குபேரபுரீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

அருள்மிகு குபேரபுரீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம்.

+91-96778 18114

காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் குபேரபுரீஸ்வரர்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் தஞ்சவூர்
ஊர் தஞ்சாவூர்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

குபேரன் தஞ்சாவூருக்கு வந்து சிவனை வழிபட்டதாக ஒரு தகவல் உண்டு. தஞ்சாவூரில் பிரகதீஸ்வரர் கோயில் (பெரிய கோயில்) கட்டப்படுவதற்கு முன்னதாக ஊர் எல்லையில், ஒரு சிவன் கோயில் இருந்தது. இங்குள்ள இறைவன் தஞ்சபுரீஸ்வரர்எனப்பட்டார்.

இராவணன், தான் பெற்ற தவவலிமையால், குபேரனிடமிருந்த செல்வத்தைப் பறித்துக் கொண்டான். செல்வமிழந்த குபேரன், மீண்டும் செல்வம் பெற, பல சிவன் கோயில்களுக்கும் சென்றான். இறுதியில் தஞ்சாவூர் தலத்துக்கு வந்து இங்குள்ள சிவனிடம் தஞ்சமடைந்தான். தன்னிடம் தஞ்சம் புகுந்தவர்களைக் காப்பாற்றும் வல்லமையுள்ள சிவன் இக்கோயிலில் தஞ்சபுரீஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இவரது பெயராலேயே இவ்வூருக்கு தஞ்சவூர்என்ற பெயர் எற்பட்டு காலப்போக்கில் தஞ்சாவூர்ஆனதாகத் தல புராணம் குறிப்பிடுகிறது. “குபேரபுரீஸ்வரர்என்ற திருநாமமும் சுவாமிக்கு உண்டு.

பிரம்மாவின் மனதில் இருந்து புலஸ்தியர் என்ற மகன் தோன்றினார். இவருக்கு விச்வரஸ் என்ற மகன் பிறந்தார். விச்வரஸ் முனிவராயினும், சுமாலி என்ற அரக்கனின் மகள் கேகஸியைத் திருமணம் செய்து கொண்டார். இதனால் தாயின் குணநலத்துடன் மூன்று பிள்ளைகள் பிறந்தனர். அவர்களே இராவணன், கும்பகர்ணன், சூர்ப்பனகை ஆகியோர். இதன் பின் விபீஷணன், குபேரன் ஆகியோர் பிறந்தனர். இக்குடும்பத்தில் பிறந்த ஆண்மக்களில் ராவணனும், குபேரனும் சிவ பக்தர்கள். கும்பகர்ணன் தன் கொள்ளுத்தாத்தா பிரம்மாவின் பக்தன். விபீஷணன் பெருமாள் பக்தன். இது எதிலும் சேராமல் பெண் என்ற சொல்லுக்கே களங்கம் ஏற்படுத்த சூர்ப்பனகைக்கு பக்தியும் கிடையாது; பெண்ணுக்குரிய நாணமும் இல்லாமல், ஆணழகர்களை தேடித்திரியும் காமாந்தகாரி.

இராவணன் சிவபக்தனாயினும் பெண் பித்தன். கும்பகர்ணன் சாப்பாட்டு ராமன். விபீஷணனும், குபேரனும் தப்பிப் பிறந்தவர்கள். அசுரகுணங்கள் எதுவும் ஒட்டிக் கொண்டிருக்கவில்லை. இராவணன், சிவ பெருமானிடம் மனிதரைத் தவிர பிறரால் அழியக்கூடாது என்ற வரம் பெற்றவன். குபேரன் தன் சிவபக்தியால் வடதிசைக்கு அதிபதி ஆனவன். மேலும் சிவபெருமான் உலகத்து செல்வம் முழுவதையும் அவனிடம் ஒப்படைத்து, உழைக்கின்ற மக்களுக்கு, அவரவர் விதிப்பயனுக்கேற்ப செல்வத்தைக் கொடுத்து வரக் கட்டளையிட்டார்.

இந்நிலையில், திருமாலின் மனைவியான மகாலட்சுமி, எட்டுவிதமான சக்திகளைப் பெற்றாள். தனம், தான்யம், சந்தானம் உள்ளிட்ட எட்டு வித சக்தி பெற்ற இவளது சக்திகள் அனைத்தையும் சங்கநிதி, பதுமநிதி என்ற வாலிபர்களிடம் ஒப்படைத்தாள். இவர்களைத் தன் கணக்குப் பிள்ளைகளாக நியமித்துக் கொண்டார் குபேரன்.

குபேரனின் இருபுறமும் இவர்கள் அமர்ந்தனர். குபேரன் அரசாட்சி நடத்த, அழகாபுரி என்ற பட்டணத்தை தேவசிற்பியான விஸ்வகர்மா உருவாக்கி கொடுத்தார். இங்கு ஒரு அரண்மனை கட்டப்பட்டது. இந்த அரண்மனையில் இருந்த அத்தாணி மண்டபத்தில் தாமரை மலர் ஏந்தி, மீன் ஆசனத்தில் போடப்பட்ட பட்டு மெத்தை மீது அமர்ந்து ஆட்சி செலுத்தினான் குபேரன். கிரீடம், தங்க ஆபரணம் அணிந்து முத்துக்குடையின் கீழ் அமர்ந்த இவன், கையால் அபயமுத்திரை காட்டுவான். அதாவது, பணக்கஷ்டத்தால் துன்பப்படுபவன் இதுவரையில் கொடிய பாவங்கள் செய்யாமல் இருந்தால் அவனை ஒரே நாளில் கோடீஸ்வரன் ஆக்குவது இவரது பணி.

இவரது வலதுபுறத்தில் சங்கநிதியும், இடதுபுறம் பத்மநிதியும் இருப்பார்கள். சங்கநிதி கையில் சங்கு வைத்திருப்பான். இவன் தான் குபேரனிடம் செல்வம் பெற அனுமதி கொடுப்பவன். இவனது கை வர முத்திரை தாங்கி இருக்கும், பதுமநிதியின் கையில், தாமரை இருக்கும். தாமரையும், சங்கும் செல்வத்தின் அடையாளங்கள். குபேரனின் அருகில் லட்சுமிதேவி, தன லட்சுமியாகவும், தைரிய லட்சுமியாகவும் வடிவம் தாங்கி அமர்ந்திருப்பாள்.

குபேரன் இங்கு வந்ததைக் குறிக்கும் வகையில், தஞ்சபுரீஸ்வரர் கோயிலில் சுவாமி சன்னதி முன்புள்ள தூணில், குபேரன் சிற்பம் இருக்கிறது.

திருவிழா:

மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, தீபாவளி. தீபாவளித் திருநாளிலும், வெள்ளிக்கிழமைகளிலும் இந்த குபேரனை வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *