மகாதேவர் (இரட்டையப்பன்) கோயில், பெருவனம்

அருள்மிகு மகாதேவர் (இரட்டையப்பன்) கோயில், பெருவனம், திருச்சூர், கேரளா.

+91- 487 – 234 8109

காலை 5 மணி முதல்10.30 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

மூலவர் மகாதேவர், இரட்டையப்பன்
அம்மன் பார்வதி
தல விருட்சம் ஆல மரம்
தீர்த்தம் தொடுகுளம்
பழமை 2000-3000 வருடங்களுக்கு முன்
ஊர் பெருவனம்
மாவட்டம் திருச்சூர்
மாநிலம் கேரளா

பூரு மகரிஷி வனமாக இருந்த இப்பகுதியில் சிவனை நோக்கிக் கடும் தவம் இருந்தார். இவரது தவத்திற்கு மகிழ்ந்த சிவபெருமான் பார்வதியுடன் அர்த்தநாரீஸ்வர கோலத்தில் காட்சி தந்து, இலிங்கம் ஒன்றை கொடுத்தார். அந்த இலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதற்குரிய தீர்த்தத்தை தனது கையாலேயே உருவாக்கினார் மகரிஷி. விரல்களால் மூன்று கோடு போட்டு ஒரு குளத்தை உருவாக்கினார். எனவே அது தொடுகுளம்எனப்பட்டது. இந்த குளத்தில் நீர் வற்றும் போது மகரிஷி போட்ட மூன்று கோடுகளை இப்போதும் காணலாம். ஒருமுறை மகரிஷி குளிக்க செல்லும் போது சிவலிங்கத்தை அருகிலிருந்த ஒரு ஆலமரத்தின் மேல் வைத்து சென்றார். திரும்ப வந்து இலிங்கத்தை எடுத்தபோது இலிங்கம் வரவில்லை. எனவே 24 படிகள் அமைத்து அதன் மீது ஏறி இலிங்கத்தை பூஜித்து வந்தார். இதைக் குறிக்கும் வகையில் இக்கோயிலில் 24படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் படிகளில் ஏறிச்சென்றே மூலவரை தரிசிக்க முடியும். பூரு மகரிஷி தவம் செய்ததால் இத்தலம் பூரு வனம்என அழைக்கப்பட்டு, காலப்போக்கில் பெருவனம்ஆனது.

ஒரே கோயிலில் இரண்டு சிவலிங்கம் இருப்பதால் இக்கோயிலை இரட்யைப்பன் கோயில்என அழைக்கிறார்கள். இரண்டு இலிங்கங்களின் எதிரிலும் நந்தி, பலிபீடம் உள்ளது. கோயிலின் பின்புறம் தொடுகுளம் உள்ளது.

பூரு மகரிஷி பிரதிஷ்டை செய்த இந்த இலிங்கம் மகாதேவர் என்ற திருநாமத்துடன் அமைந்துள்ளது. அருகில் மற்றொரு சன்னதியில் மகரிஷிக்கு காட்சி தந்த அர்த்தநாரீஸ்வர திருக்கோலம் உள்ளது. இலிங்கத்திற்குள் பார்வதி இருப்பது இங்கு மட்டும் தான். பார்வதி வடிவை சிறுலிங்கத்திற்குள் இருப்பது போல செதுக்கி, பெரிய இலிங்கத்துடன் ஐக்கியப்படுத்தி உள்ளனர். சிவராத்திரியை ஒட்டி இந்த அபூர்வ லிங்கத்தையும், உயரமான இடத்திலுள்ள லிங்கத்தையும் தரிசிக்க வேண்டும். இத்தலத்தில் 1426 வருடங்களாக பூரம் திருவிழா நடந்து வருகிறது. புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா கூட 200 ஆண்டுகளாகத்தான் நடக்கிறது. இங்கு சிவன் மேற்கு பார்த்த அர்த்தநாரீஸ்வரர் திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.

இரட்டையப்பன் கோயிலை சுற்றி 24 கோயில்கள் இருக்கின்றன. அவை: திருப்பறையார் ராமர், சேர்ப்பு பகவதி(பூமாதேவி), ஊரகத்தம்மா திருவடி(லட்சுமி), ஆறாட்டுப்புழா சாஸ்தா, சாத்தன்குடம் சாஸ்தா, தொட்டிப்பால் பகவதி, அந்திக்காடு பகவதி, சுரக்கோடு பகவதி, நெட்டிசேரி சாஸ்தா, மாட்டில் சாஸ்தா, அயக்குன்னு பகவதி, கடலாசேரி பிசாரிக்கல் பகவதி, கோடனூர் சாஸ்தா, நாங்குளம் சாஸ்தா, எடக்குன்னி பகவதி, சக்கங்குளங்கரை சாஸ்தா, தைக்காட்டுசேரி பகவதி, சிட்டிசாத்துகுடம் சாஸ்தா, மேடங்குளங்கரை சாஸ்தா, கல்லேறி சாஸ்தா, கொடுகரை புனிலார்காவு பகவதி, கடுப்புசேரி பகவதி, சாலக்குடி பிசாரிக்கல் பகவதி, திருவல்லகாவு சாஸ்தா ஆகியவை ஆகும்.

இந்த 24 கோயில்களிலும் திருவிழா துவங்கும் முன், அந்தந்த கோயில்களின் நிர்வாகிகள், பெருவனம் கோயிலுக்கு வந்து சிவனிடம் அனுமதி கேட்டு பூஜை செய்த பின்னரே விழாவை துவக்குவர். அர்த்தநாரீஸ்வரர் சன்னதிக்கு பின்புறம் கிழக்கு நோக்கி பார்வதி அருள்பாலிக்கிறாள். தெற்கு நோக்கிதெட்சிணாமூர்த்தியும், அருகே கணபதியும் உள்ளனர். கோயில் சுற்றுப்பகுதியில் கோசால கிருஷ்ணன் தனி சன்னதியில் அருளுகிறார்.
கோயிலின் வடக்கே அகமலா சாஸ்தா, தெற்கே வழுத்துகாவு சாஸ்தா, கிழக்கே குதிரான்மலா சாஸ்தா, மேற்கே எடத்திருத்தி சாஸ்தா என நான்கு திசைகளிலும் நான்கு சாஸ்தாக்கள் காவல் செய்கின்றனர்.

அதேபோல் ஒரே ஆவுடையில் இரண்டு லிங்கம் இருப்பது இத்தலத்தின் தனி சிறப்பு. இத்தலம் பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது

திருவிழா:

மாசி உத்திர நட்சத்திரத்தில் கொடியேற்றி பங்குனி உத்திர நட்சத்திரம் வரை பிரம்மோத்சவம், மகா சிவராத்திரி, திருக்கார்த்திகை.

பூசைகள்:

பிரிந்துள்ள தம்பதியினர் ஒன்று சேரவும், குழந்தை பாக்கியம் வேண்டியும், முன்னோர்கள் ஆன்மா சாந்தியடையவும், திருமண தடை விலகவும், ஆயுள் விருத்திக்காகவும் இங்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. தொழில், வியாபாரம், புதிய திட்டங்கள் துவங்குதல், பணி ஆகியவற்றின் வெற்றிக்காவும், படிப்பில் சிறந்து விளங்கவும் சங்காபிஷேகம் செய்யப்படுகிறது. 60, 70, 80 வயது நிறைவடைந்த தம்பதியினர் இத்தலத்தில் மிருத்யுஞ்ஜய ஹோமம் செய்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *