கைலாசநாதர் திருக்கோயில், திடியன் மலை

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், திடியன் மலை (உசிலம்பட்டி), மதுரை மாவட்டம்.

+91- 4552 – 243 235, 243 597, 94425 – 24323

காலை 7 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். திருவிழா மற்றும் விசேஷ நாட்களில் அதிகாலையிலேயும் நடை திறந்திருக்கும்.

மூலவர் கைலாசநாதர்
உற்சவர் நடராஜர்
அம்மன் பெரியநாயகி
தல விருட்சம் நெய்கொட்டா மரம்
தீர்த்தம் பொற்றாமரைக்குளம்
ஆகமம் 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் திடியன் மலை
மாவட்டம் மதுரை
மாநிலம் தமிழ்நாடு

இராவணனின் கொடூர ஆட்சிக்கு முடிவு கட்டிய இராமபிரான் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு அசுவமேத யாகம் செய்தார். யாகத்தின் போது, அவரது பட்டத்துக் குதிரை செல்லும் வழியில் எங்‌கெல்லாம் ஒய்வு எடுக்கிறதோ அங்கெல்லாம் ஒர் காசிலிங்கம் வைத்து பிரதிஷ்டை ‌செய்யப்பட்டு வணங்கப்பட்டது. அவ்வாறு ஒர் நாள் அவரது பட்டத்துக் குதிரை தற்போது ‌கோயில் அமைந்திருக்கும் பகுதி்க்கு அருகே உள்ள மலையின் அடிவாரப்பகுதியில் அமைந்துள்ள ஒர் பொற்றாமரைக் குளத்தின் கரையில் அமர்ந்து ‌ஓய்வெடுத்தது. ஆகவே அவ்விடத்தில் காசிலிங்கம் வைத்து பிரதிஷ்ட‌ை செய்யப்பட்டு பூஜை செய்யப்பட்டது.

பின்னர் இப்பகுதியை ஆட்சி செய்த மன்னர்கள் காசிலிங்கம் பிரதி்ஷ்டை செய்யப்பட்ட இடத்தில் தினியே கோயிலைக்கட்டி வழிபாடு நடத்தியதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன.

கலியுகத்தில் உள்ள ஞானகுரு ஸ்தலங்களில் முதன்மை பெற்று சிறப்புடன் திகழும் தலம். அசேர கலசங்களால் தோற்றுவிக்கப்பட்டு மூன்று கோண வடிவில் உள்ள திடியன் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது இத்தலம்.

இம்மலையினைச் சுற்றி அனைத்து தெய்வங்களும் வீற்றுள்ளதாக நம்பப்படுகிறது. தமிழகத்தில் எங்‌குமே இல்லாதபடி, இங்கு மட்டுமே காசியில் இருந்து கொண்டுவரப்பட்ட தட்சிணாமூர்த்தி பதினான்கு சித்தர்களுடன், நந்தியின் மீது அமர்ந்த நிலையில் இரண்டரை அடி உயரத்தில் அருட்காட்சி புரிகிறார். மிகவும் அபூர்வமான அனைத்து நட்சத்திரங்களுக்கும் பொருந்தக்கூடிய ஐந்து மரங்களில் ஒன்றான நெய்கொட்டான் மரத்தினைத் தலவிருட்சமாகக் கொண்ட திருத்தலம். அகத்தியர் தென்திசை நோக்கிச் ‌சென்ற போது, அவரால் பூஜிக்கப்பட்ட தலம்.

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல இயலாதவர்கள், இங்குள்ள கைலாசநாதரை பூஜித்துவிட்டு, திடியன் மலையினைச் சுற்றி வர, திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் எம்பெருமானை வணங்கிய பலனை அடையலாம் என்பதால் இத்தலம் ‘தென் திருவண்ணாமலை’ என்றும் அழைக்கப்படுகிறது.

வேதமந்திரங்களைத் தவறாக உச்சரிப்பதால் ஏற்படும் வாய்வராமை, உடல் தடித்து அவதிப்படுபவர்கள், திக்குவாய் பிரச்சனை உள்ளவர்கள், அடிக்கடி பொய் பேசுபவர்கள், நாக்கு பிரள்வதில் பிரச்னை உள்ளவர்கள், இங்கு வந்து பொற்றா‌மரைக் குளத்தில் நீராடிக் கைலாசநாதரை வணங்கி, அருகில் உள்ள பேச்சாயி அம்மன் கோயிலில் பூஜை செய்து விட்டு, அக்கோயிலில் தரப்படும் கூழாங்கல்லினை வாயில் போட்டுக்கொண்டு திடியன் மலையினைச் சுற்றி வர, குரல் பிரச்சனைகள் தீர்ந்து, உடல் தடிமனும் குறைகிறது என நம்பப்படுகிறது.

இங்குள்ள தலவிருட்சம் நெய்கொட்டா மரத்தின் கீழ் மணலைப்பரப்பி அதன் மீது ‘தியான பூமி’ என வலது மோதிர விரலால் எழுதி, கம்பளி, பாய் அல்லது மெல்லிய துணியின் மீது அமர்ந்து, மனம் ஒருங்கிணைத்து தியானம் ‌செய்தால் கர்மவினைகள் நீங்கும். உடல் தடித்த தடியர்கள் முன்பு இங்கு அதிகமாக வந்ததால் இப்பகுதி ‘தடியன் மலை’ என அழைக்கப்பட்டு பின் அதுவே மருவி ‘திடியன் மலை’ என வழங்கப்படுவதாகவும், பொற்றா‌மரைக்குளத்தின் கரையில் காசிலிங்கம் பிரதிஷ்டை ‌செய்யப்பட்ட தகவல் அறிந்த பொது மக்களும், அந்தணர்களும் இப்பகுதியில் திடீர் எனக்கூடி, அங்கு தொடர் பூஜைகள் நடத்தத்தொடங்கியதால் திடீ‌ர்மலை, திடியன் மலைஎன மருவியதாகவும் ஊரின் பெயர்க்காரணங்கள் குறித்து இருவேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

இங்கு இறைவன் புஷ்பகவிமாத்தின் கீழ் அருள்புரிகிறார். இத்தல விநாயகர் முக்குறுணி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்புரிகிறார். இங்கு இறைவனுக்கு நைவேத்யமாக சர்க்கரைப்பொங்கல் படைத்து வழிபடுகின்றனர்.

திருவிழா:

தினமும் இருகால பூஜைகளுடன், மாதந்தோறும் நடைபெறும் விசேஷபூஜைகள், பவுர்ணமி தினத்தில் கிரிவலம், கார்த்திகையில் மகாதீபம், சிவராத்திரி, நவராத்திரி, தைப்பூசம், குருப்பெயர்ச்சி, மாசிமகம் ஆகிய தினங்களில், கைலாசநாதர் கோயிலில் திருவிழா நாட்களாக கொண்டாடப்படுகிறது.

கோரிக்கைகள்:

நினைத்த காரியங்கள் நிறைவேறிடவும், சகல செல்வங்கள் பெருகிடவும், திருமணத்தடை நீங்கவும், குழந்தைப்பேறு பெறவும் கைலாசநாதர் பெரியநாயகி அம்மனையும், நேரம் சரியில்லை என புலம்புபவர்களும், எதிர்காலம் குறித்து அச்சம் ‌கொண்டோரும், கிரக தோஷங்கள் உள்ளவர்களும் இத்தலத்தி்ல் வீற்றுள்ள தட்சிணாமூர்த்தியையும் வணங்கிட அவை நிவர்த்தியடையும்.

தான் செய்த கர்ம வினைகளால் அவதிப்படுவோர் இங்குள்ள தல விருட்சத்தினையும், வேண்டும் வரம் கிடைத்திட எண்ணுவோர் லிங்கோத்பவரையும் வணங்கி வர சரியாகும்.

நேர்த்திக்கடன்:

இத்தலத்தில் சுவாமியை வணங்கி, வேண்டும் வரம் கிட்டியவர்கள் காசி லிங்கத்திற்கு வில்வ இ‌லைகளைக் கொண்டு அர்ச்சனை செய்து, அபிசேகமும், பெரியநாயகி அம்மனுக்‌கு புடவையும் சாத்துகின்றனர். தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகமும், எண்திசைக்கிணற்றின் அருகே உள்ள நெய்கொட்டா மரத்தில் சிறப்பு வழிபாடும் செய்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *