காமீஸ்வரர் திருக்கோயில், வில்லியனூர்

அருள்மிகு கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் திருக்கோயில், வில்லியனூர், புதுச்சேரி

+91-413-266 6396

காலை 6 மணி முதல் 12 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் திருக்காமீஸ்வரர் (காமேஸ்வரர், மிரமீஸ்வரர், நரசிங்கநாதர், நடுவழிநாதர், வைத்திய நாதர், வில்வனேசர் )
அம்மன் கோகிலாம்பிகை(குயிலம்மை, முத்தம்மை)
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் பிரம்ம தீர்த்தம், ஹிருத்தாப நாசினி
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் வில்வநல்லூர்
ஊர் வில்லியனூர்
மாவட்டம் புதுச்சேரி
மாநிலம் புதுச்சேரி

முன்னொரு காலத்தில் பிரம்மனுக்கும், விஷ்ணுவுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது. இதனால் இருவரும் சிவனிடம் சென்று முறையிட்டனர். சிவன், தனது அடியையும் முடியையும் யார் முதலில் தரிசிக்கிறார்களோ அவரே பெரியவர் என்று கூறினார். இதில் பிரம்மன் செய்த தவறால் அவருக்கு சாபம் ஏற்பட்டது. வருத்தப்பட்ட பிரம்மன் சிவனிடம் தனது பாவத்தை போக்கும்படி வேண்டினார். சிவனும்,”தொண்டை நாட்டில் முத்தாறு நதிக்கரையில் வில்வ வனம் படைத்து சிவ பூஜை செய்தால் சாபம் நீங்கும்எனக் கூறி மறைந்தார். பிரம்மனும் சிவன் கூறியபடி பிரம்ம தீர்த்தம் உண்டாக்கி இத்தலத்தில் சிவ பூஜை செய்து சாபத்திலிருந்து விடுபட்டார்.

பொதுவாகக் கோயில்களில் தீபாராதனையின் போது மந்திரம் கூறி தீபாராதனை காட்டுவார்கள். இந்த மந்திரத்தில் காமேஸ்வரோஎன்ற வார்த்தை வரும். இவரைத் தரிசிக்க வேண்டுமானால் புதுச்சேரி அருகிலுள்ள வில்லியனூர் கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரர் கோயிலுக்குச் செல்ல வேண்டும். எந்தக்கோயிலில் இறைவனை வழிபட்டாலும் அதில் காமேஸ்வரரின் திருநாமம் உச்சரிக்கப்படும்.

சோழநாட்டில் கமலாபுரி என்ற நகரைத் தருமபால சோழன் ஆண்டு வந்தான். இவனது முன்ஜென்மப் பயனால் வெண்குட்டம் ஏற்பட்டது. இந்த நோய் நீங்க, இத்தலக் குளத்தில் நீராடி, சிவனை வழிபட்டு குணம் பெற்றான். எனவே வில்வவனமாக இருந்த இங்கு ஒரு நகரை உருவாக்கி, சிவனுக்கு கோயில் கட்டி வில்வநல்லூர் என பெயரிட்டான். இதுவே காலப்போக்கில் வில்லியனூர் ஆனது. தேவாரத்தில் இத்தலம் வைப்புத்தலமாக விளங்குகிறது.

இத்தலத்தின் மற்றொரு சிறப்பம்சம் பிரசவ நந்தி இங்கு உள்ளார். பொதுவாக, சிவாலயங்களில் உள்ள அம்மனின் முன்பு அம்மனை நோக்கி நந்தி அமர்ந்திருக்கும். இத்தலத்திலும் அதே போல் இருந்தாலும் அந்த நந்திக்கு முன்பு ஒரு சிறிய நந்தியும் இருக்கிறது. இதுவே பிரசவ நந்தியாகும். இங்குள்ள பைரவர் நாய் வாகனம் இல்லாமல் அருள்பாலிப்பதால் இத்தலம் முக்தி தலமாக விளங்குகிறது. உயரமான தேரும் இங்குள்ளது.

சுயம்பு மூர்த்தியான இத் தல இறைவனை பங்குனி 9, 11, 19ல் சூரியபகவான் ஒளிக் கற்றை வீசி வணங்குகிறார். இத்தல இறைவனை பிரம்மன், நரசிம்மன், இந்திரன், சூரியன், ஆதிசேடன், மன்மதன், சந்திரன், தருமபாலன், சகலாங்க சவுந்தரி, கோவிந்தன் ஆகியோர் பூஜித்துள்ளனர். பிரம்மனுக்கும், திருமாலுக்கும் சிவபெருமான் ஞாயிறு பவுர்ணமி தினத்தில் காட்சி கொடுத்தார். எனவேதான் இன்றும் கூட ஞாயிற்றுக் கிழமைகளில் வரும் பவுர்ணமியில் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் வேண்டியது கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஆடிப்பூரத்தில் இத்தல அம்மனுக்கு பிரம்மோற்சவம் நடக்கிறது.

திருவிழா:

சித்ரா பவுர்ணமி, வைகாசி சுவாதி பிரம்மோற்சவம், தேர்த்திருவிழா. ஆனித் திருமஞ்சனம். ஆடிப்பூரத்தில் அம்மனுக்கு பிரம்மோற்சவம், ஐப்பசி கந்தசஷ்டி, அன்னாபிஷேகம். கார்த்திகை லட்ச தீபம்.

கோரிக்கைகள்:

குஷ்ட நோயால் பாதிக்கப் பட்டவர்கள் இத் தல தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட்டால் குணமடையும் என்பது நம்பிக்கை. திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், சுகப்பிரசவம் வேண்டுபவர்களும் பிரசவ நந்தியிடம் வேண்டிக் கொண்டு அந்த நந்தியை, தங்கள் வீடு இருக்கும் திசை நோக்கி மாற்றி வைக்கின்றனர். தங்களது கோரிக்கை நிறைவேறியதும் பூஜை செய்து நந்தியை மீண்டும் திசை மாற்றி வைக்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *