எமனேஸ்வரமுடையார் திருக்கோயில், எமனேஸ்வரம் – பரமக்குடி

அருள்மிகு எமனேஸ்வரமுடையார் திருக்கோயில், எமனேஸ்வரம்பரமக்குடி, ராமநாதபுரம் மாவட்டம்.

+91- 94860 13533

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் எமனேஸ்வரமுடையார்
உற்சவர் பிரதோஷநாயனார்
அம்மன் சொர்ணகுஜாம்பிகை
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் எமதீர்த்தம்
ஆகமம் சிவாகமம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் எமனேஸ்வரம்
ஊர் பரமக்குடி
மாவட்டம் ராமநாதபுரம்
மாநிலம் தமிழ்நாடு

சிவபக்தனான மார்க்கண்டேயர், அற்ப ஆயுளில் உயிர் பிரியும்படியான வரம் பெற்றிருந்தார். அவரது இறுதிக்காலத்தில் எமதர்மன், அவரது உயிரை எடுக்க வந்தார். அப்போது மார்க்கண்டேயர், சிவத்தலங்களுக்கு யாத்திரை சென்றார்.

திருக்கடையூர் தலத்திற்கு அவர் சென்றபோது, எமன் பாசக்கயிறை வீசினான். அவ்வேளையில் அவர், சிவபெருமானை தழுவிக்கொள்ளவே பாசக்கயிறு லிங்கத்தின் மீது விழுந்தது. பணியை சரியாக செய்யாத எமதர்மனை, சிவபெருமான் இடது காலால் எட்டி உதைத்தார்.

தவறை உணர்ந்த எமன், தான் விழுந்த இடத்தில் ஒரு இலிங்கத்தை ஸ்தாபித்து, தவறுக்கு மன்னிப்பு வேண்டி வழிபட்டார். அதன்பின்பு சிவன், அவருக்கு மீண்டும் பதவியைக் கொடுத்தார். பின்பு எமன் வேண்டுதலுக்காக இங்கேயே எழுந்தருளினார். எமனின் பெயரால் எமனேஸ்வரமுடையார்என்றும் அழைக்கப்பட்டார்.

முன்மண்டபத்தில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் இருக்கின்றனர்.

பிரகாரத்தில் மல்லிகார்ஜுனேஸ்வரர், நாய் வாகனம் இல்லாத கால பைரவர் மற்றும் நவக்கிரக சன்னதிகள் இருக்கிறது.

திருக்கடையூரில் எமனை சம்ஹாரம் செய்த காலசம்ஹாரமூர்த்தியாக அருளும் சிவன், இத்தலத்தில் அனுக்கிரமூர்த்தியாக இந்திர விமானத்தின் கீழ் காட்சி தருகிறார்.

ஆயுள் விருத்தி பெறவும், சனிதோஷம் நீங்கவும் இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இங்கு ஆயுஷ்ய ஹோமம், அறுபது, எண்பதாம் திருமணம் செய்துகொண்டால் ஆயுள் நீடிக்கும் என்பது நம்பிக்கை. மாசிமகத்தன்று சிவனின் அம்சமான, முருகனே அவரது சார்பில் தீர்த்தத்திற்கு எழுந்தருளுகிறார். கார்த்திகை கடைசி திங்கள் கிழமையன்று இவருக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

இத்தலத்தின் தலவிநாயகர்: ராஜகணபதி

அம்பாள் சொர்ணகுஜாம்பிகை இரண்டு கரங்களுடன் தனிச்சன்னதியில் இருக்கிறாள். திருமண, புத்திரதோஷம் உள்ளவர்கள் இவளது சன்னதியில் தாலி, வளையல் கட்டி வேண்டிக்கொள்கிறார்கள். இதனால் தோஷம் நிவர்த்தியவதாக நம்பிக்கை.

திருவிழா:

மார்கழி திருவாதிரை, நவராத்திரி, கந்தசஷ்டி, திருக்கார்த்திகை,மாசிமகம், சிவராத்திரி.

மார்கழியில் பைரவாஷ்டமி, புரட்டாசியில் துர்க்காஷ்டமியன்று பைரவருக்கு விசேஷ ஹோமம் மற்றும் பூஜைகள் நடக்கிறது.

கோரிக்கைகள்:

இழந்த பதவி, செல்வங்களை மீட்க எமனேஸ்வரமுடையாரையும், பிணி நீங்க பைரவரையும் வழிபடுகிறார்கள்.

நேர்த்திக்கடன் :

வேண்டுதல் நிறைவேறியவர்கள் சுவாமிக்கு ருத்ரஹோமம் மற்றும் விசேஷ பூஜை செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

வழிகாட்டி :

பரமக்குடியில் இருந்து இளையான்குடி செல்லும் வழியில், 2 கி.மீ., தூரத்தில் எமனேஸ்வரம் உள்ளது. கண்மாய்க்கரை ஸ்டாப்பில் இறங்கி, கோயிலுக்கு நடந்து சென்று விடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *