அம்மநாதர் திருக்கோயில், சேரன்மகாதேவி

அருள்மிகு அம்மநாதர் திருக்கோயில், சேரன்மகாதேவி, திருநெல்வேலி மாவட்டம்

+91- 4634 – 265 111, +91- 94422 26511.

காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் அம்மநாதர்(அம்மையப்பர்)
அம்மன் ஆவுடைநாயகி(கோமதியம்பாள்)
தல விருட்சம் பலா மரம்
தீர்த்தம் தாமிரபரணி
ஆகமம் சிவாகமம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் சேரன்மகாதேவி
மாவட்டம் திருநெல்வேலி
மாநிலம் தமிழ்நாடு

சிவதரிசனம் பெற விரும்பிய உரோமச முனிவர், அகத்தியரின் ஆலோசனைப்படி தாமிரபரணி நதியில் ஒன்பது மலர்களை இட்டார். அதில் இரண்டாவது மலர் இத்தலத்தில் கரை ஒதுங்கியது. இங்கு, உரோமசர் இலிங்கப் பிரதிஷ்டை செய்து சிவனை வழிபட்டார்.

பிற்காலத்தில், அந்த லிங்கம் ஒரு அரசமரத்தின் கீழ் இருந்தது. இப்பகுதியில் வசித்த சகோதரிகளான சிவபக்தைகள் இருவர், நெல்குத்தி, அரிசி வியாபாரம் செய்து வந்தனர். தினமும் இத்தல இலிங்கத்திற்கு பூசை செய்து வணங்கிய பின்பே, தங்கள் வேலையை துவங்குவர்.

வெகுநாளாக ஒரு ஆதங்கம் அவர்களை வாட்டியது. இந்த இலிங்கம், கோயிலில் இல்லாமல், மரத்தடியில் யாராலும் கவனிக்கப்படாமலேயே இருக்கிறதே என்று! எனவே, சிவனுக்கு கோயில் கட்ட நினைத்தனர் அவர்கள். ஆனால், ஏழைகளான அவர்களிடம் கோயில் கட்டுமளவிற்கு பணம் இல்லை. அவர்கள் தங்களது உழைப்பின்மூலம் கிடைக்கும் பணத்தை சிறுகச்சிறுக சேர்த்து வைத்தனர்.

அவர்களது பக்தியில் மகிழ்ந்தார் சிவன்.

ஒருசமயம், அடியார் வடிவில் அப்பெண்களின் வீட்டிற்கு சென்றார். அவரை வரவேற்ற சகோதரிகள் உபசரித்து, உணவு பரிமாறினர். அப்போது வீட்டில் விளக்கு எரியவில்லை. அதை சுட்டிக்காட்டிய அவர், “விளக்கு எரியாத வீட்டில் எவ்வாறு பிரகாசம் இருப்பதில்லையோ, அதைப்போலவே மங்களமும் இருப்பதில்லை. எனவே, மங்களம் இல்லாத இவ்வீட்டில் நான் சாப்பிடமாட்டேன்என்று எழுந்தார். பதறிப்போய்விட்டனர் சகோதரிகள். அவசரத்தில் தேடியபோது, விளக்கு இருந்த இடத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, சமையலுக்கு வைத்திருந்த தேங்காயை உடைத்து அதில் நெய்விட்டு, விளக்கேற்றினர்.

மகிழ்ந்த சிவனடியார் சாப்பிட்டுவிட்டு, சுயரூபத்தில் காட்சி தந்தார். சகோதரிகள் சிவனை வணங்கினர். அதன்பின்பு அவர்களது இல்லத்தில் செல்வம் பெருகியது. அதைக்கொண்டு இங்கு கோயில் எழுப்பினர்.

தாமிரபரணி நதியின் தென்கரையில் அமைந்துள்ள இத்தலத்தில் சிவன், சந்திர அம்சத்துடன் காட்சி தருகிறார். கோயிலுக்கு அருகிலேயே தாமிரபரணி ஓடுகிறது. கிழக்கு நோக்கி அருளும் சிவனை, “அம்மநாதர்என்றும், “அம்மையப்பர்என்றும் அழைக்கிறார்கள். இவரது சன்னதிக்கு வலப்புறம் ஆவுடைநாயகி அருளுகிறாள். (மதுரை மீனாட்சி கோயில் போன்ற அமைப்பு).

இவளுக்கு கோமதியம்பாள் என்றும் பெயருண்டு. இந்த அமைப்பை சிவன், அம்பாளின் திருமணக்கோலம் என்பர். இக்கோயிலை நந்தனார் தரிசித்திருக்க வேண்டும். இவரது சிற்பம் கொடிமரத்திற்கு கீழேயுள்ள பீடத்தில் இருக்கிறது. இவர் இங்கிருந்து சுவாமியை வணங்கியபடி இருக்க, நந்தி சற்று விலகியிருக்கிறது. கொடிமரம் அருகில் நின்று விலகிய நந்தியையும், சிவனையும் தரிசிக்கலாம் என்பது விசேஷம்.

அரிசி வியாபாரிகள் தங்கள் வியாபாரம் செழிக்க, இங்கு வந்து அரிசிதானம், அன்னதானம் செய்கின்றனர். திருமண தோசம் உள்ளவர்கள், மாதுளம் பழச்சாறு அபிசேகம் செய்து, அம்பாள் சன்னதி முன்பு தட்டில் அரிசியை பரப்பி, அதன் மத்தியில் உடைத்த தேங்காயில் நெய் விட்டு தீபம் ஏற்றுகின்றனர். பலா மரம் இத்தலத்தின் தலவிருட்சம். இக்கோயிலைக் கட்டிய சகோதரிகள் நெல் குத்தி, அரிசி புடைக்கும் சிற்பம், முன்மண்டபத்திலுள்ள ஒரு தூணில் இருக்கிறது. அருகில் மற்றொரு தூணில் இலிங்கபூஜை செய்யும் உரோமசரைக் காணலாம்.

ஐந்து நிலை ராஜகோபுரம். பிரகாரத்தில் ஒரே கல்லில் செய்யப்பட்ட நடராஜரும், நாய் வாகனம் இல்லாத பைரவரும் இருக்கின்றனர். நவக்கிரக சன்னதி கிடையாது. சந்திரன், நுழைவு வாசலின் வலப்புறத்தில் இருக்கிறார். மகாவிஷ்ணு, காசி விசுவநாதர், விசாலாட்சி, சுப்பிரமணியர், கஜலட்சுமி, சனீஸ்வரர், நவகன்னிகள் ஆகியோரும் இருக்கின்றனர்.

இத்தலம் நவகைலாயங்களில் ஒன்று. கொடிமரம் அருகில் நின்று விலகிய நந்தியையும், சிவனையும் தரிசிக்கலாம் என்பது விசேஷம்.

திருவிழா: ஐப்பசி திருக்கல்யாணம்.

அரிசி வியாபாரிகள் சுவாமிக்கு அரிசி நேர்த்திக்கடன் செலுத்தி வேண்டிக்கொள்கிறார்கள். இதனால், வியாபாரம் செழிக்கும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *