மார்க்கபந்தீசுவரர் திருக்கோயில், விரிஞ்சிபுரம்

அருள்மிகு மார்க்கபந்தீசுவரர் திருக்கோயில், விரிஞ்சிபுரம், வேலூர்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மார்க்கபந்தீசுவரர்
அம்மன் மரகதாம்பிகை
தல விருட்சம் பனைமரம்
தீர்த்தம் சிம்ம தீர்த்தம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருவிரிஞ்சி
ஊர் விரிஞ்சிபுரம்
மாவட்டம் வேலூர்
மாநிலம் தமிழ்நாடு

திருவண்ணாமலையில் ஈசனின் முடி காண முடியாமல் ஈசனாரின் திருமுடியில் இருந்து விழுந்த தாழம்பூவை சாட்சியாகக் கொண்டு ஈசனாரின் முடி கண்டதாகக் கூறி அதனால் அவதியுற்ற பிரம்மா, தேவரூபத்தில் காட்சி தரக்கூடாது என்று ஈசன் கருதியதால், விரிஞ்சிபுரத்தில் உள்ள இக்கோயில் குருக்கள் மகனாக பிறந்து சிவசர்மன் என்ற பெயரோடு வளர்ந்தான்.


கொஞ்ச காலத்தில் தந்தையார் மறைந்ததால் சிவசர்மன் சிவபெருமானுக்கு பூஜை செய்யத் தயாரானான். சுவர்ண கணபதியை ஆராதித்த பின் கையில் திரு மஞ்சனக் குடத்துடன் பகவானுக்கு அபிசேகம் செய்ய எத்தனிக்கையில் மகாலிங்கம் உயரமாக இருந்ததால் (சிவசர்மன் சிறு பாலகனாக இருந்ததால்) திருமுடி எட்டவில்லை. அது கண்டு, அப்பனே! உங்கள் முடி எனக்கு எட்டவில்லையே என்று உருகி நிற்க அவனது பக்திக்கு இரங்கி ஈசனார் தம் திருமுடியை வளைத்தார். பெருமான் திருமுடி வளைந்து சிறுவன் முறைப்படி செய்த பூஜைகளை ஏற்றுக்கொண்டார். அதே கோலத்தில் இன்றும் முடி சாய்ந்த மகாலிங்கமாக மார்க்கபந்தீசுவரராக காட்சி அளிக்கிறார் என்று வரலாறு கூறுகிறது. மூலவர் சற்று ஈசாணிப்பக்கம் சாய்ந்துள்ளார்.பிரம்மனுக்கு முடி சாய்த்து கொடுத்ததால் அவ்வாறு உள்ளது. திருவண்ணாமலையில் அடிமுடி காண்பதில் பொய் சொன்ன பிரம்மா இத்தலத்தில் பூஜை செய்து திருமுடி கண்டிருக்கிறார். பாலகனாகத் தோன்றிய பிரம்மா இத்திருத்தலத்தில் சிவபெருமானிடம் உபநயனம், பிரம்மோபதேசம், சிவதீட்சை ஆகியவற்றைப் பெற்றுள்ளார். மூலவரின் மீது பங்குனி மாதத்தில் சூரியகதிர்கள் விழுகின்றன.

விரிஞ்சன் என்று பிரம்மாவுக்கு பெயர். பிரம்மா பூஜை செய்ததால் விரிஞ்சிபுரம் என்று பெயர் வந்தது.

13ம் நூற்றாண்டுக் கோயில் என்றும் சோழ ராஜாக்களால் நிர்மாணம் செய்யப்பட்தென்றும் தெரிகிறது. தனபாலன் என்ற வணிகனுக்கு வேடுவராய் சிவபெருமான் வழித்துணை வந்தருளிய தலம். இதனாலேயே வழித்துணை நாதர் என்ற பெயரும் சுவாமிக்கு உண்டு. திருமூலர், பட்டினத்தார் ஆகியோரால் பாடல் பெற்ற தலம் இது. மூலவருக்கு மேல் ருத்ராட்சப் பந்தல் இருப்பது விசேசம். இங்கு தலமரமாகப் பனைமரம் உள்ளது. இது கோயிலின் உட்பிரகாரத்தில் உள்ளது. இது ஒரு அதிசய பனைமரமாக உள்ளது. அதாவது இந்த பனைமரத்தில் காய்க்கும் பனை காய்கள் கறுப்பாக இருக்கிறது. மறுவருடம் காய்க்கும் பனை காய்கள் வெள்ளையாக இருக்கிறது.

திருவிழா:

பங்குனி பிரம்மோற்சவம் – 10 நாட்கள் திருவிழா கொடி ஏற்றம் தீர்த்தவாரியுடன் நடக்கும். விழா நாட்களில் பத்து வாகனங்களில் சுவாமி வீதி உலா. கார்த்திகை மாதம்கடைசி ஞாயிறு மிகவும் விசேசம்.

ஆடிப்பூரம் , சிவராத்திரி, நவராத்திரி ஆகியவை கோயிலின் மிக விசேசமான நாட்கள் ஆகும். பவுர்ணமி, அன்னாபிசேகம், பிரதோசம், அமாவாசை, கிருத்திகை, சஷ்டி, விசாகம், தைபூசம் சங்கடகர சதுர்த்தி, கார்த்திகை தீபம் ஆகியவை இத்தலத்தின் சிறப்பான நாட்கள் ஆகும். தவிர வருடத்தின் மிக முக்கிய விசேச நாட்களான தமிழ், ஆங்கில வருடப்பிறப்பு, தீபாவளி, பொங்கல் ஆகிய நாட்களில் கோயிலில் சுவாமிக்கு விசேச அபிசேக ஆராதனைகள் நடைபெறும்.

கோரிக்கைகள்:

குழந்தை வரத்துக்கு மிகவும் பெயர் பெற்ற கோயில் இது. கார்த்திகை மாதம் கடைசி ஞாயிற்றுக் கிழமை அன்று முதலில் ஆற்றில்(பாலாறு) குளித்துவிட்டு பின்பு பிரம்ம தீர்த்தத்திலும் சிம்ம குளத்திலும் குளித்துவிட்டு, சுவாமியை வலம் வந்தால் குழந்தை வரம் நிச்சயம் கிடைக்கிறது என்பது இத்தலத்தில் வழிபடும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. திருமணம் வரம் கிடைக்கவும் பக்தர்கள் இங்கு வழிபடுகிறார்கள். இத்தலத்தில் வழிபட்டால் பேய் பிசாசு தொல்லைகள் நீங்குவதால் அந்த பிரார்த்தனைகளுக்காகவும் இத்தலத்துக்கு நிறைய பக்தர்கள் வருகின்றனர்.

நேர்த்திக்கடன்:

சுவாமிக்கு நல்லெண்ணெய், மஞ்சள் பொடி, மா பொடி, பால், தயிர், பழ வகைகள், கரும்புச்சாறு, தேன், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர், ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். உலர்ந்த தூய ஆடைகள் சாத்தலாம். நெய்தீபம் ஏற்றலாம். சுவாமிக்கு வேட்டியும், அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிசேகம், புடவை சாத்துதல் ஆகியவற்றையும் செய்யலாம். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம். கார்த்திகை மாதத்தில் சங்காபிசேகம் நடத்துகிறார்கள். வசதி படைத்தவர்கள் கோயில் திருப்பணிக்காக பொருள் தருவதும் வழக்கமாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *