ஐராவதேஸ்வரர் திருக்கோயில், அத்திமுகம், ஓசூர்

அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோயில், அத்திமுகம், ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஐராவதேஸ்வரர், அழகேஸ்வரர்
அம்மன் காமாட்சி, அகிலாண்டேஸ்வரி
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் ஓசூர், அத்திமுகம்
மாவட்டம் கிருஷ்ணகிரி
மாநிலம் தமிழ்நாடு

விருத்தாசூரன் என்ற அரக்கன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் பெரும் துன்பத்தை விளைவித்து வந்தான். இதனால் வருத்தமுற்ற தேவர்கள் தேவர்களின் தலைவனான இந்திரனிடம் முறையிட்டனர். கோபம் கொண்ட இந்திரன் தனது வாகனமான ஐராவதத்துடன் சென்று விருத்தாசூரனுடன் போரிட்டு அவனை அழித்தான். இதனால் இந்திரனுக்கும் அவனது யானை ஐராவதத்திற்கும் பிரம்மகத்தி தோசம் பற்றிக்கொண்டது.

பிரம்மகத்தி தோசம் நீங்க அகத்திய நதிக்கரையில் சிவலிங்கம் பிரதிட்டை செய்து வழிபட வேண்டுமென அசரீரி கூறியது. இதையடுத்து இந்திரனும் ஐராவதமும் அகத்திய நதி ஓடும் இத்தலத்திற்கு வந்து சிவலிங்கம் பிரதிட்டை செய்து வழிபட்டு தோசம் நீங்கப் பெற்றனர்.

ஹஸ்தி என்றால் யானை. யானை இங்கு வந்து வழிபட்டதால் இத்தலத்திற்கு ஹஸ்திமுகம்என பெயர் வந்தது. இதுவே காலப்போக்கில் மருவி அத்திமுகம்என அழைக்கப்படுகிறது.

ஐராவத யானை இங்கு வழிபட்டதால் ஐராவத யானையின் முகம் சிவலிங்கத்தில் அமைந்துள்ளது. ஒரே கருவறையில் ஐராவதேஸ்வரரும் அவருக்கு பின்னால் காமாட்சி அம்மனும் நின்ற கோலத்திலும் அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள தெட்சிணாமூர்த்தி அகங்காரத்தை ஒழித்து ஞானத்தை வழங்குகிறார். எனவே தான் இவர் சம்கார தெட்சிணாமூர்த்திஎனப்படுகிறார்.

இங்கு இரண்டு மூலவர்கள் உள்ளனர். காமாட்சி உடனுறை ஐராவதேஸ்வரர் ஒரு கருவறையிலும், அகிலாண்டேஸ்வரி உடனுறை அழகேசுவரர் தனிக் கருவறையிலும் அருள்பாலிக்கிறார்கள்.

தென்மேற்கு மூலையில் மிகப்பெரிய பழமையான பாம்பு புற்று ஒன்று உள்ளது. ஆரம்பகாலத்தில் மணலால் ஆன இந்த புற்று காலப்போக்கில் இறுகிப் பாறையாக மாறியதிலிருந்தே இந்த புற்றின் பழமையை அறியலாம்.

இது ஒரு சூரிய பூஜைக்கோயில். தைமாதம் முதல் வாரத்தில் சூரியனின் கதிர்கள் இறைவனின் மீது பட்டு பூஜை நடக்கிறது. அப்போது சிவனின் முன்பாக எந்த இடையூறும் இல்லாமல் இருக்க நந்தி விலகி சூரிய பூஜை சிறப்பாக நடக்க வழி செய்துள்ளது. சூரியபூஜைக்காக நந்தியே விலகியிருப்பதால் நவக்கிரகங்களும் அமைதியாக அமர்ந்த நிலையில் உள்ளன. இது இக்கோயிலின் ஒரு சிறப்பான அம்சமாகும்.

சிவலிங்கத்தின் மீது உருவங்கள் பொறிக்கப்படுவது மிக அபூர்வம். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள குன்னத்தூர் நாகேஸ்வரர் சிலையில் பாம்பு உருவம் இருக்கும். அதுபோல கிருஷ்ணகிரி மாவட்டம் அத்திமுகத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயிலில் யானை உருவத்தைக் கொண்ட லிங்கத்தை தரிசிக்கலாம்.

வெளிபிரகாரத்தில் அட்சரமாலையுடன் கணபதி வடக்கு பார்த்து அருள்பாலிக்கிறார்.

ஒரே கோயிலில் இரண்டு மூலர்வர்கள் உள்ள கோயில். சூரிய பூஜைக்காக நந்தி விலகியிருக்கும் தலம் இது. தைமாதம் முதல் வாரத்தில் சூரியனின் கதிர்கள் இறைவனின் மீது விழுகிறது. ஐராவத யானை இங்கு வழிபட்டதால் ஐராவத யானையின் முகம் சிவலிங்கத்தில் அமைந்துள்ளது.

திருவிழா:

மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை

வேண்டுகோள்:

திருமணத்தடை நீங்க, குழந்தைச் செல்வம் பெற, கல்வியில் சிறந்து விளங்க, இறைவனை வேண்டிக்கொள்ளலாம்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *