மார்க்கசகாயேஸ்வரர் திருக்கோயில், ஒரத்தூர்

அருள்மிகு மார்க்கசகாயேஸ்வரர் திருக்கோயில், ஒரத்தூர், கடலூர் மாவட்டம்.

+91 505 33249, 96002 05958

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மார்க்கசகாயேஸ்வரர், வழித்துணைநாதர்
அம்மன் மரகதவல்லி
தீர்த்தம் வெள்ளாறு
ஆகமம் சிவாகமம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் ஒரத்தூர்
மாவட்டம் கடலூர்
மாநிலம் தமிழ்நாடு

திருத்தல யாத்திரை சென்ற சுந்தரர், விருத்தாச்சலம் சென்றார். அவர் இத்தலத்தைக் கடந்தபோது வழி தெரியவில்லை. எனவே, ஓரிடத்தில் அப்படியே நின்று விட்டார். தனக்கு வழி காட்டும்படி சிவனை வேண்டினார். அப்போது, அவர் முன் வந்த முதியவர் ஒருவர், “அடியவரே, காட்டுப்பாதையில் பாதியிலேயே நின்று விட்டீரே. எங்கு போகவேண்டும்?” என விசாரித்தார். அவர் தனக்கு பாதை தெரியாததைச் சொன்னார். முதியவர் அவரிடம் தான் வழி காட்டுவதாகச் சொல்லி அழைத்துச் சென்றார். கூடலையாற்றூர் தலம் வரையில் அவருடன் சென்று, அங்கிருந்து வழியைக் காட்டினார். சுந்தரர் அவருக்கு நன்றி சொல்ல முயன்றபோது

, அவர் மறைந்து விட்டார். அவர் குழப்பமாக நின்றவேளையில், சிவன் தானே வந்து வழி காட்டியதை உணர்த்தினார். மகிழ்ந்த சுந்தரர் பதிகம் பாடினார். சுந்தரருக்கு வழிகாட்டிய சிவன் இத்தலத்தில் அருளுகிறார். மார்க்கம் என்றால் வழி. எனவே, இத்தல இறைவனுக்கு மார்க்கசகாயேஸ்வரர்என்று பெயர். வழித்துணைநாதர் என்றும் இவருக்குப் பெயருண்டு.

இவ்வூரின் எல்லையில் ஓடும் வெள்ளாறு நதி, இங்கு மட்டும் வளைந்து ஓடுகிறது. இந்நதிக்கரையில் அமைந்த கோயில் இது. வாழ்க்கை மீதான பயம் உள்ளோர் தெளிவு கிடைக்க, தங்கள் நட்சத்திர நாள் அல்லது ஏதேனும் ஒரு திங்களன்று இங்கு வந்து, சிவன் சன்னதியில் நெய் தீபமேற்றி, சர்க்கரைப்பொங்கல் படைத்து வழிபடுகிறார்கள். “திக்கற்றோருக்கு தெய்வமே துணைஎன்பர். வாழ்வில் திசை தெரியாமல், குழப்பத்தில் இருப்போர் மனக்குறை நீங்கி, நிம்மதி பெறுவதற்காக வழிபட வேண்டிய விசேஷ தலம் இது.

அம்பாள் மரகதவல்லி தெற்கு நோக்கி தனிச்சன்னதியில் இருக்கிறாள். நவராத்திரி நாட்களில் இவள் ஊஞ்சலில் எழுந்தருளி, காட்சி தருவாள். இந்நாட்களில் இவளுக்கு அபிராமி அந்தாதி பாடி விசேஷ பூஜை நடக்கும். ஆடி, தை வெள்ளியில் இவளுக்கு விளக்கு பூஜை நடக்கும்.

முன் மண்டபத்தில் நடராஜர் சன்னதி உள்ளது. இவரது பாதத்திற்கு கீழேயுள்ள முயலகன், முகத்தைத் தூக்கி, சுவாமியின் பாதத்தை பார்த்தபடி இருக்கிறான். மார்கழி திருவாதிரையன்று நடராஜருக்கு விசேஷ பூஜை நடக்கும். பிரகாரத்தில் உள்ள நால்வர் சன்னதியில் குருபூஜை வைபவம் விசேஷமாக நடக்கும். பங்குனி உத்திரத்தன்று முருகன் புறப்பாடாவார்.

சித்தி விநாயகர், கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர், நவக்கிரகம், பைரவர், சூரியன் ஆகியோர் பிரகாரத்தில் உள்ளனர். திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயில் அமைப்பில், சனீஸ்வரர் கிழக்கு நோக்கி சன்னதியின் முன்புறம் இருக்கிறார். இங்கிருந்து 7 கி.மீ., தூரத்தில் மகான் ராகவேந்திரர் அவதரித்த புவனகிரி உள்ளது.

திருவிழா:

சிவராத்திரி, திருக்கார்த்திகை, ஐப்பசியில் அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை.

கோரிக்கைகள்:

பயம் போக, மனக்குறை நீங்கி நிம்மதி பெற வழிபட வேண்டிய தலம்.

நேர்த்திக்கடன்:

நெய் தீபமேற்றி, சர்க்கரைப் பொங்கல் படைத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *