அமணலிங்கேஸ்வரர் திருக்கோயில், தளி – திருமூர்த்தி மலை

அருள்மிகு அமணலிங்கேஸ்வரர் திருக்கோயில், தளி திருமூர்த்தி மலை, உடுமலைப்பேட்டை, கோயம்புத்தூர் மாவட்டம்.

+91-4252 – 265 440

காலை 6.30 மணியிலிருந்து மாலை 6.30 வரை தொடர்ச்சியாகக் கோயில் திறந்திருக்கும்.

மூலவர் பிரம்மா,திருமால்,சிவன் (மும்மூர்த்தி,திருமூர்த்தி)
உற்சவர் பிரம்மா,திருமால்,சிவன்
தல விருட்சம் அரச மரம்
தீர்த்தம் தோணி ஆறு
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் தளி திருமூர்த்தி மலை
மாவட்டம் கோயம்புத்தூர்
மாநிலம் தமிழ்நாடு

எல்லாம் வல்ல இறைவன் உறைகின்ற திருத்தலங்களில் இந்த திருமூர்த்தி மலை மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இத்தலத்தில் இறைவன் குழந்தை வடிவில் அருள்பாலிப்பதாக ஐதீகம். எனவே கேட்டதெல்லாம் கிடைக்கும். அகத்திய முனிவர் இறைவனின் திருமணக்கோலத்தை பொதிய மலையில் கண்டு களித்ததை மீண்டும் ஒரு முறை காண வேண்டி அதற்கான இடத்தை இறைவன் குறிப்பால் உணர்த்திய இடமே திருமூரத்தி மலை.

கைலாயத்தில் நடந்த இறைவனின் திருமண கோலத்தை அகத்தியர் கண்டு வணங்கிய இடமே பஞ்சலிங்கம்என வழங்கப்படுகிறது. கைலாயக் காட்சியை இறைவன் இங்கும் காட்டியதால் இத்தலம் தென் கைலாயம் என்றும் சிறப்பு பெறுகிறது.

மும்மூர்த்திகளே தமக்கு குழந்தையாக பிறக்க வேண்டும் என்பது அத்திரி முனிவரின் விருப்பம். இவரது விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டும், இவரது மனைவி அனுசூயையின் கற்பின் மகிமையை இந்த உலகிற்கு எடுத்துக்காட்ட விரும்பியும் பிரம்மா, திருமால், சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் இங்கு தோன்றினர்.

ஒரு முறை அத்திரி முனிவர் வெளியே சென்ற போது மும்மூர்த்திகளும் அனுசூயைத் தேடி வந்து தங்களுக்கு நிர்வாணமாகப் பிச்சையிடுமாறு வேண்டினர். அனுசூயையும் தன் கணவனை மனதால் நினைத்து தீர்த்தத்தை அவர்கள் மீது தெளிக்க மூவரும் குழந்தைகளாக மாறினர். பின் அந்த குழந்தைகளுக்கு நிர்வாணமாகப் பாலூட்டி அவர்கள் வேண்டுதலை நிறைவேற்றினார். இந்த நிகழ்ச்சி நடந்த தலமே திருமூர்த்தி மலை.

சிவனுக்கு மும்மூர்த்தி ஆண்டவர், திருமூர்த்தி ஆண்டவர், அமணலிங் கேசுவரர் என்ற திருநாமங்கள் உள்ளன. அத்திரி முனிவரின் மனைவி அம்மணமாக வந்து மும்மூர்த்திகளுக்கு உணவு அளித்த தலமாதலால் இத்தல இறைவன் அமண லிங்கேசுவரர் ஆனார். சந்தன வழிபாடு என்பது இங்கு சிறப்பு. இங்குள்ள மும்மூர்த்திகளுக்கு பக்தர்கள் சந்தனத்தை வாங்கி அவர்கள் மீது எறிந்து வழிபாடு செய்கிறார்கள். அப்படி சந்தனம் எறியும் போது மும்மூர்த்திகளின் நெற்றியில் சந்தனம் விழுந்தால் நாம் நினைத்த காரியம் உடனே நடக்கும் என்பது ஐதீகம். இங்கு சிவன் ஞான குருவாக விளங்குகிறார். எனவே இங்கு தட்சிணாமூர்த்தி வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

மலையின் மீது பஞ்ச லிங்கம் உள்ளது. அத்திரி முனிவரும் அவரது மனைவி அனுசுயாவும் தினமும் இந்த ஐந்து லிங்கங்களை வழிபட்டு வந்துள்ளார்கள். இன்னமும் அவர்கள் தினமும் இந்த பஞ்ச லிங்கத்தை வழிபடுவதாகக் கூறப்படுகிறது.

இங்குள்ள எட்டுக்கால் மண்டபத்தில் தான் மும்மூர்த்திகளும் வந்து தங்கியதாக கூறப்படுகிறது. இங்கு மும்மூர்த்திகளும் குழந்தையாக விளையாடிய போது அருகிலுள்ள கஞ்ச மலையிலிருந்த கல் ஒன்று உருண்டு வந்தது. அப்போது பட்டாரசி, தேவகன்னி, பத்மகன்னி, சிந்து கன்னி, அகஜாகன்னி, வனகன்னி, சுமதிகன்னி என்ற சப்த கன்னியர் ஏழு விரளி மஞ்சளை வைத்து உருண்டு வந்த கல்லை தடுத்து நிறுத்தி விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளை காப்பாற்றினர். அப்படி உருண்டு வந்த கல்லிலேயே மும்மூர்த்திகள் ஐக்கியமாகி விட்டனர். தடுத்து நிறுத்திய விரளி மஞ்சளிலேயே சப்த கன்னியர் ஐக்கியமாகி விட்டனர். இங்கு இந்த சப்த கன்னியருக்குத் தனி சன்னதி உண்டு.

தல விநாயகரின் திருநாமம் சுந்தர கணபதி. முருகனின் திருநாமம் பாலசுப்பிரமணியன், இத்தலத்தில் வாழ்ந்த முனிவர் அத்திரி முனிவர். இங்கு பிரம்மா, விஷ்ணு, சிவன் மும்மூர்த்திகளும் சிறிய குன்றில் சுயம்புவாக அருள்பாலிக்கின்றனர். இது ஒரு குடைவரைக்கோயிலாகும்.

மகா சிவராத்திரியன்று நான்கு கால பூஜை. இது தவிர ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை நாட்களில் சிறப்பு பூசை. வாரம் தோறும், ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 12-2.30 மணிவரை சிறப்பு பூஜை நடைபெறும். ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் விசேட பூஜை இங்கு சிறப்பு பெற்றது. ஆகஸ்ட் மாதத்தில் வருஷாபிஷேகம் நடைபெறும்.

குழந்தை இல்லாதவர்கள் இத்தலத்தில் நீராடி சப்த கன்னிமார்களை வழிபட்டு பின் மும்மூர்த்திகளை வழிபட்டால் குழந்தை நிச்சயம் என்பது ஐதீகம்.

குழந்தைப்பேறு இல்லாத பெண்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இங்குள்ள விநாயகர் கோயில் முன் உள்ள வரடிகல் என்ற கல்லின் அமர்ந்து அந்த கல்லின் மீது தேங்காய், பழம் வைத்து அந்த கல்லை இரு கைகளால் பிடித்து மனம் ஒன்றி வழிபட வேண்டும். அப்படி செய்யும் போது அந்த தேங்காய் பழத்தை அவர்கள் அறியாமல் தொட்டு விட்டால் குழந்தைப்பேறு நிச்சயம் எனக் கூறப்படுகிறது. திருமணம் ஆகாதவர்கள், இளைஞர்களின் சிறந்த படிப்பு, வேலை, மன நிம்மதி வேண்டுபவர்கள் இறைவனுக்கு தேங்காய், பழம் வைத்து வழிபட்டால் சிறந்த பலன் உண்டு என்பது நம்பிக்கை.

இது தவிர முகம் மற்றும் உடலில் மரு உள்ளவர்கள் இங்குள்ள தோணி ஆற்றில் நீராடி பின் அதில் உப்பு, மிளகு வாங்கி போட்டால் மரு நீங்கி விடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *