கைலாசநாதர் கோயில், ஸ்ரீவைகுண்டம்

அருள்மிகு கைலாசநாதர் கோயில், ஸ்ரீவைகுண்டம், திருநெல்வேலி மாவட்டம் .

+91- 4630 – 256 492.

காலை 6 மணி முதல் 12 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கைலாசநாதர்
அம்மன் சிவகாமி
தீர்த்தம் தாமிரபரணி
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் ஸ்ரீவைகுண்டம்
மாவட்டம் திருநெல்வேலி
மாநிலம் தமிழ்நாடு

உரோமசர் தாமிரபரணியில் மிதக்க விட்ட மலர்களில் ஆறாவது மலர் கரை ஒதுங்கிய தலம் இது. இங்கு ஒரு இலிங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. இவர் கைலாசநாதர் எனப்பட்டார். சனிபகவானின் அம்சத்துடன் காட்சி தரும் இவர், சிவகாமி அம்பாளுடன் உள்ளார். சிவன் சன்னதி எதிரிலுள்ள நந்தியை சுற்றிலும் 108 விளக்குகள் உள்ளது. இந்த விளக்குகளை ஏற்றி சுவாமியை வழிபட்டால் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை.

அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைந்த இக்கோயிலில், நவ கைலாய தலங்கள் உருவாவதற்கு காரணமாக இருந்த உரோமச முனிவர், மற்றும் நடராஜர், அக்னிபத்திரர், வீரபத்திரர் ஆகியோரின் சிற்பங்கள் தூண்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் காசி விஸ்வநாதர், விசாலாட்சி ஆகியோரும் காட்சி தருகின்றனர். இங்குள்ள கொடிமரம் கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோயிலில் இருந்து கொண்டு வரப்பட்டதாகும். இத்தலத்திலுள்ள நடராஜரை சந்தன சபாபதி என அழைக்கின்றனர்.

இக்கோயிலில் சனீஸ்வரருக்கு தனிச்சன்னதி இருக்கிறது. சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கைலாசநாதருக்கும், சனிக்கும் விசேஷ பூஜை செய்து வேண்டிக்கொள்கிறார்கள். சனி தசையால் பாதிக்கப் பட்டுள்ளவர்கள் இங்கு பரிகாரம் செய்துகொண்டால் தடைபட்ட திருமணங்கள் நடக்கும். இழந்த சொத்துக்களை மீண்டும் பெறலாம் என்பது நம்பிக்கை. இக்கோயில் திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலுக்கு ஈடானதாகச் சொல்கிறார்கள். சனிப்பெயர்ச்சியின்போது பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள், இங்கு வேண்டிக்கொண்டால் சனியின் உக்கிரம் குறையும் என்பது நம்பிக்கை.

திருமாலும், திருமகளும் இத்தலத்தில் தங்கியிருப்பதாக ஐதீகம். எனவே இத்தலம் ஸ்ரீவைகுண்டம்என்றழைக்கப்படுகிறது. “வைகுதல்என்றால் தங்குதல்என பொருள். இவ்வூரிலேயே 108 திருப்பதிகளில் ஒன்றான, கள்ளபிரான் கோயிலும் அமைந்துள்ளது. இது நவதிருப்பதிகளில் சூரியனுக்குரிய தலமாகும். ஒரே ஊரில் நவகைலாயமும், நவதிருப்பதியும் அமைந்துள்ளது விசேஷம். ஊமையாகப் பிறந்து, திருச்செந்தூர் முருகன் அருளால் பேசும் சக்தி பெற்ற, குமரகுருபர சுவாமிகள் இவ்வூரில்தான் அவதரித்தார்.

இந்த கோயிலில் உள்ள பூதநாதர் என்ற காவல் தெய்வத்தின் சிலை மிகவும் விசேஷமானது. இது மரத்தால் செய்யப்பட்டது. சித்திரைத் திருவிழாவின்போது, முதலில் இவருக்கே முதல் மரியாதை செய்யப்படுகிறது. இவர் சாஸ்தாவின் அம்சமாக கருதப்படுகிறார். 3ம் நாள் விழாவின்போது, இவர் மீது சுவாமி எழுந்தருளுகிறார். இவருக்கு புட்டு, சர்க்கரைப்பொங்கல், புளியோதரை ஆகியவை நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. இவருக்கு அபிஷேகம் கிடையாது. சந்தனாதி தைலம் மட்டுமே தடவுகின்றனர். இவருக்கு வடைமாலை சாத்தி வழிபடுவது விசேஷம்.

முற்காலத்தில் இக்கோயிலை பூட்டி சாவியை அர்ச்சகர்கள், பூதநாதர் முன்பாகவே ஒப்படைத்துவிட்டு சென்றார்கள். இவரை மீறி யாரும் உள்ளே நுழைய முடியாது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இவ்வாறு செய்தனர்.

திருவிழா:

சித்திரை, ஐப்பசியில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம், ஆறாட்டுவிழா, ஐப்பசி திருக்கல்யாணம், கந்தசஷ்டி, சிவராத்திரி.

கோரிக்கைகள்:

ஜாதகரீதியாக சனி தோஷம் உள்ளவர்கள், சனிப்பெயர்ச்சியால் பரிகாரம் செய்ய வேண்டிய ராசியினர் இங்கு கைலாசநாதரிடம் வேண்டிக் கொள்கிறார்கள். இழந்த சொத்துக்களைப் பெறவும், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகவும் பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *