கைலாசநாதர் திருக்கோயில், கோவளம்

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், கோவளம், காஞ்சிபுரம் மாவட்டம்.

+91- 44- 2747 2235, 98403 64782

காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கைலாசநாதர்
அம்மன் கனகவல்லி
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் கோவளம்
மாவட்டம் காஞ்சிபுரம்
மாநிலம் தமிழ்நாடு

இப்பகுதியில் வசித்த கடல் வணிகர்கள் பயணத்தின்போது பாதுகாப்பாக இருக்கவும், தொழில் சிறக்கவும் சிவபெருமானுக்கு ஒரு கோயில் எழுப்பினர். காலப்போக்கில் கடல் சீற்றத்தால் கோயில் மறைந்துவிட்டது. பிற்காலத்தில் இப்பகுதியை ஆட்சி செய்த சிவபக்தனான பல்லவ மன்னன், சிவனுக்கு கோயில் எழுப்பும் ஆயத்தப்பணிகளை துவங்கினான். அவனது கனவில் தோன்றிய சிவன், அழிந்து போன கோயிலின் இலிங்கம் ஓரிடத்தில் மறைந்திருப்பதைச் சுட்டிக்காட்டினார். மன்னன் இலிங்கத்தைக் கண்டெடுத்து கோயில் எழுப்பி அங்கு பிரதிஷ்டை செய்தான். சுவாமிக்கு கைலாசநாதர் என பெயர் ஏற்பட்டது.

வங்காள விரிகுடா கடலின் கரையில் அமைந்த கோயில் இது. இலிங்கத்தின் ஆவுடையாரில் கோயில் குறித்த செய்திக் குறிப்பை கல்வெட்டாக பொறித்துள்ளனர். பவுர்ணமி நாட்களில் சிவன், அம்பிகைக்கு விசேஷ அபிஷேகம் நடக்கும். முன்னோர்களுக்கு முறையாக தர்ப்பணம் செய்யாதவர்கள், பிதுர்தோஷ நிவர்த்திக்காக அமாவாசையன்று கடலில் நீராடி சுவாமியை வழிபடுகிறார்கள். புரட்டாசி மகாளய அமாவாசையன்று இந்த வழிபாட்டைச் செய்வது மேலும் சிறப்பு.

பிரகாரத்தில் குபேர கணபதி வடக்கு (குபேரதிசை) நோக்கி காட்சியளிக்கிறார். மற்றொரு சன்னதியில் விஜய கணபதி இருக்கிறார். தேர்வில் அதிக மதிப்பெண் பெறவும், தொழிலில் வெற்றியடைவும் இவரை வேண்டுகின்றனர். சிவன் சன்னதி கோஷ்டத்தில் சிவசக்தி கணபதி இருக்கிறார். விநாயகர் சதுர்த்தியன்று மூவருக்கும் விசேஷ பூஜை நடக்கும். இந்நாளில் இவர்களை வழிபட்டு வர குடும்பத்தில் ஐஸ்வர்யம் கிடைக்கும்.

இத்தலத்து அம்பிகை பொன்னைப்போல மின்னுபவளாகவும், தம்மை வழிபடும் பக்தர்களுக்கு பொன் போன்ற வாழ்க்கையைத் தருபவளாகவும் அருளுவதால் கனகவல்லி (கனகம்தங்கம்) என்ற பெயரில் அருளுகிறாள். திருமணமாகாத பெண்கள் மாங்கல்ய பாக்கியம் கிடைக்க இவளிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இந்த வழிபாட்டைச் செய்யும் பெண்கள் சுவாமிக்கும், அம்பாளுக்கும் மாலை அணிவித்த பின்பு, அம்பாள் சன்னதிக்குள் சென்று, தாலி அணிவித்து நல்ல மணமகன் அமைய வேண்டுமென பிரார்த்திக்கின்றனர்.

திருமணமாகாத ஆண்கள், சிவன் சன்னதி எதிரேயுள்ள நந்தீஸ்வரருக்கு தாலி அணிவித்து வேண்டிக்கொள்கின்றனர். செவ்வாய் தோஷத்தால் திருமணத்தடை உள்ளவர்கள் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். சுவாமி சன்னதி கோஷ்டத்தில் (சுற்றுச்சுவர்) சத்தியநாராயணர் சங்கு சக்கரத்துடன் காட்சி தருகிறார். பவுர்ணமி நாட்களில் இவருக்கு சுமங்கலி பூஜை நடக்கும். பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருக்க இவ்வேளையில் சத்யநாராயணரை வழிபடுகிறார்கள்.

இங்குள்ள மண்டபத்தில் பூமாதேவியுடன் வெங்கடேசர், சூரியன், மகாலிங்கம், மகாகாளி, நாகாத்தம்மன், சுவர்ண பைரவர் உள்ளனர். தூண்களில் ராமாயண கதாபாத்திர சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. மார்க்கண்டேயருக்கு அருள்புரிய, எமனை சிவன் காலால் உதைக்கும் சிற்பத்தை ஆயுள் அதிகரிக்க வேண்டுகின்றனர்.

திருவிழா:

திருக்கார்த்திகை, மகா சிவராத்திரி, பிரதோஷம். இது தவிர பவுர்ணமி நாட்களில் சிவன், அம்பிகைக்கு விசேஷ அபிஷேகம் நடக்கும்.

கோரிக்கைகள்:

தேர்வில் அதிக மதிப்பெண் பெறவும், தொழிலில் வெற்றியடைவும் இவரை வேண்டுகின்றனர். குடும்பத்தில் ஐஸ்வர்யம் கிடைக்க இங்கு வழிபடுகின்றனர்.

நேர்த்திக்கடன்:

திருமணத்தடை உள்ள பெண்கள், அம்பாள் சன்னதிக்குள் சென்று, தங்கள் கையாலேயே தாலி அணிவிக்கும் வித்தியாசமான வழக்கம், இங்குள்ளது. முன்னோர்களுக்கு முறையாக தர்ப்பணம் செய்யாதவர்கள், பிதுர்தோஷ நிவர்த்திக்காக அமாவாசையன்று கடலில் நீராடி சுவாமியை வழிபடுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *