள்ள முருகன், வலது காலை முன்வைத்தும், இடக்காலை பின் வைத்தும் நடப்பது போன்ற பாவனையில் காட்சி தருகிறார். அகத்தியர் இங்கு சிவனைத் தரிசிக்க வந்தபோது, முருகன் அவரை முன்னின்று வரவேற்றதன் அடிப்படையில் இக்கோலத்தில் காட்சி தருவதாகச் சொல்கின்றனர். இவர் இடது கையில் கிளி வைத்திருப்பது வித்தியாசமான ஒன்று.

மார்கழி திருவாதிரையன்று நடராஜருக்கு விசேஷ பூஜை நடக்கும். அன்று ஒரு பரிசலில் நடராஜர் எழுந்தருளி, காவிரி நதியிலேயே கோயிலைச் சுற்றி வருவார். அவருக்கு முன்பாக மற்றொரு பரிசலில் மேளவாத்தியங்கள் செல்லும். மாலையில் திருக்கல்யாண வைபவம் நடக்கும். இந்த வைபவம் இங்கு மிக விசேஷமாக நடக்கும். விஜயதசமியன்று கொலுவில் வைத்த அம்பாள் சிலையை, பரிசலில் எழுந்தருளச் செய்வர்.

பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையில் மட்டும் ஆற்றில் தண்ணீர் குறைவாக இருக்குமென்பதால், ஆற்றுக்குள் நடந்து சென்று விடலாம்.

திருவிழா:

ஆடிப்பெருக்கு, சித்திரை முதல்நாள்,மார்கழி திருவாதிரை, கார்த்திகை கடைசி திங்களன்று சுவாமிக்கு 108 சங்காபிஷேகம் நடக்கும்.

கோரிக்கைகள்:

பேச்சுக்குறைபாடு உள்ளவர்கள் இத்தல முருகனை வேண்டிக் கொள்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *