மதுநாதசுவாமி திருக்கோயில், இலத்தூர்

அருள்மிகு இலத்தூர் மதுநாதசுவாமி திருக்கோயில், இலத்தூர், திருநெல்வேலி மாவட்டம்

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மதுநாதசுவாமி
தல விருட்சம் புளியமரம்
தீர்த்தம் அனுமன் ஆறு
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் இலைத்தூர்
ஊர் இலத்தூர்
மாவட்டம் திருநெல்வேலி
மாநிலம் தமிழ்நாடு

உலக முதல்வனான சிவபெருமானுக்கும், பார்வதிக்கும், திருக்கைலாயத்தில் திருமணம் நடந்தது. அந்த சமயத்தில், வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்ததால், பூமி நிலை குலைந்தது. இதையறிந்த சிவபெருமான் குள்ள முனிவரான அகத்தியரைத் தென்திசைக்குச் சென்று பூமியை சமப்படுத்த வேண்டினார். அகத்தியர் தென்திசை நோக்கி வந்த போது அனுமன் ஆறும் குறுக்கிட்டது. அந்த ஆற்றில் நீராடி மணலால் சிவலிங்கம் செய்து பூஜை செய்தார். அப்போது, இலிங்கம் வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்த புளியமரத்திலிருந்து தேன் வடிந்தது.

அகத்தியர் மரத்தின் உச்சியைப் பார்த்தபோது தேன்கூடு ஒன்றைக் கண்டார். சற்று நேரத்தில் இலிங்கத்தின் மீது தேன் கொட்ட ஆரம்பித்தது. இதன்பிறகு மணல் இலிங்கம் இறுகி கல் இலிங்கம் போல் மாறி விட்டது. அதத்தியர் அந்த காட்சியைக் கண்டு மதுநாதா என அழைத்தார். தேனுக்கு மது என்ற பெயரும் உண்டு. தமிழ் வளர்த்த அகத்தியர் உருவாக்கி வழிப்பட்ட இலிங்கம் உடைய கோயிலே மதுநாதசுவாமி கோயில் ஆகும். புளியமரத்தின் இலையின் தூரிலிருந்து தேன் வடிந்ததால் இவ்வூர் இலைத்தூர் என்றாகி காலப்போக்கில் இலத்தூர் ஆனது.

இக்கோயிலில் தெட்சிணாமூர்த்தியும், சனீஸ்வரனும் முக்கிய இடம் பெறுகின்றனர். தெட்சிணாமூர்த்தி சன்னதி எல்லா கோயில்களிலும் பிரகாரத்தில் தெற்கு நோக்கி அமைந்திருக்கும். இந்த கோயிலில் சுவாமி சன்னதியின் விமானத்தின் கீழே இவரது சன்னதி அமைந்ததுள்ளது. இவ்வமைப்பு வேறு எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. விமானத்தின் மீது தெட்சிணாமூர்த்தியின் சிலைகளை வடிப்பது வழக்கம். ஆனால் விமானத்தின் கீழே தனி சன்னதி இருப்பது இங்கு மட்டும் தான்.

சனீஸ்வர விக்கிரக வழிபாட்டுக்கு உகந்த கோயில் இது. ஏனெனில் சனீஸ்வரன் அபயஹஸ்தநிலையில் (அருள் வழங்கும் நிலை) கைகளை காட்டியபடி அருள்தரும் தலம் இதுமட்டுமே. அதுமட்டுமின்றி சனீஸ்வரனை சுற்றிவரும் வசதி இருக்கிறது. சனியைக் கண்டால் அலறி ஓடும் நிலைமையே எங்கும் இருக்கிறது. ஆனால், இந்த சனீஸ்வரன் தன்னை வலம் வரும் வகையில் பக்தர்களுக்கு இடம் அளித்திருக்கிறார். எனவே சனி சம்பந்தப்பட்ட எந்த தோஷமாக இருந்தாலும், இத்தலத்திற்கு வந்தால் தீர்ந்து போகிறது. பொதுவாகக் கோயில்களில் பைரவர் கோயில் வாசலில் சுவரை ஒட்டி இருப்பார். அக்னி பைரவர் இத்தலத்தில் அருள்பாலிக்கிறார். அவரையும் சுற்றி வணங்கும் வகையில் சன்னதி அமைந்துள்ளது. இலிங்க வடிவில் சாஸ்தா காட்சி தருவதை வேறு எங்கும் காண இயலாது. இக்கோயிலில் சாஸ்தா இலிங்க ரூபத்தில் காட்சி தருகிறார். ஒரு இலிங்கத்தில் வில், அம்புடன் யானை மீது அமர்ந்து செல்வது போல சாஸ்தா சிலை வடிவமைக்கப் பட்டுள்ளது. யானையின் மீது அமர்ந்து இரண்டு கால்களையும் தொங்கவிட்டுக் கொண்டு சாஸ்தா செல்வது விசேஷ அம்சம்.

இதே ஊரில் மதுரை கள்ளழகரைப் போல சுந்தரராஜப் பெருமாளுக்குத் தனிக்கோயில் இருக்கிறது. மிக அமைதியான சூழலில் மனதிற்கு ஆறுதல் அளிக்கும் வகையில் பூதேவி, ஸ்ரீதேவி தாயாருடன் பெருமாள் அமைந்துள்ளது சிறப்பு. கருடாழ்வார், விஸ்வக்ஷேனரைத் தவிர வேறு யாரும் இக்கோயிலில் இல்லை. தியானத்திற்கு ஏற்ற கோயில் இது.

இவ்வூர் வழியே ஆதியில் ஓடிய நதி அனுமன் நதியாகும். இராமன். லட்சுமணன் ஆகியோர் வானரசேனைகளோடு இலங்கை செல்லும் வழியில் தாகம் ஏற்படவே அனுமன் தனது கதையினால் இராமநாமம் சொல்லி ஒரு பாறையில் அடித்தார். அந்த பாறை வழியாக ஆகாய கங்கை பெருகி வந்தது. அதுவே அனுமன் நதியானது. தற்போது இந்த கோயிலின் எதிரே கோடையிலும் வற்றாத திருக்குளம் இருக்கிறது. கோயிலும், குளமும் ஒருங்கே அமைந்த கோயில்கள் வரிசையில் இலத்தூரும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

திருவிழா:

நவராத்திரி, குமாரசஷ்டி, திருவாதிரை, தை உத்திர நட்சத்திரத்தில் அறம் வளர்த்த நாயகிக்கு திருநாள் ஆகியவை விசேஷம்.

கோரிக்கைகள்:

சனி சம்பந்தப்பட்ட எந்த தோஷமாக இருந்தாலும், இத்தலத்திற்கு வந்தால் தீர்ந்து போகிறது என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

சனிக்கிழமைகளில் சனீஸ்வரருக்கு விசேஷ பூஜை நடத்தப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *