இளமையாக்கினார் கோயில், சிதம்பரம்

அருள்மிகு இளமையாக்கினார் கோயில், சிதம்பரம், கடலூர் மாவட்டம்.

+91 4144 – 220 500, 94426 12650

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் திருப்புலீஸ்வரர்
அம்மன் திரிபுரசுந்தரி
தல விருட்சம் தில்லை மரம்
தீர்த்தம் இளமை தீர்த்தம்
ஆகமம் காமீகம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருப்புலீஸ்வரம்
ஊர் சிதம்பரம்
மாவட்டம் கடலூர்
மாநிலம் தமிழ்நாடு

சிவபெருமானின் நாட்டிய தரிசனம் காண விரும்பிய வியாக்ரபாதர், சிதம்பரம் வந்தார். இங்கிருந்த தீர்த்தக்கரையில் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, குடில் அமைத்து தவமிருந்தார். வியாக்ரபாதர், சிவனருளால் புலிக்கால் பெற்ற முனிவராவார். இவர் பூஜித்ததால் சிவனுக்கு திருப்புலீஸ்வரர்என்றும், சிதம்பரத்திற்கு திருப்புலீஸ்வரம்என்றும் பெயர் ஏற்பட்டது.

திருநீலகண்டர் என்பது சிவனின் ஒரு பெயர். இவ்வூரில் மண்பாண்டத் தொழில் செய்த சிவபக்தர் ஒருவர், எப்போதும் இந்த பெயரை உச்சரித்து சிவனை வணங்கிக் கொண்டிருப்பார். இதனால், அவருக்கு இப்பெயரே அமைந்துவிட்டது. இவரும், மனைவி ரத்னாசலையும் சிவனடியார்களுக்கு திருவோடு செய்து தருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஒருசமயம் நீலகண்டர் வேறொரு பெண் வீட்டிற்கு சென்று வரவே, அவரது மனைவி என்னை இனி தொடவே கூடாது. இது திருநீலகண்டத்தின் (சிவன்) மீது ஆணை

என்றாள். சிவன் மீது கொண்ட பக்தியால், அவர் மீதான சத்தியத்திற்குக் கட்டுப்பட்டார் நீலகண்டர். மனைவியைத் தொடாமலேயே பல்லாண்டுகள் வாழ்ந்தார். இவரது பக்தியை உலகறியச் செய்வதற்காக சிவன், ஒரு அடியவர் வடிவில் நீலகண்டரிடம் சென்று ஒரு திருவோடைக் கொடுத்தார். “இது விலைமதிப்பற்றது. நான் காசி சென்று திரும்பி வந்து வாங்கிக்கொள்கிறேன்!” என்று சொல்லிச் சென்றார். சிறிது நாள் கழித்து வந்து திருவோட்டைக் கேட்டார். நீலகண்டர் ஓடு இருந்த இடத்தில் பார்த்தபோது திருவோட்டைக் காணவில்லை. வருந்திய நீலகண்டர் தன்னை மன்னிக்கும்படி வேண்டினார். அதை சிவனடியாராக வந்த சிவன் ஒப்புக்கொள்ளவில்லை. மனைவியுடன் தீர்த்தக்குளத்தில் மூழ்கி திருவோடு தொலைந்துவிட்டது என தில்லைவாழ் அந்தணர்கள் முன்னிலையில் சத்தியம் செய்து தரும்படி கேட்டார். மனைவியுடனான பிரச்னையை சொல்ல முடியாதவர், ஒரு குச்சியின் ஒரு பக்கத்தைப் பிடித்துக் கொண்டு, மறு முனையை மனைவியைப் பிடிக்கச் சொல்லிக் குளத்தில் இறங்குவதாகச் சொன்னார். சபையினர் ஒப்புக்கொள்ளவே அவ்வாறு செய்தார். அப்போது, அடியாராக வந்த சிவன், ரிஷபத்தின்மீது அம்பிகையுடன் காட்சி தந்தார். திருநீலகண்டர் தம்பதிக்கு முதுமை நீக்கி, இளமையைக் கொடுத்தார். நீலகண்டரை நாயன்மார்களில் ஒருவராக்கினார். இதனால், சுவாமிக்கும் இளமையாக்கினார் என்ற பெயர் ஏற்பட்டது. தில்லைவாழ் அந்தணர்களுக்கு அடுத்து, இவரே முதல் நாயனாராக போற்றப்படுகிறார்.

பக்தர் ஒருவர் ஒவ்வொரு சிவன் கோயில்களுக்கும் சென்று, விளக்கேற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவரது பக்தியை சோதிப்பதற்காக சிவன், வறுமையை உண்டாக்கினார். தன் சொத்துக்களை விற்றும் தன் பணியைத் தொடர்ந்தவர், ஒரு கட்டத்தில் திரி வாங்கவும், வழியில்லாமல் கணம்புல்லைத் திரியாக்கி, இத்தலத்தில் தீபமேற்றி சிவனை வழிபட்டார். இதனால் இவருக்கு கணம்புல்லர்என்ற பெயர் ஏற்பட்டது. இவரது பக்தியை மெச்சிய சிவன், நாயன்மார்களில் ஒருவராகும் அந்தஸ்தையும் கொடுத்தார். திருக்கார்த்திகையன்று இவரது குருபூஜை நடக்கும்.
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு மேற்கு திசையில் அமைந்த கோயில் இது. கோயில் எதிரே இளமை தீர்த்தம் உள்ளது. தை மாதம் விசாகம் நட்சத்திரத்தில் திருநீலகண்டருக்கு சிவன் அருள் செய்த விழா நடக்கும். இவ்விழாவில் சிவன் யோகி வடிவில் நீலகண்டருக்கு ஓடு கொடுத்தல், தீர்த்தக்கரையில் சத்தியம் கேட்கும் வைபவம் விசேஷமாக நடக்கும். சிவன் சன்னதி எதிரே நந்திக்கு அருகில் வியாக்ரபாதர் நின்று வணங்கியபடி இருக்கிறார். தவிர பிரகாரத்திலும் இவருக்கு சன்னதி உள்ளது. தைப்பூசத்தன்று இவரது திருநட்சத்திர விழா நடக்கும். அன்று இவர் இளமை தீர்த்தத்திற்கு எழுந்தருளி தீர்த்தவாரி காண்பார். பிரகாரத்தில் மனைவி ரத்னாசலையுடன் திருநீலகண்டர், கணம்புல்ல நாயனார் சன்னதிகள் உள்ளன. விசாகம் நட்சத்திர நாட்களில் திருநீலகண்டருக்கும், கிருத்திகையன்று கணம்புல்லருக்கும் விசேஷத் திருமஞ்சனம் உண்டு. தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு விசேஷ ஹோமத்துடன் பூஜை நடக்கும்.

பிரகாரத்தில் கணபதி, வள்ளி தெய்வானையுடன் முருகன், தட்சிணாமூர்த்தி, கஜலட்சுமி, சரஸ்வதி, பிரம்மா, நந்தி ஆகியோர் உள்ளனர்.

திருவிழா:

நவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிஷேகம், சிவராத்திரி, திருக்கார்த்திகை

கோரிக்கைகள் :

பிரச்சனையால் பிரிந்துள்ள தம்பதியர், தங்களுக்குள் கருத்து ஒற்றுமை இல்லாதோரும், ஒற்றுமையாக இருக்க இங்கு வழிபாடு செய்யப்படுகிறது.

நேர்த்திக்கடன் :

பிரார்த்தனை நிறைவேறியவுடன் நெய் தீபமேற்றி, சிவனுக்கு அபிஷேகம் செய்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *